Sunday, 27 May 2018

மஞ்சனைக்கார செல்வ சுடலைமாடசுவாமி

நெல்லை ஜில்லாவிற்குட்பட்ட முப்புரம் கோட்டையை ஆட்சி செய்து வந்த ஜமீனுக்கு குழந்தை பாக்யம் இல்லை. தனக்குப் பிறகு வாரிசு இல்லாமல் போய் விடுவோமோ என்று கலங்கினார். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக சென்றார். காலங்கள் உருண்டன. 5 ஆண்டுகள் கழித்து ஜமீன்தார் மனைவி ஒரு  அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஒரே பிள்ளை என்பதால் அவனுக்கு அதிக பாசம் காட்டி வளர்த்து வந்தனர். மகன் கேட்டதை எந்த வகையிலாவது  ஜமீன்தார் வாங்கி கொடுத்து விடுவார். மகன் மீது அவ்வளவு அன்பு! அவன் வளர்ந்து பருவ வயதை அடைந்தான். துளிர் விட்ட இளம் மீசையை முறுக்கியபடி  குதிரையில் வலம் வருவது இளம் ஜமீனின் பொழுது போக்குகளில் ஒன்று.

அதிக நிலபுலன்களை கொண்ட ஜமீன்தார், ஒவ்வொரு பணியைச் செய்வதற்கும், ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவரை வேலையாட்களாக நியமித்திருந்தார்.  இவ்வாறு முப்புரம் கோட்டையை சுற்றியிருந்த 18 கிராம மக்களும் ஜமீனை சார்ந்து வாழ்ந்து வந்தனர். அந்த வகையில் ஆயிரைகளை கவனிக்கவும், விவசாய  பணிகளை மேற்கொள்ளவும் ஆயர்குல மக்களை ஜமீன் நியமித்திருந்தார். அவர்களில் ஒருவர் கோபாலன். அவருடைய நாலாவது குழந்தை, சீதாலட்சுமி.  பெயருக்கேற்றபடி லட்சுமி கடாட்சம் பொருந்தியவளாக, வயதுக்கேற்ற வளர்ச்சியும் கொண்டிருந்தாள். ஆனால், 16 வயதில் மணமுடித்த அவள், 17 வயதிலேயே  விதவைக் கோலம் கண்டுவிட்டாள். அழகும், அறிவும், அன்பும் ஒரு சேர பெற்றிருந்தும் அவள் வாழ்க்கை இருளடைந்தது.

ஒரு நாள் மாலைப்பொழுது வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சீதாலட்சுமியை அந்த வழியாக குதிரையில் சென்ற சின்னஜமீன் பார்த்தார். அவளழகில் தன்னையே  இழந்தார். வீட்டுக்கு வந்த அவருக்குத் தூக்கம் வரவில்லை, கட்டிலில் படுத்து கண்ணை மூடினால், கன்னி அவள் நினைவுகள். பௌர்ணமி முழுநிலவாய் பாவை  அவள் முகம். இப்படியாக நாட்கள் நான்கு கடந்த பின் மகன், உணவை சரியான நேரத்தில், முறையாக உண்பதில்லை என்பதை, தனது மனைவியின் மூலம்  அறிந்த ஜமீன்தார். மகனை அழைத்தார். பரிவோடு விவரம் கேட்டார். தன் உள்ளம் கவர்ந்த பெண்ணைப் பற்றிக் கூறினார் சின்ன ஜமீன். ‘‘மறுபடி தொடர்ந்து  அந்தப் பக்கம் சென்று வருகிறேன். அதன் பின்னர் ஒரு நாள் கூட அவளை காணவில்லை என்று சொல்லி வருந்தினார்.

திடுக்கிட்டார் ஜமீன்தார். “மகனே, எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாத இடைக்குடி பெண்ணை விட, பெரும் செல்வந்தரான ஜமீன்தார் வீட்டு பெண்கள் பன் மடங்கு  அழகுடன் இருப்பார்கள். அவர்களில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துக்கொள்,’’ என்றார். இன்னும் பலவும் சொல்லி சின்ன ஜமீன் மனம் தளரவில்லை.
“உனக்கு வேணும் என்றால் பழகிக்கொள், மண வாழ்க்கைக்கு மாற்று இனத்து பெண் ஆகாதப்பா, வனத்தில் மேய்ந்தாலும், இனத்தில் தான் அடையணும் இதை  தெரிந்து கொள் மகனே,” என்றார் அப்பா. சின்ன ஜமீன் உடன்படவேயில்லை. ‘‘தந்தையே உங்கள் மகனை மணக்கோலத்தில் பார்க்க, நீங்கள்
விரும்பினால் அந்தப் பெண்ணை நிச்சயம் செய்யுங்கள்”, என்று உறுதியாகச் சொன்னார்.

வேறு வழியில்லாமல், தன் உதவியாளரை மகனுடன் அனுப்பி வைத்தார் ஜமீன்தார். பெண்ணின் வீட்டில் எல்லோரும் வயல் காட்டிற்கு சென்றிருந்தனர்.  அந்தப்பெண் மட்டும் இருந்தாள். வாசலில் சந்தடி கேட்டு அந்த இளம்பெண் ஓடோடி வந்தாள். “சொல்லுங்க ஐயா, ஆத்தா, அய்யா, அண்ணன் அல்லாரும்  வயக்காட்டுக்கு சோலியா போயிருக்காங்க,” என்றாள். “இந்தா பாரும்மா, இவரு யாரு தெரியுதா” “நம்ம சின்னஜமீன் தானுங்க தெரியுமுங்க” “உங்க அப்பன், ஆத்தா வந்த உடனே ஜமீன் பங்களாவிற்கு வரச்சொல்லு என்னா?” அவர்கள் சென்ற பின் பலவாறு சிந்தனைவயப்பட்டு சீதாலட்சுமி பயந்து  கொண்டிருந்தாள். தனது தந்தையோ, சகோதரனோ தவறு ஏதும் செய்து இருப்பார்களோ என்று அஞ்சினாள். மாலை பொழுதானது.

சீதாலட்சுமியின் பெற்றோர்கள் இல்லம் வந்தனர். அவர்களிடம் விவரம் சொன்னாள். அதைக்கேட்டு, என்னவோ, ஏதோ என்று பதறியபடி கோபாலனும், அவரது  மனைவி செல்லம்மாளும் ஜமீன் பங்களாவிற்கு சென்றனர். கோபாலனிடம், ஜமீன்தார் நடந்த சம்பவங்களை கூறி, தனது மகனுக்கு சீதாலட்சுமியை பெண்  கேட்டார். அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு மணமுடிந்து, மணாளன் மாண்டுவிட்டதை அவர்கள் கூறினர். “அறியாத வயதில் நடந்ததை திருமணம்  என்பதா? அவள் வாழ வேண்டியவள். அவள் இளமையையும், எதிர்காலத்தையும் வீணடிக்காதீர்கள். அதைவிட என் மகன் வாழவேண்டும். அவனுக்கு உங்கள்  மகள் வேண்டும்.” என்று மிரட்டலாகக் கூறினார் ஜமீன்தார். “ஜமீன். ஐயா, இதில் எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.

தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் குலம் இடைகுலம். அறுத்த தாலிக்கு மறுதாலி இல்லை.” என்று கூறி இருவரும் கைகூப்பி வணங்கி  அழுதனர். ஜமீன்தார், சினத்துடன் பங்களாவை விட்டு அவர்களை விரட்டினார். அந்த காலத்தில், அறுவடை காலம், விழாக்கோலத்திற்கு சமமானது. காரணம்,  அறுவடை முடிந்த பின்தான். அத்தனை காலம் வேலை பார்த்ததற்கான கூலி கிடைக்கும். நெல் மணிகள் இல்லம் வந்து சேரும். ஆகவே அந்த நாளை  எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மறுநாள் அறுவடைநாள். எல்லோரும் வயல் காடுகளுக்கு சென்றனர். சீதாலட்சுமி, தான் வணங்கும் சுடலைமாடசாமி  கோயிலுக்குச் சென்றாள்.

“சாமி எனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் நீதான் காப்பாத்தணும்’’ என்று அழுதபடி பிரார்த்தனை செய்துவிட்டு  வீட்டிற்குத் திரும்பினாள். வயற்காட்டில்  எல்லோரும் கூடி நின்றார்கள். ஜமீன்தார், தனது மனைவி, மகன் மற்றும் உதவியாளர்களுடன் வந்தார். முன்னதாக வந்த கணக்குப்பிள்ளை, ‘‘ஏன் அடம்பிடிக்கிற?  உன் தலைமுறையின் நிலையே மாறும். இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோயேண்டா,”  என்று கோபாலனிடம் கடுமையாகச் சொன்னார். “இல்லைங்கய்யா, இது  தப்பு,” என்று குரல் கம்மக் கூறினான் கோபாலன். சீதா லட்சுமியின் மாமா ராமையன் கோனார், இடைக்குல மக்களுக்கு தலைவராக இருந்தவர். அவர், “ஜமீன்தார்  ஐயா, எங்களை நீங்கள் மன்னிக்கனும். எங்க சாமிக்கு அப்புறம், உங்களைத்தான் சாமியா மதிக்கிறோம்.

நீங்க, உங்க மகனுக்கு எங்க பொண்ண, கேக்கிறது நல்லது இல்லீங்க, எங்க குலத்துல அறுத்த தாலிக்கு மறுதாலி கட்ட மாட்டோம்.” கோபம் பொங்கியது  ஜமீன்தாருக்கு. “என்னது, அறுத்த தாலிக்கு மறு தாலி கட்டமாட்டீங்களா? அப்படியானால் நீங்க அறுத்த கதிர கட்ட வேண்டாம். ஒருத்தரும் வயலுக்குள்ள நிக்க  கூடாது. கிளம்புங்க,” என்று தனது ஆட்களைக் கொண்டு விரட்டினார். அங்கிருந்து வந்த அவர்கள். அவர்கள் வழிபடும் சுடலைமாட சுவாமி கோயில் முன்பு  கூடினார்கள். ‘‘ஜமீன்தாரை பகைச்சுகிட்டு இங்க இருக்க முடியாது, ஏன்னா, நமக்கு வேலை தரமாட்டாரு, பிழைப்புக்கு வழிகிடையாது, அதனால இரவோடு
இரவாக நாம, ஊரு விட்டு போயிருவோம்,’’ என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி ஊரை விட்டுக் கிளம்பிய அவர்கள் தாங்கள் வழிபட்டு வந்த சாமி சிலைகளையும், எடுத்துச் சென்றார்கள்.  ஆனால், ஊர் எல்லையில் ஜமீன்தார் ஆட்கள், அவர்களை பின் தொடர்ந்தார்கள். ஊர் மக்கள் தென்காசியில் ஓடும் சித்திராநதி என்ற இப்போதைய சித்தாற்றின் கரையில் தென்புறம் நின்றார்கள்.  ஆற்றில் பெருவெள்ளம். பின்னால் ஜமீன்தார் ஆட்கள் துரத்தி வந்தார்கள். எப்படி தப்புவது, மனைவி, மக்களை எப்படி காப்பாற்றுவது, பேசாமால் ஆற்றில் விழுந்து  உயிரை மாய்த்து விடலாமா என பலவாறு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அப்போது பெண்களில் சிலர், சீதா லட்சுமியை பார்த்து, “இவளால தான்,  இந்த நிலமை. இவ, என்னத்த காட்டி மயக்குனாளோ, ஜமீன்தார் மொவன், இவளை தான் கட்டணும்ன்னு சொல்ல, இப்போ என்னாச்சு?

சண்டாளி, பாதகத்தியால நம்மோ வீடு, மனை, தோட்டம், தொறப்பு இழந்து, அர்த்த ராத்திரியில பொட்டி படுக்கையை தூக்கிட்டு அலையுறோமே,” என்று கூறினர். அப்போது சீதா லட்சுமி, எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் சத்தமாக கத்தினாள்: “சுடலைமாடசாமி, நான் உன்னை கும்பிட்டது உண்மையானால், நான்  பத்தினி தான் என்பதும் உண்மையானால், ஆற்றின் கரையோரம் நிற்கும் இந்த பச்சை மரம் சரிந்து, இரண்டாக பிளந்து, நாங்க நடந்து செல்ல பாதையாகட்டும்.  அது போல வடகரையில் இருக்கும் மரமும் தாழ்ந்து பாதையாகி வழிகாட்டட்டும். மாடசாமி உன்னை கை தொழுத நான் மாசற்றவள் என்பதை என் சாதிசனம்  அறிய வழிகாட்டு சுடலையாண்டவா” எல்லோரும் அவளைத் திகைப்புடன் பார்த்தனர்.

அந்த நேரம் சிவந்த மேனியுடை சீதா லட்சுமி, கோபக்கனலில் பொன்னிறத் தாளாய் மாறினாள். கண்கள் ரத்தத்தில் நீந்தும் மீன்களாக தெரிந்தன. சற்று நேரத்தில்  அந்த ஆச்சரியம் நடந்தது. ஆம், கரையில் நின்ற மரங்கள் சரிந்து பிளவுண்டு பாதையாக மாறியது. அதில் ஏறி அனைவரும் ஆற்றின் வடகரைக்கு வந்தனர்.  அவர்கள் கரையை கடந்ததும். மரங்கள் மீண்டும் தன்நிலைக்கு மாறியது. விரட்டி வந்த ஜமீன்தார் ஆட்கள் ஆற்றின் தென்கரையில் நடந்தவற்றைப் பார்த்து  திகைத்து நின்றனர். கரையை கடந்தபின், தூற்றியவர்கள் எல்லாம் சீதா லட்சுமியை பற்றி பெருமையாக பேசினர். ஆற்றின் வட கரையோரம் வந்ததும்,  இளைப்பாறுவோம் என்று தாங்கள் சுமந்து வந்த சுவாமி சிலைகளை இறக்கி வைத்தனர். பின்னர் அதிகாலையில் பயணத்தைத் தொடர முனைந்தனர்.

சுவாமி சிலைகளை எடுக்க முயன்றனர். சிலைகள் நகரவில்லை. மீண்டும் எடுக்க முயன்ற போது, அசரீரி கேட்டது: ‘‘நான் இங்க இருக்க விரும்புகிறேன்.’’  “சரி,  இனி நாம் குடியேற ஒரு இடத்தை பார்த்து விட்டு, சாமி இருக்கும் இடத்தை சீர் செய்வோம்,’’ என்று தலைவர் ராமையன் கோனார் குரல் கொடுத்தார்.  எல்லோரும் புறப்பட தயாராகினர். அப்போது சீதா லட்சுமி, “என் கோபம் தணிந்தது. பொறுமையில் பூமகளாய் நான் மாறிவிட்டேன். என் சாமி இருக்கும்  இடத்திலே நான் இருப்பேன்,” என்று கூறியவாறு கீழே சரிந்தாள்;  தெய்வமானாள். அவள் இதே கோயிலில் பூமாதேவியாக பீடம் கொண்டு எல்லோராலும்  வணங்கப்பட்டு வருகிறாள். சுடலைமாடசுவாமிக்கு பிடித்தமான ஒன்று மஞ்சனை, அதன் காரணமாக இந்த சாமிக்கு மஞ்சனை செல்வ சுடலைமாடசாமி என்று  பெயர்.

இந்த கோயிலில் கணபதி, சுடலைமாடன், பேச்சியம்மன் ஆகியோர் உள்ளனர். பனை மரத்தில் கருப்பண்ணசாமி இருக்கிறார். இடையர்கள் கிருஷ்ண வழிபாட்டை  மேற்கொண்டு வந்ததால், அவரையும் நினைவு கூறும் பொருட்டு கோவிந்தசாமி என்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த பீடத்தின் அருகில்  பூமாதேவி பீடம் உள்ளது. கோயில் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் இடையர்கள் குடியமர்ந்தனர். தற்போது அவர்கள் வாரிசுகள் வெவ்வேறு  ஊர்களில், மாவட்டங்களில், மாநிலங்களில் இருக்கின்றனர். எத்திசையில் அவர்கள் இருந்தாலும், கோயில் கொடைவிழாவின் போது ஒன்று சேர்ந்து விழாவினை  நடத்தி செல்கின்றனர்.

கோயில் சீலபேரி குளம் கரையில் இருக்கிறது. அங்கிருந்து சிறிது தூரத்தில் அணைக்கரை சாஸ்தா கோயில் உள்ளது. அந்த கோயில், இந்த கோயிலுக்கு  மூலஸ்தானமாக சொல்லப்படுகிறது. ஆடி தபசு அன்று அணைக்கரை சாஸ்தா கோயிலில் கொடை விழா 3 நாட்கள் நடைபெறும். அதனையடுத்து சீலபேரி  சுடலைமாடசுவாமி கோயிலில் 2 நாட்கள் கொடை விழா நடைபெறுகிறது. தற்போது கோயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. தென்காசி பேருந்து  நிலையத்தினலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment