Tuesday, 17 July 2018

சின்ன சடையம்மன் திருக்கோவில்

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்பார்கள். ஆண்டு முழுதுமே அம்மன் மாதமாக பக்தர்கள் போற்றிக் கொண்டாடும் தலம் சென்னை கோமளீஸ்வரன் பேட்டை லாங்க்ஸ் கார்டன் தெருவிலுள்ள சின்னசடையம்மன். அம்பிகை இங்கு கோயில் கொண்ட வரலாறு சுவையானது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன். அப்போது அந்த மருத்துவமனையின் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்த 
ஆங்கிலேயர் மருத்துவமனையில் எதற்கு அம்மன் ஆலயம் என்று கூறி ஆலயத்தை அகற்றினார். அன்றே அவரின் கண்பார்வை பறிபோனது. வெளிநாடுகள் பலவற்றிலும் மருத்துவம் பார்த்தும் குணமாகாத அந்த ஆங்கிலேயர் பெரியசடையம்மனிடமே சரணடைந்து அதே இடத்தில் அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார். தேவியின் பஞ்சசக்திகள் சின்னசடையம்மன், மஞ்சசடையம்மன், சக்தி சடையம்மன், அருள் மகாசடையம்மன், திருச்சடையம்மன் என எழும்பூரைச் சுற்றிலும் ஆலயம் கொண்டருள ஆரம்பித்தனர். 

அதில் முதன்மையாக சின்னசடையம்மன்ஆலயம் பக்தர்களால் போற்றப்படுகிறது. மிகவும் தொன்மையான இத்தலத்தின் முகப்பின் இருபுறங்களிலும் தேவியின் வாகனமான சிங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிரதான கருவறையில் சின்ன சடையம்மனுடன் ரேணுகா பரமேஸ்வரியும் திருவருள்புரிகிறாள். சின்னசடையம்மனின் திருவடிகளின் கீழ் யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தலங்களிலும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருளும் ரேணுகாபரமேஸ்வரி இத்தலத்தில் இரு தலை நாகம் குடைபிடிக்க திருவருள் புரிவதால் இத்தலம் ராகு/கேது பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. காளஹஸ்தி சென்று காலசர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய முடியாத அன்பர்கள் இத்தலத்திற்கு வந்து காலசர்ப்பதோஷ பரிகாரம் செய்து வாழ்வில் வளம் பெறுகின்றனர். சின்னசடையம்மன் டமருகம், சூலம், வாள், கபாலம் ஏந்தி அழகே உருவாய் அருளே வடிவாய் திருவருள் புரிகிறாள். 

மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கேற்ப வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் கற்பகவிருட்சம் போல் அருள்பவள் இத்தாய் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. இத்தேவியருக்கு பௌர்ணமி தோறும் சங்காபிஷேகம், மகா அபிஷேகம் போன்றவை செய்யப்பட்டு சந்தனக்காப்பு சாத்தப்படுகிறது. தோல்வியாதிகள் நீங்க தேவியிடம் நேர்ந்து கொண்டு உப்பு, மிளகு வாங்கி சமர்ப்பிக்கின்றனர். கோரிக்கை நிறைவேற மட்டைத் தேங்காயை கருவறை பிராகாரத்தில் அவரவர் வேண்டிக்கொண்டபடி 21, 54, 108 முறை உருட்டி வழிபட்டு கோரிக்கைகள் நிறைவேறப்பெறுகின்றனர். ஆடித் திருவிழா காப்பு கட்டி 11 நாட்கள் வெகு விமரிசையாக இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் 9ம்நாள் திருவிழாவில் உடல் முழுதும் எலுமிச்சம் கனிகளைக் குத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். அந்த கனியை பிரசாதமாக வாங்கி உண்டால் புத்திரப்பேறு வேண்டுவோர்க்கு புத்திரப்பேறு கிட்டுவதாகவும், நோய் நீக்கம் வேண்டுவோர்க்கு நோய்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.  

தீபுஷ்ப சட்டி ஏந்துதல், நாவில் அலகு குத்திக் கொள்ளல், உடல் முழுதும் அலகு குத்திக்கொள்ளல், தேர் இழுப்பது, வேப்பஞ்சேலை கட்டிக் கொள்வது போன்ற மெய்சிலிர்க்கும் பிரார்த்தனைகளும் அப்போது பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. அதே போன்று கண்பார்வைக் கோளாறுகள் நீங்க வேண்டிக் கொண்டவர்கள் அம்மனின் உண்டியலில் கண்மலர் வாங்கி சமர்ப்பிக்கின்றனர். எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதோ அந்த உறுப்புகளை தேவிக்கு வாங்கி போடுவதாக வேண்டிக் கொண்டால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் சரியாகிவிடும் அற்புதம் இத்தலத்தில் நடந்து வருகிறது. தினமும் இரு கால பூஜைகள் இத்தலத்தில் நடைபெறுகிறது. கருவறையின் இரு புறங்களிலும் விநாயகரும், முருகப்பெருமானும் சந்நதி கொண்டுள்ளனர். கோஷ்டங்களில் விநாயகர், பிராம்மி, வைஷ்ணவி, துர்க்கா தேவி போன்றோர் அருள்கின்றனர். விநாயகருக்கு சங்கடஹரசதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சஷ்டி, கிருத்திகை, விசாகம் போன்ற நாட்களில் சிறப்பாக வழிபடப்படுகிறார். 

பிராகாரத்தில் உள்ள சப்த கன்னியர்கள் வெள்ளிக்கிழமையன்று விசேஷ வழிபாடு காண்கின்றனர். அவர்கள் அருகில் உள்ள நாகவல்லி தேவிக்கு ஆடி மாத நாக பஞ்சமியன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் தேவி திருவீதியுலா வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். நவராத்திரியின் 9 நாட்களும் கொலு தர்பாரில் தேவி வித விதமான தேவியராக அருட்காட்சி அளிப்பது இத்தல விசேஷம். மாசிமகத்தன்று சின்னசடையம்மன் கடற்கரைக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருள்கிறாள். சித்ரா பவுர்ணமி தினத்தன்று பால்குட அபிஷேகம், 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடக்கிறது. ஆடி மாத கடை ஞாயிறன்று தேவியை சர்வாலங்காரங்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து நவசக்தி அர்ச்சனை செய்யப்படுகிறது. அப்போது வளையல்களால் அலங்காரம் செய்து பின் அந்த வளையல்களை பிரசாதமாக பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் தரப்படுகிறது. ஞான சக்தியாய் கண்கண்ட தெய்வமாய் பக்தர்களின் குறை தீர்க்கும் தயாபரியாய் அருட்காட்சி அளிக்கும் சின்னசடையம்மனை தரிசித்து வளமான வாழ்வு பெறுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment