சக்தியின் அவதாரமாக சிவனால் படைக்கப்பட்ட பிரம்மராட்சசி என்று அழைக்கப்படும் பிரம்மராக்குசக்தி தென் மாவட்ட மாடன் கோயில்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். கயிலாய மலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தந்தையும், தாயும் என்ன ரகசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளையாட்டாக கவனிக்கும் பொருட்டு, முருகப் பெருமான் வண்டு ரூபம் கொண்டு தாயாரின் கூந்தலுக்குள் ஒளிந்திருந்து கேட்டார். அதை அறிந்த தேவியும், மகனின் விளையாட்டை ரசித்தாரே தவிர தடுக்கவில்லை. ஞானத்தினால் உணர்ந்த சிவபெருமான், மலைமகளே! உன் மகனை கூந்தலில் ஒளித்து வைத்து நீ ரகசியம் கேட்ட காரணத்தினால், முருகன் கடலில் மீனாகப் போகக் கடவது. நீ அதி அரசனுக்கு மகளாக மானிடப்பிறவி எடுக்கக்கடவது என்று சாபத்தைக் கொடுத்தார்.
உடனே பார்வதியானவள் “எங்கள் சாபம் எப்போது தீரும்” என்று கேட்க, தேவி, நீ பருவ வயதை நிரம்புகின்ற சமயத்தில் நான் ஒரு ஆண்டியாக வந்து உன்னை மணம் புரிவேன். அப்போது முருகனுக்கும் சாப விமோசனம் கொடுப்பேன் என்றார் சிவபெருமான். அதன்படி மங்கைபதி என்ற பகுதியை ஆட்சி புரிந்து வந்த அதி அரசனின் மகளாக பார்வதிதேவி அவதரித்தாள். முருகப் பெருமான் மகர மீனாக அவதரித்தார். தேவி பருவம் வந்த பின்பு சிவன் கூறியதைப்போல தேவியை மணம் புரிந்தார். முருகப் பெருமானுக்கும் சாபவிமோசனம் கொடுத்தார். கயிலாய மலையில் தேவியுடன் சிவபெருமான் வீற்றிருந்த வேளையில், தேவர்கள் சிவசக்தியை காண, கயிலாய மலைக்கு வந்தனர். சிவனுடைய பாதத்தை வணங்கி நின்ற வேளையில், பரமசிவன் தேவர்களை பார்த்து சொல்லுகிறார்.
மணம் முடிந்த தருணத்தில் எங்களை காணவந்த தேவர்களே, எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள் என்று கேட்க, “தேவா! இந்தக் கயிலாயத்தில் இல்லாத வகை என்ன இருக்கின்றது. தாங்களோ, விருப்பு வெறுப்பு இல்லாதவர், எதையும் தாங்கள் விரும்பியது கிடையாது.” அப்போது சிவபெருமான் சொல்லுவார். தேவர்களே! அரிதிலும் அரிதான கடலில் பிறக்கும் பொன்னரிய மாலை யை கொண்டு வாருங்கள். உங்கள் திறத்தைப் பார்ப்போம் என்று சொன்னதும் தேவர்கள் நிச்சயம் கொண்டு வருவதாக கூறிச் சென்றனர். திருப்பாற்கடலில் மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு அமிர்தம் கடைய, பல்வேறு பொருட்கள் வந்து கொண்டிருந்தாலும் பொன்னரிய மாலை வரவில்லை. உடனே தேவர்களின் தலைவனான இந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டார்.
பிரம்மதேவன் அரளிப் பூவெடுத்து உருப்பிடித்துப்போட கடலில் பொன்னரிய மாலை வந்தது. அதை எடுத்த தேவர்கள் மனது மகிழ்ந்தனர். பின்னர் அதை பொன் குடம் ஒன்றில் வைத்து கயிலாயத்திற்கு எடுத்து வருகிறார்கள். வரும் வழியில் ராட்சச படைகளுடன் வந்து கொண்டிருந்த சண்டமுண்டன் என்ற ராட்சசன் தேவர்களிடம் வம்பு செய்தான். அப்போது அவர்கள் கொண்டு வந்த பொன்னரிய மாலையை பொன்குடத்துடன் அபகரித்துச் சென்றான். பொன்னரிய மாலையை பறிகொடுத்தவர்கள் வெறுங்கையுடன் கயிலாயம் சென்றார்கள். நடந்ததை சிவனாரிடத்தில் எடுத்து உரைத்தார்கள். உடனே சிவபெருமான், எமதர்மராஜனையும், ஆதித்தனையும் அழைத்து சண்டமுண்டனிடம் இருக்கும் மாலையை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு இறைவா! அது எங்களால் இயலாத காரியம் அன்றோ என பதிலுரைத்தனர். உடனே பார்வதி தேவி, சிவனாரிடம் மகாதேவா, சக்தி என்னால் முடியும் என்றுரைக்க, பிரம்ம தேவன், தேவா, உங்களுக்கு பணி செய்யும் பொருட்டு என்னை இதில் உட்படுத்துங்கள் என்றார். புன்னகைத்தார் சிவபெருமான். ம்... ஆகட்டும் என்றவர் சேவகர்களை அழைத்து 51 அடி ஆழமும், 64 அடி சதுர வடிவமும் கொண்ட வேள்விகுழியை வெட்டுமாறு கூறினார். அதில் பலவகையான மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அணலை மூட்ட தயாரானார்கள். சிவன், சக்தியை பார்க்க, சக்தியின் அம்சம் சிவனுள் செல்ல, அதை சிவன் தன் நுதலில்(நெற்றி) ஏற்றி, நெற்றிக்கண் வழியாக அணலாக வெளிக்கொணர்ந்தார். நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்தினார் பிரம்மதேவன். பின்னர் அதை வேள்விக் குழிக்குள் விடுகிறார். வேள்வித்தீ கொழுந்து விட்டு எரிகிறது.
அதில் பிரம்மன் தனது சக்தியை மெருகேற்றி கலைமகளின் ரூபமாக வெண் தாமரையும், மலைமகளின் ரூபமாக செவ்வரளி மலரையும், மஞ்சளும், குங்குமம், மஞ்சனையையும் அந்த தீயில் போட்டார். உடனே தீ பிழம்பிலிருந்து தோன்றினாள் பிரம்மராக்கு சக்தி. பிரம்மனால் ஒருங்கிணைந்து ஆக்கப்பட்ட சக்தி என்பதால் பிரம்மராக்கு சக்தி என்று அழைக்கப்பட்டாள். பிரம்மராக்குசக்தி, சண்டமுண்டன் என்னும் ராட்சசனை அழித்ததால் பிரம்மராட்சசி என்று போற்றப்பட்டாள். நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தில் வீற்றிருக்கும் பிரம்மராக்குசக்தி பிரச்னைகளை தீர்த்து வைத்து நல்லருள் புரிகிறாள். குறிப்பாக பெண்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்றுகிறாள். கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தனது முறைப்பெண்ணான அதே ஊரைச்சேர்ந்த பண்டாரம் மகள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சில ஆண்டுகளாக குழந்தை இல்லை.
ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் தெரிந்தது. லட்சுமி பூப்பெய்யவில்லை, அதனால் பெண்களுக்கு உண்டான மாதவிடாய்கள் வருவதில்லை. ஆகவே குழந்தை பேறுக்கு சாத்தியமில்லை என்றனர். உடனே சுப்பையாவின் தாயார் வற்புறுத்தலின் பேரில் லட்சுமியை அடுத்த தெருவிலிருக்கும் அவரது வீட்டில் கொண்டு விட்டார். பின்னர் வாரிசு இல்லாத வாழ்வு என்ன வாழ்க்கை என்று கூறி, தனது மகன் சுப்பையாவிற்கு வேறு பெண் பார்க்க முற்பட்டாள் அவரது தாயார். லட்சுமியை நினைத்து அழுத அவளது தாயார், கோபாலசமுத்திரத்தில் வீற்றிருக்கும் சுடலை கோயிலுக்கு தனது மகளை அழைத்து வந்தார். பிரம்மராக்கு சக்தியிடம், தாயே, நீயும் ஒரு பெண்தானே, நீ தெய்வமாக இருந்தால் என் மகளை முழுமையான ஒரு பெண்ணாக மாற்றித் தா, இல்லையேல் நீ ராட்சசிதான் என்றால் என் மகளை இந்த மண்ணுலகை விட்டு எடுத்துவிடு.
பொம்மையாக ஒரு பிள்ளை எனக்கெதற்கு என்று அழுதாள். முறையிட்டாள். கோயில் பூசாரி திருநீறு கொடுத்து அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து 21வது நாள் லட்சுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு மங்கையானாள். அவளது கணவன் இதை அறிந்து தனது வீட்டுக்கு லட்சுமியை அழைத்துச் சென்றான். மறு வருடமே அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அது மட்டுமன்றி தொடர்ந்து மொத்தம் மூன்று பெண் குழந்தைகளை பெற்றாள். முதல் குழந்தைக்கு பேச்சியம்மன் என்றும், இரண்டாவது குழந்தைக்கு பிரம்மராக்கு சக்தி என்றும், மூன்றாவது குழந்தைக்கு செல்வசுடலி என்றும் தனக்கு வாழ்க்கை கொடுத்த கோயிலின் மூல தெய்வங்களின் பெயர்களையே சூட்டினார்கள். பெண்களின் பிரச்னையை தீர்ப்பதில் பிரம்மராக்குசக்தி வல்லமை கொண்டவளாக திகழ்கிறாள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment