பக்தர்கள் போற்றும் அமாவாசை கோயில்
சேலம் மாவட்டத்தின் இயற்கை எழில் சூழ்ந்த கஞ்சமலையில் இருக்கிறது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்ேதஸ்வர சுவாமி கோயில். கி.மு. 5ம் நூற்றாண்டு காலத்தில் உருவான இந்த கோயில், அழகிய விமானத்துடன் காட்சியளிக்கிறது. காலாங்கி சித்தர், திருமூலர் சன்னதி உள்ள மலை உச்சியில் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல பாதை இருக்கிறது. நடந்து மட்டுமே இந்த மலை உச்சிக்கு செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியை தவிர விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் மட்டுமே உள்ளது. மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. ‘ஞானசற்குரு பாலமுருகன்’ என இவரை அழைக்கின்றனர்.
காலாங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு. திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர். காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர். அவ்வாறு மூலிகை தேடி அலையும்போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்க சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்தபோது, அதை கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்து கிளறினார். அப்போது சோறு கருப்பாகி விட்டது.
‘குரு வந்தால் கோபிப்பாரே’ என்ற பயத்தில் சமைத்த சோறு முழுவதையும் காலாங்கி சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார்.
இதனால் அந்த ஊருக்கு இளம்பிள்ளை என்ற பெயர் வந்தது. இளம்பிள்ளையில் தங்கிய காலாங்கி சித்தர், சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து ‘சித்தேஸ்வரர்’ என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள்.
இக்கோயிலுக்கு அமாவாசையன்று அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் ‘அமாவாசை கோயில்’ என்ற பெயரும் இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள், அமாவாசையில் சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டுவது வழக்கமாக உள்ளது. கஞ்சம் என்றால் தாமரை. தாமரை வடிவில் இருப்பதால் கஞ்சமலை என்று அழைக்கப் படும் மலையில் பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ. சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர். இதனால் பவுர்ணமி கிரிவலத்திலும் பக்தர்கள் திரளாக பங்கேற்று சித்தேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment