இறைவனை விட பெரியவன் யாருமில்லை என்பது உண்மைதான்... ஆனால் எல்லாம் கிடைத்தால் மனிதனும் பெரியவனாகிவிடுவானா என்ன? பணம், பதவி, அதிகாரம், புகழ் வரும்போது கூடவே வரும் அலட்சியத்தையும், கர்வத்தையும், அகம்பாவத்தையும் சேர்க்கக்கூடாது.. அப்படி சேர்த்தால் நகுஷனுக்கு நேர்ந்தது போல்தான் நமக்கும் உண்டாகும். அது சரி யார் இந்த நகுஷன்..
பரமபத விளையாட்டில் இருக்கும் பெரிய பாம்பு இவன் தான். இவன் தலைமேல் இருக்கும் கட்டத்தில் நின்றால் நாம் அகல பாதாளத்துக்கு வந்து சேர்வோம்.. நகுஷன் எப்படி பாம்பாக மாறினான் தெரியுமா? அது ஒரு சுவாரஸ்யமான கதை...
நகுஷமகாராஜா 100 அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவியைப் பெற்று விட்டான். இனி இந்திரனுடைய சிம்மாசனத்தில் அமரவேண்டும். ஆனால் இந்திரனின் சிம்மாசனத்தை விட இந்திராணியை அடைய வேண்டும் என்பதுதான் அவனது ஆசை... இந்திரனின் சிம்மாசனத்தில் அமரப்போகும் நாளை குறித்து தன்னை கோலாகலமாக வரவேற்க வேண்டும் என்று இந்திராணிக்கு தூது அனுப்பினான்.
மனம் கலங்கிய இந்திராணி செய்வதறியாமல் அகஸ்திய முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். கவலைப்படாதே இந்திராணி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்களித்தார் அகஸ்தியர்..
நகுஷன் இந்திராணியிடம் வரும் நாள் வந்தது.. முதல் பார்வையில் இந்திராணியைக் கவரவேண்டும் என்பதால் ரிஷிகள் பல்லக்குத் தூக்க கம்பீரமாக சென்றால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். உடனே ஆயிரம் ரிஷிகள் சேர்ந்து பல்லக்கு தூக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். வருங்காலத்தில் இந்திரனின் சிம்மாசனத்தில் அலங்கரிப்பவனாயிற்றே..அதனால் அவன் கட்டளைக்குப் பணிந்து எல்லோரும் பல்லக்கு தூக்க சம்மதித்தார்கள்.. ஆயிரம் ரிஷிகளில் ஒருவராக அகஸ்திய முனிவரும் இருந்தார்...
நகுஷன் பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான்.. முன்னாடி மேளதாளங்கள், வாத்தியங்கள் முழங்க ஊர்கோலமாக சென்றான். பல்லக்கு மெதுவாக ஊர்ந்தது.. ரிஷிகளின் மனம் வெறுப்பில் இருந்தது..நகுஷன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். எப்போது இந்திராணியைப் பார்ப்போம் என்று ஆவலாக இருந்தான். இந்திரனின் சிம்மாசனமும், இந்திராணியின் அருகாமையும் அவன் கண்ணை மறைத்தன...
இவ்வளவு மெதுவாக ஊர்ந்து போனால் எப்போது இந்திராணியை அடைவது என்று கோபம் வந்தது. உடனே கையிலிருந்த பிரம்பால் தமக்கு முன்பு பல்லக்கு தூக்கிய ரிஷியை சர்ப்ப..சர்ப்ப என்று சொல்லி அடித்தான்..சர்ப்ப என்றால் சீக்கிரம் என்று பொருள் உண்டு. சர்ப்பம் என்றால் நாகத்தைக் குறிப்பதும் உண்டு.
அடிவாங்கிய ரிஷி வேறுயாருமல்ல அகஸ்தியர்.. கோவம் கொண்ட அகஸ்தியர் ”துஷ்டனே.. எவ்வளவு அகம்பாவம் உனக்கு... பதவியைப் பெறுவதற்கு முன்பே எங்களைப் பல்லக்குத் தூக்கவைத்துவிட்டாயே... அதைவிட பெரிய தவறாய் எங்களை அடிக்கவேறு செய்துவிட்டாய் அதற்கு தண்டனையாக நீ பாம்பாக மாறுவாய்.. பூலோகத்தில் மலைப்பாம்பாக விழுந்து கிடப்பாய்” என்று சபித்துவிட்டார்.
ரிஷிகளின் சாபத்தைப் பற்றி அறியாதவனா என்ன நடு நடுங்கி விட்டான் நகுஷன்... உடனடியாக அகஸ்தியரின் கால்களில் விழுந்து சாபத்தைத் திரும்ப பெறுமாறு வேண்டினான். ஆனால் கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாததால் யுதிஷ்டரால் நீ சாபம் நீங்க பெறுவாய் என்றார்.
பெறுவதற்கரிய செல்வமோ, புகழோ, பொருளோ, பணமோ எது கிடைத்தாலும் அகம்பாவமும், அலட்சியமும் வந்துவிட்டால் கிடைத்தவையே கெடுதலாக முடியும் என்பதற்கு இதைவிட வேறு சான்று என்னவாக இருக்க முடியும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment