பஞ்ச பூத தலங்களில் அக்னிக்கு உரிய தலமாக போற்றப்படுகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். அம்பிகையின் சக்தி பீடங்களில் அருணை பீடமாக விளங்குகிறது. இத்தலம், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலம். முக்தி தரும் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வோம். ஆனால் இத்தலத்தை நினைத்தாலே முக்தி தரும். எண்ணற்ற மகான்களும், ரிஷிகளும், முனிவர்களும் சூட்சும வடிவில் உலா வரும் திருத்தலம். திரு வாசக திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையைக் கொண்ட தலம் இது.
சமயக்குரவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என நால்வரும் இத்தலத்தின் மீது தேவார பதிகங்களைப் பாடியிருக்கிறார்கள். மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால் உலகப் புகழ்பெற்ற தலம். ஆறு ஆதாரத்தலங்களில் மணிபூராகத் தலமாக விளங்குகிறது. அருணகிரிநாதர் முக்தி அடைந்த தலம் இது. சைவத்தின் முதல் தலம்.
தல வரலாறு:
கயிலையில், ஈஸ்வரன் பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அப்போது, ஈஸ்வரனைக் காண வந்த பிருங்கி முனிவர், இருவரும் இணைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவருக்கு ஈசனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் வண்டு வடிவம் கொண்டு, ஈசனுக்கும் பார்வதிக்கும் இடை யில் நுழைந்து ஈசனை மட்டும் வணங்கினார்.
பார்வதி கோபமடைந்து பிருங்கி முனிவர் உள்ள சதை மற்றும் ரத்தம் நீங்கி சக்தியை இழக்குமாறு சாபமளித்தார்.தமது பக்தனின் நிலையைக் கண்டு வருந்திய ஈசன் முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலை அளித்தார். மகிழ்ந்த பிருங்கி முனிவர் ஈசனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.
எம்பெருமானின் மீது அதீத பக்தியைக் கொண்டிருக்கும் பிருங்கி முனிவரின் பக்தியைக் கண்டதும் ஈசனின் பாதி உருவை அடைய வேண்டும் என்று விரும்பிய பார்வதி, ஈசனை நினைத்து தவம் மேற்கொண்டாள். ஈசனும், பார்வதியின் அன்பில் கரைந்து, தமது உடலில் பாதியை பார்வதிக்கு தருவதாக ஒப்புக்கொண்டார். அப்படி இருவரும் இணைந்ததே, அர்த்தநாரீஸ்வரர் காட்சி. அதன் பிறகு, பிருங்கி முனிவரும் இருவரையும் வழிபட்டு வணங்கினார்.
பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து, ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம் இது.
விஷ்ணு பகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதி வடிவாக காட்சி தந்த தலமும் இதுதான். இத்தலத்தைச் சுற்றி 1,008 லிங்கங்கள் புதைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று சிவன், பார்வதிக்கு இடப்பாகம் அளித்தார் என்பதால் கார்த்திகை தீபத்தில் எம்பெருமானை வழிபடுவது மிகச்சிறப்பு., அப்போது காணும் அர்த்தநாரீஸ்வரரின் திருக்கோலத்தை, ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்கலாம். அதன் பிறகு அடுத்த வருட கார்த்திகை தீபத்தில் தான் அத்திருவுருவ தரிசனம் கிடைக்கும்.
அபீதகுஜலாம்பாள் எனும் உண்ணாமுலையம்மனின் அழகை வர்ணிக்க இயலாது. லலிதா ஸகஸ்ர நாமம் தேவியைப் போற்றும் நாமங்களில் நிஸ்துலா- சிறந்த பொருள் அனைத்திலும் சிறந்தவள், எவர்க்கும் ஒப்பில்லாதவள் என்கிறது. மேலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவள் என்கிறது. ஒப்பார் இல்லாத போது மிக்கார் எப்படி இருக்க முடியும்?
மூககவியும் தாமரையின் கொழுப்பை அடக்கும் திருப்பாதங்கள் என்று பாதார விந்த சதகத்தில் அம்பிகையின் பாதங்களைப் புகழ்கிறார். தேவியின் தாமரை போன்ற சிவந்த பாதங்களுக்கு, அவளது நகங்களின் பிரகாசமே நிலவாக இருக்கிறது என்று வர்ணிக்கிறார்கள். அருணகிரிநாதர் தேவியின் திருப்பாதங்களை சரணங்கள் என்ற கமலங்களாலேயே ஆன ஆலயம் என்று வணங்குகிறார்.
கோயிலுக்கு உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்று இரண்டு குளங்கள் அமைந்திருக்கிறது. ஆடிப்பூரத்தன்று ஆலயத்தின் உள்ளேயே அம்பாள் சன்னிதி முன்பு தீமிதி விழாவை நடத்துவார்கள். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தை தீர்த்தமாக கொண்டு பிரம்மோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணமும், மாசி மகத்தில் வல்லாளன் விழாவும், தை மாதத்தில் திருவூடல், ஆனி விழா, ஆடி அம்பிகை விழா, நவராத்திரி, கந்த ஷஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை போன்ற நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அபீதகுஜலாம்பாள் என்னும் உண்ணாமுலையம்மனின் அருள் பார்வை பக்தர்களாகிய நம் மீது பட்டால் போதுமே. யுகங்கள் தோறும் செய்த வினைகள் யாவும் நீங்கி முக்தி கிடைக்கும். அண்ணாமலையாரை தரிசித்து, அபீதகுஜலாம்பாள் அருளைப் பெற திருவண்ணாமலை செல்வோமா?
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment