Wednesday, 31 July 2019

சக்தி பீடம் : கமலாம்பிகை.!!

சக்தி பீடங்களில் கமலை சக்தி பீடம் என்றழைக்கப்படும் கமலாம்பாள், தியாகராஜர் திருக்கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியது. பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமாக விளங்குகிறது. திருவாரூர் தேர் அழகு என்ற ஒரு வார்த்தை போதும் இதன் பெருமையை பறைசாற்ற. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. திருவாரூர் திருக்கோயில் தோன்றிய காலத்தை கணித்து கூறமுடியாது என்று திருநாவுக்கரசரே வியந்து கூறியுள்ள தலம் இது.
சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிக பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது. லலிதா சகஸ்ர நாமத்தின் மொத்த வடிவமாக இத்தலத்து அம்பிகை விளங்குவதால், இங்கு அம்பிகை கமலாம்பிகையாக விளங்குகிறாள். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே கோட்டில் அமைந்து காட்சி தருவதும் இத்தலத்தில்தான். இத்தலத்தில் மட்டும் மாலை, 4.30 மணி முதல் 6.00 மணி வரை தினமும் பிரதோஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

தல வரலாறு:

தேவலோகத்தில் இந்திரனுக்கு அசுரர்களால் அவ்வப்போது ஆபத்து ஏற்படுவதும், நீங்குவதும் இயல்பானது. ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டபோது, முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு இந்திரன் தப்பினான். தன்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய முசுகுந்த சக்கரவர்த்திக்கு கைம்மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி என்ன செய்வது என்று கேட்டான்.
முசுகுந்தரோ பெருமாள் தன்னுடைய நெஞ்சில் கைவைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைப் பரிசாக கேட்டார். தேவர்கள் பூஜிக்கும் இறை லிங்கத்தை மானிடர்களுக்கு எப்ப டித் தரமுடியும் என்று நினைத்த இந்திரன், மயனைஅழைத்து இதே போன்று லிங்கத்தை வடிவமைத்துக்கொடு என்றான். அதைப்பெற்றுக் கொண்ட முசுகுந்தருக்கு அவை போலி என்பது தெரிந்துவிடவே, வேறு வழியின்றி உண்மையான லிங்கத்தைக் கொடுத்தான் இந்திரன். அந்த நிஜ லிங்கமே திருவாரூரில் அமைந்துள்ளது.

தலசிறப்பு:

9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 100க்கு மேற்பட்ட சன்னிதிகள், 86 விநாயகர் சிலைகள், 24 க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரம்மாண்டமான கோயிலாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிஅளிக்கிறார்.  தியாகராஜருக்கும் தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த மரகத லிங்கத்துக்குத் தான் தினமும் அபிஷேகம் நடக்கிறது. இத்தலத்தில் எட்டு துர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாக விளங்குகிறாள். மேலும் 2 துர்க்கை சன்னிதியும்  இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சன்னிதியில் ஒன்றுமாக எட்டு துர்க்கை சன்னிதிகள் அமைந்திருப்பது சிறப்பானது.
வன்மீக நாதர் மற்றும் தியாகராஜர் சன்னிதிகள் வன்மீக நாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இச்சன்னிதிக்கு வலது புறத்தில் இத்தலத்தின் பிரதான மூர்த்தி தியாகராஜர் சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த சன்னிதியின் வலதுபுறத்தில் உள்ள பீடத்தில் பெட்டகத்தில் வீதி விடங்கர் மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது. தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தன்று வலப்பாதத்தையும் தரிசிக்க வேண்டும். மற்ற அங்கங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது.
அம்பிகை கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்குதிசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அம்பிகை சிரசில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள். பராசக்தி பீடங்களுள் ஒன்றான அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும்,  51 எழுத்துக்கள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் சில நிமிடங்கள் நின்று தியானித்து செல்ல வேண்டும். ஆடிவெள்ளி, தை வெள்ளி, ஆடிப்பூரம் அன்று அம்பிகையை வழிபட்டால் அருள் உண் டாகும்.

நிலோத்பலாம்பாள் சன்னிதி:

இங்கே அம்பாள் இரண்டு திருக்கரங்களுடன் ஆதிசக்தியாக காட்சி அளிக்கிறாள். தமிழில் அல்லியங்கோதை என்றும் வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் இவளுக்கு பெயருண்டு. அம்பாளுக்கு இடது புறம் ஒரு சிறுவனை தோளில் வைத்தப்படி ஒரு பெண் காட்சி அளிக்கிறாள். அந்த சிறுவன் மீது அம்பாளின் இடதுகை படிமானமாக இருப்பது போல ஒரே கல்லில் சிலை செதுக்கியிருப்பது வேறு எங்கும் காண முடியாத விசேஷம். அம்பாள் வலதுகையில் குவளை மலரை வைத் திருக்கிறாள்.

தல பிரார்த்தனை:

இங்கிருக்கும் ரெளத்திர துர்க்கை அம்பாள் திருமண வயதை அடைந்த இளம்பெண்களுக்கு உண்டாகும் திருமணத்தடையைப் போக்குகிறாள். ராகு காலத்தில் தனக்கு அர்ச்சனை செய்பவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறாள்.
நெடுநாள் தீராத கடன் பிரச்னை, வாராக்கடன், தீராத பிணிகள் அனைத்தையும் தீர்த்து வைக்க இங்கிருக்கும் ரண விமோசனர் அருள்புரிகிறார். அமாவாசை அன்று இவருக்கு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.
மூலவரான தியாகேஸ்வரரை வணங்கினால் திருமணவரம், குழந்தைவரம், கல்வியில் மேன்மை, வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவு பெறும்.
அம்மன் சன்னிதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும் என்பது ஐதிகம்.
எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்டிருக்கும் திருவாரூர் தியாகராஜரையும், கமலாம்பிகையையும் தரிசித்து பெறுவதற்கரிய பேறுகளைப் பெறுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment