Thursday, 25 April 2019

இழந்த பதவியை மீண்டும் பெற அருள் தரும் பத்மகிரீஸ்வரர்.!!

திண்டுக்கல்லில் பழமையான ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக காளஹஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உள்ளார். அபிராமியம்பிகைக்கு தனி சன்னதி உள்ளது. வன்னி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆஞ்சநேயருடன் காட்சியளிக்கும் வரதராஜபெருமாள், பாலதுர்க்கை, தட்சிணாமூர்த்தி, கருடாழ்வார் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது. 5 தீர்த்தங்கள் உள்ளன. எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக, இங்கு ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர் உடனுரை அபிராமியம்மன் என 2 மூலவர் சன்னதிகள் உள்ளன.


தல வரலாறு

காளஹஸ்தீஸ்வரர் கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டப்பட்ட ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் தெரியவில்லை. பண்டைய காலத்தில், சேர மன்னர்கள் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் வந்த காலங்களில் பாண்டியர், சோழர், விஜய நகரப் பேரரசர்கள் மற்றும் மதுரை நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்த பெருமை பெற்றது இந்த கோயில்.

சித்திரை பெருந்திருவிழா, ஆடி சுக்கிர வார உற்சவம், நவராத்திரி உற்சவம், கார்த்திகை தீப விழா, மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம், தை வெள்ளி ஆகியவை விசேஷ தினங்களாகும். சித்திரை பெருந்திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. பண்டைய காலத்தில் பாஹு, சுபாஹு என்ற 2 சிவபக்தர்கள் கார்த்திகையன்று காளஹஸ்தீஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு முறை இருவரும் இங்கு வந்தபோது, அவர்களை சோதிக்க நினைத்த சிவபெருமான் புலி உருவில் வந்து, அவர்களைக் கொல்ல போவது போன்று நடித்தார். அதிர்ச்சியடைந்த இருவரும், ‘‘சிவபெருமானை தரிசனம் செய்த பிறகு எங்களை கொன்று சாப்பிடு’’ என்று புலியிடம் கேட்டுக் கொண்டனர். 

இதற்கு புலியும் சம்மதம் தெரிவித்தது. சிவபெருமான வணங்கிய பின்னர் 2 பேரும் மீண்டும் புலியிடம் சென்றனர். புலி உருவிலிருந்து விடுபட்ட சிவபெருமான், அவர்கள் முன்பு தோன்றி 2 பேருக்கும் முக்தியளித்தார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகையன்று, இங்கு சிவபெருமான் புலியாக உருவெடுத்த வைபவம் நடைபெறுகிறது. பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மார்கழி தேய்பிறை அஷ்டமியில் சிவபெருமான் படியளக்கும் வைபவம் நடக்கிறது. அன்று பஞ்சமூர்த்திகளும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். இந்திரனின் சாபத்தால் பதவியிழந்த வருணன், இங்குள்ள மூலவரை வேண்டி இழந்த பதவியை மீண்டும் பெற்றான். 

இதனடிப்படையில், பக்தர்கள் சிலர் இழந்த வேலை கிடைக்க வேண்டி, மூலவருக்கு சம்பா சாதம் படைத்து, ருத்ராபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பக்தர்கள் தங்களது நட்சத்திர நாள் அல்லது பவுர்ணமியன்று இந்த வழிபாட்டை செய்கின்றனர். பதவி உயர்வுக்காகவும், சிலர் இந்த வேண்டுதலை செய்கின்றனர். ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வேண்டுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் மூலவரை வேண்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் மூலவர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment