அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் ‘வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகிறது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள நாகநாத சுவாமி கோயில். மன்னர் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார். இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது. இதை கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்த புற்றை இடிக்க ஆணையிட்டான். மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.
அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது நானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார். மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம். தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், 5 கலசங்களை தாங்கி கம்பீரமாக நிற்கிறது. ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது. எதிரே கொடி மரம், பலி பீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன.
நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார். தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னதி இருக்கிறது. பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று. ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது, இவ்வாலயத்தில்2 பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். சப்த மாதர் சன்னதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னதியும், அடுத்ததாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதியும் அமைந்துள்ளன. அருகே தல மரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.
கோயிலில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக்கிறார். துவார பாலகர்கள் காவல் நிற்க, கருவறை சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழிபடும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது. இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார். வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னதி அமைந்துள்ளது.
இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது. அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள். அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது. இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்னைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாகவும் இது திகழ்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment