Monday 7 May 2018

சீவலப்பேரி சுடலை வரலாறு

சீவலப்பேரி, நெல்லை மாவட்டம்.

மலையாள நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு மாயாண்டி சுடலை வந்தார். அவர் பாண்டிய நாட்டில் முதலாவது வந்தமர்ந்த இடம் சீவலப்பேரி.

திருநெல்வேலியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி கிராமம்.

பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த ஸ்ரீவல்லப பாண்டியன் மக்களின் குடிநீருக்காக ஏரியை  அமைத்தான். அவன் பேரில் அந்த ஏரி ஸ்ரீவல்லப பேரி என்று அழைக்கப்பட்டது. அது மருவி ஸ்ரீவல பேரி யாகி, சீவலப்பேரி ஆனது. இங்கு சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வந்த மாசானக்கோனார் தன்னுடைய தந்தையின் கட்டளையேற்று ஆடு மேய்க்க சென்றார். சீவலப்பேரி ஊருக்கு மேற்கு மூன்று ஒன்றாய் கலக்கும் பகுதியான முக்கூடல் என்னும் இடத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். 12 வயதே ஆன பாலகன் மாசானம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் கூட்டத்தை சின்னஞ்சிறு பாலகன் மாசானம், அடிக்காமலும், அதட்டாமலும் உரிமையுடன் அழைப்பது, அவற்றை கொஞ்சுவது என ஆடுகளோடு பழகுவதை கண்ட ஒரு சாமியார், அவனிடம் சென்று குழந்தாய், எனக்கு நல்ல பசியாக இருக்கிறது. உண்பதற்கு உன்னிடம் எதாவது இருந்தால் கொடு என்றார்.

காவி உடையும், காலில் ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்பும், கையில் திருவோடும் கொண்டு உயரமான தோற்றமும் அதற்கேற்ற அகன்ற உடல்வாகும் கொண்டு நரைத்த தாடியுடன் நிமிர்ந்த நிலையில் நின்றிருந்த அந்த சாமியாரைக் கண்டான் மாசானம். சாமி, உங்களுக்கு கொடுக்கத்தக்க கையில் ஒண்ணுமில்லே, நான் வீட்லயிருந்த கொண்டாந்த சோள கஞ்சிய இப்பதேன் குடிச்சு முடிச்சேன்.

பரவாயில்லை, ஏதாவது ஒரு ஆடுயிடம் இருந்து பாலை கறந்து கொடு, நான் குடித்து பசியாறிக்கொள்கிறேன்.

சாமி, முக்காவாசி ஆடு, சினை ஆடுதேன். ஈத்தளஞ்ச ஆடுகள்கிட்டயும் இப்ப எப்படி பால கறக்க, என்று கூறிய போது, அவர் அருகே நின்ற ஆட்டை காட்டி, இந்த ஆட்டில் இருந்து பாலை கறந்து கொடு என்றார். அந்த சாமியார்.

அப்போது மாசானம் சத்தமாக சிரித்தார். சாமி அது மலட்டு ஆடு, அதுல போய் எப்படி சாமி பால கறக்கிறது என்று கூறி, மீண்டும் சிரித்தார் மாசானம்.

இறுகிய முகத்தோடு குழந்தாய், நான் சொல்வதை நீ கேள், அந்த ஆட்டில் பால் வரும், இந்தா, இந்த திருவோட்டில் பாலை கறந்து கொடு என்று தன் கையில் இருந்த திருவோட்டினை கொடுக்க, தயக்கத்துடன் வாங்கினார் மாசானம். அந்த மலட்டு ஆட்டின் மடியில் பாலை கறக்க முயன்றார். பால் வந்தது. திருவோடு நிரம்பியது. வியந்தார் மாசானம், அந்த சாமியாரை வியப்போடு பார்த்தபடியே எழுந்தார்.

மாசானத்தின் கையிலிருந்த திருவோட்டை வாங்கி பாலை அருந்திய சாமியார், தனது சுயரூபத்தை காட்டினார். வந்திருந்தது சுடலைமாடன்.

கம்பீரமான தோற்றம், கனிவான சிரிப்பு மாசானம் உன் இடம் தேடி வந்த எனக்கு கோயில் எழுப்பி, பூஜித்து வா என்றார். அதற்கு ஐயா, வயதில் இளையவன், பருவத்தில் சிறியவன் என்னால் என்ன செய்ய முடியும்.

உன்னோடு நானிருக்கிறேன் உன்னால் முடியும் என்றார். சாமி, அப்படியே செய்கிறேன். எனது தலைமுறைக்கும் காத்து நிக்கணும், நோய் வராம பாதுகாக்கணும் என்று கூறினார். (இதை செய்யுளாக அதாவது பிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும் என பாடலாய் பாடி கேட்டதாக கூறப்படுகிறது.)

உடனே சுடலைமாடன் எனக்கு கோயில் கட்டி, நான் சொல்கிற என்னோடு நிலையம் கொடுத்து பூஜித்துவா,

உன் தலைமுறையை காத்து நிற்பேன், குலம் சிறக்க வைப்பேன்,

ஊர் மக்களை காப்பேன், நோய், நொடி அண்டாமல் பாப்பேன்.

என்னை நம்பி, உன்னை தேடி வருவோருக்கு எப்பிணியாகினும் அப்பொழுதே நீக்கி வைப்பேன். என்று வாக்குறுதி கொடுத்த சுடலைமாடன் தான் நின்றிருந்த இடத்தில் கீழேயிருந்த மண்ணை எடுத்து தன் விரலை தொட்டு, அதை கொண்டு மாசானத்தின் நாவில் ஓம் என்று எழுதினார்.

மாலை பொழுதானது. ஆடுகளை கிடையில் அடைத்துக் கொண்டு தனது உறவினர்களிடமும், ஊரார்களிடமும் நடந்ததை கூறினார். மாசானம்.

எல்லோரும் கேலி பேசினர். இவரது பேச்சை பொருட்டாக நினைக்கவில்லை. சுடலைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்று வேதனைப்பட்ட மாசானம். அங்கிருந்து புறப்பட்டு கால்போன போக்கி பயணித்தார். சதுரகிரிமலை சென்றார். அங்கு சித்தர்கள் பலர் இருக்க, அங்கிருந்த ஒரு ரிஷி யை குருவாகக்கொண்டு அவருக்கு தொண்டுகள் செய்து வந்தார். வேதங்களை கற்றறிருந்தார்.

ரிஷியை காணவரும் அன்பர்கள் அவரை குரு என்று அழைப்பதை போன்று இவரை பாலகன் என்பதால் பாலகுரு என்று அழைத்தனர். தலைமை குருவாக இருந்த அந்த ரிஷியிடம் நாடி வரும் அன்பர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களை எடுத்துக்கூறும் போது, ரிஷி பதில் கூற சிறிதுநேரம் மௌனமாக இருப்பார். பின்னர் பதில் கூறுவார். ஆனால் சுடலையின் அருளால் மாசானக்கோனார், ரிஷிக்கு முன்னதாக பதில் கூறிவிடுவார். இதனால் இவரை அங்கிருந்த முனிவர்கள் தலை இருக்க வால் ஆடலாமா என்று கண்டித்தனர். தலைமைகுரு பதில் கூறும் முன்னே, இவர் பதில் கூறியதால் வால் என்று நகைப்புக்காக கூறியதால் இவர் பெயரே வாலகுருவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

21 வயதை எட்டிய இந்த வாலகுரு காசிக்கு பயணம் மேற்கொண்டார். தனது 24 வயதில் சொந்த ஊரான சீவலப்பேரிக்கு வந்தார். சுடலைமாடனை நோக்கி வேண்டினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சுடலை ஈசன், நாளை காலை சூரிய உதயத்திற்கு பின் மூவாற்றங்கரையில் நான் லிங்கமாக தோன்றியிருப்பேன். என்றார். எந்த இடத்தில் சுடலை தரை மண் எடுத்து மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் என்று எழுதினாரோ அந்த இடத்தின் மேற்கு பக்கம், தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையோரம் சித்திரை மாதம் முதல் நாள் சுடலைமாடன் சுயம்புவாக லிங்கமாக தோன்றினார். அன்றிரவும் மாசானாக்கோனர் கனவில் தோன்றிய சுடலைமாடன். முறுக்கு மீசை முகத்தோடும், வீச்சருவா கரத்தோடும் தனது உருவத்தை காட்டினார். இதே உருவத்தில் தனக்கு சிலை வடிவம் இட்டு வணங்கி வர கூறினார். அதன்படியே சுடலைமாடனுக்கு மாசானக்கோனார் கோயில் கட்டினார். மாசானக்கோனார் நீண்ட சடைமுடியுடனும், காவி ஆடையுடனும் இருந்ததால் அவ்வூர் மக்கள் இவரை வாலகுரு சன்னியாசிக்கோனார் என்று அழைத்து வந்தனர். சன்னியாசி கோனார் சுடலைக்கு பூஜை செய்து வந்தார். அவர் சொன்ன வாக்கு பலித்தது.

ஒரு வெள்ளிக்கிழமை உச்சி கால பூஜையில் அசரீரியாக சுடலைமாடன், சன்னியாசி கோனாரிடத்தில் பேசினார்.

முன் பிறந்த முண்டனுக்கும் - அவன்

பின் பிறந்த பேச்சிக்கும் - என்னை

தில்லையில் ஆதரித்த தாயான

எல்லைக்காரி பிரம்ம சக்திக்கும்

துணையாக வழியில் வந்த

புதியவனுக்கும் எனக்கு

இணையாக என் கோட்டையில்

பூஜிக்க நிலையம் கொடு என்றார்.

அப்போது சன்னியாசிக்கோனார் கூறினார்

பணம் படைத்தவன் பலரிருக்கு

பலம் படைத்தவன் சிலரிருக்க

என்னை அழித்துவிட்டு

உன்னை அபகரித்துவிடக்கூடாதே என்றதற்கு

பிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும்

கறக்கும் கன்றுக்கும் - நீ

கறந்து கொடுத்த பாலுக்கும் சத்தியமாக

சந்திரன் சூரியன் உள்ளவரை

எனது புகழ் மாறாது

உனது சந்ததி அழியாது காத்து நிப்பேன்.

என் கோட்டை படியை கழுவி

படித்துறையில் நீ இருந்தால் நான் படியளப்பேன்

நீ சொன்னது பலிக்கும்

நீ கொடுக்கும் மண்ணும் மருந்தாகும் என்றார்.

சுடலைமாடன் சொன்னபடி சன்னியாசி கோனார்

சொன்ன வாக்கு நடந்தேறியது

சுடுகாட்டு மண்ணும் மருந்தானது

சுற்று வட்டாரம் பெயரானது

சுடலையின் சக்தி உடனிருந்தது.

சன்னியாசி கோனார் மறைவுக்கு பின் அவருக்கு ஊருக்குள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது. அது அவர் வாழ்ந்த வீடு என்று கூறப்படுகிறது. இது போத்தி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தை மாதம் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுடலைகோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாள் கொடை விழா நடக்கிறது. பங்குனி கடைசி நாளன்று போத்தி கோயிலில் பூஜை செய்து, அங்கிருந்து அவரை கோயிலுக்கு அழைத்து வருவதாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுடலைமாடன் மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் எழுத மண் எடுத்த இடம். மயான பூமியானது. அங்கிருந்து தான் மண் எடுத்து வந்து கோயிலில் திருநீறாக கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை டிராக்டர் கொண்டு மயானகரையில் தோண்டி திருநீறு மண் அள்ளப்படுகிறது. சுமார் 600 ஆண்டுகளாக மண் அள்ளப்பட்டும் அங்கு எந்த பள்ளமும் இன்னும் ஏற்பட வில்லை, மண்ணெடுக்க தோண்டிய சில நாட்களிலேயே அந்த இடம் இயல்பாக சமப்படுத்தப்படுகிறது. எல்லாம் சுடலையின் அற்புதம் என்கிறார்கள். சீவலப்பேரி மக்கள்.

இந்த திருநீறு மண்ணை பூசினால், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள் பலன்பெற்றவர்கள். இந்த கோயிலில் மூலவர் சுடலைமாடனின் வலது புறத்தில் தாய் பேச்சியம்மனும், தாய் பிரம்மசக்தியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அவருக்கு எதிரே புதியசாமியும், அவருக்கு பின்புறம் முண்டன் சாமியும் அருள்பாலிக்கின்றனர்.

பனைமரங்கள் வளர்ந்திருக்கும் அடர் சோலை, தாமிரபரணி பாய்ந்தோடும் ஆற்றங்கரை அமைதி தழுவும் அற்புத சூழல் இவையாவும் ஒரு சேர கொண்ட தலத்தில் காவல் தெய்வமாய் வீச்சருவா கரத்தோடும், முறுக்கு மீசை முகத்தோடும் காத்து நிற்கிறார் சுடலைமாடன்...

சு.இளம் கலைமாறன்,

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இனைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment