Tuesday 5 June 2018

ஐகோர்ட் மகாராஜா கீழக்கோயில் வேம்படி மாடன் ஆறுமுகமங்கலம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆறுமுகமங்கலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாடன் ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார்.

ஏரலை சேர்ந்த தெய்வத்தடியாபிள்ளை நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார். ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வருகிறார். இரட்டை சுடலைமாடசுவாமி கோயில் தாண்டி வரும்போது ஒரு மூட்டை மாயமாகி விடுகிறது. இது வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. மாதம் ஒன்றாகியும் காரணம் தெரியாமல் தவித்தார் தெய்வத்தடியாபிள்ளை. அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய சுடலைமாடன்.

உனது வண்டியிலிருந்து நெல் மூட்டையை நான் தான் எடுத்தேன் என்றும் எனது எல்லைக்குள் தொழில் செய்யும் நீ, என்னை கவனிக்கவில்லை என்றும் கூறுகிறார். அப்போது தெய்வத்தடியாபிள்ளை நான் முருகனுக்கு அடிமைப்பட்டவன். சைவம். உனக்கு பலி கொடுத்து பூச பண்ண என்னால முடியாது. உன் இருப்பிடம் தேடி வந்து நெல் கொடுக்கவும் முடியலயே எனக்கூறினார். உடனே சுடலைமாடன் அடுத்துவரும் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை என் கோட்டையிலிருந்து எட்டாவது விளங்காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும்  பனைமரங்களுக்கு இடையே ஒற்றையாய் நிற்கும் வேப்பமரத்தின் கீழ் புற்றாய் வளர்ந்து நிப்பேன். அவ்விடத்தில் எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா. உன்னையும் உன் சந்ததியினரையும் வளமோடு வாழ வைப்பேன். என் பேரை சொல்லி வரும் பக்தர்களுக்கு வேறுபாடு பாராமல் திருநீறு கொடுத்து அனுப்பு. அவர்களிடம்  எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்கிறேன். பூஜை செய்யும் பணிவிடையை நீ செய்தால் போதும் என்றுரைத்தார்.

சுடலைமாடன் சொன்னபடியே பனங்காட்டுக்குள் வேப்பமரத்தின் அடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. தெய்வத்தடியா பிள்ளை கோயிலை நிர்வகித்து பூஜை செய்து வந்தார். வேப்பமரத்தின் அடியில் தோன்றியதாலே இங்கிருக்கும் சுடலைமாடன் வேம்படி மாடன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த கோயில் கீழகோயில் என்று அழைக்கப்படுகிறது. மண் பீடமாக சுவாமி இருக்கிறார். மூலவர் இருக்கும் இடம் பனை ஓலையால் வேயப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தில் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் சுடலை மாடனின் உத்தரவிற்கிணங்க கொடை விழா நடத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர். அதாவது கொடை விழா நடத்தும் பொருட்டு, ஆடிமாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும் போது, பல்லி சத்தம் எழுப்பினால் அதை சுடலை ஆண்டவனின் உத்தரவாக ஏற்று கொடை நடத்த முடிவு செய்கின்றனர். பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால் குறிக்கப்பட்ட நாள், மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை. நாள், மாதம் மாறி கூட அந்த உத்தரவு வந்த பின்தான் கொடை நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். சுடலைமாடனே பல்லி ரூபம் கொண்டு உத்தரவு கொடுப்பதாக நம்புகின்றனர்.

ஐகோர்ட் மகாராஜா பெயர் வரக்காரணம் :

ஆறுமுகமங்கலத்தில் வசித்து வந்த செல்லையா சுடலைமாடனின் தீவர பக்தன். தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவர் கொடுத்தது என்று நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். சுடலையின் பெயரைக் கூறி யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார். தனக்கென்று ஒரு வீடும், சோறு போட சிறிய அளவில் நிலமும் வைத்திருந்தார். நிலத்தின் வரப்பு பிரச்சனையில் மூன்று பேரிடையே தகராறு இருந்து வந்தது. அதில் இவரது 3ம் சொக்காரன் என்ற உறவில் தம்பி முறை வரும் ஆண்டி என்பவரை பக்கத்து நிலத்துகாரர் சின்னத்துரை என்பவர் ஒரு நாள் சண்டையின் ஆத்திரத்தில் கத்தியால் குத்திவிடுகிறார். செத்து விட்டான் ஆண்டி என்று கருதி சின்னத்துரை அங்கிருந்து சென்று விடுகிறார். அந்த நேரம் வயலுக்கு வந்த செல்லையா உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண்டியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கு உயிர் போய்விடுகிறது.

இதைக்கண்ட ராசப்பனால் இந்த செய்தி கிராமத்திற்குள் பரவுகிறது. இறந்த கிடந்த ஆண்டிக்கும். அருகே ரத்தகறையோடு நிற்கும் செல்லையாவிற்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது அப்பகுதியினருக்கு தெரியும் என்பதால் செல்லையா மேல் கொலை பழி விழுகிறது. அவரது மனைவி பொன்னுதங்கம் கணவனிடத்தில் "ஈ, எறும்புக்கும் தீங்கு நினைக்காத என் ராசா நீயா, கொலை செஞ்ச" என்று கேட்க, "நீ, நம்புறியா புள்ள, ஊர் சொல்லட்டும், நான் கொலை செஞ்சிருப்பேன்னு நீ நினைக்கிறியா தங்கம்" என்று கேட்டபடி அழுதார் செல்லையா... அந்த நேரம் பிரிட்டீஸ் போலீஸ் வந்தது. செல்லையாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கொலை வழக்கு நெல்லையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அந்த காலத்தில் தாலுகா கோர்ட், ஜில்லா கோர்ட் என்று அழைத்து வந்தனர். ஜில்லா கோர்ட்டை உயர்ந்த கோர்ட்டாக கருதி, அதை பேச்சு வழக்கில் ஹைகோர்ட் என்பர். முதல் நாள் வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த செல்லையா, "ஐயா, நான் பழி, பாவங்களுக்கு அஞ்சுபவன், ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு மனதிலும், உடலிலும் துணிவு எனக்கில்லை. கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் என் ஆதரவின்றி பரிதவிக்கிறார்கள். நான் கொலை செய்யவில்லை, வக்கீல் வைத்து வாதாட வசதியும் இல்லை, என்னை விட்டு விடுங்கள்" என்றார்.

"நீ கொலை செய்யவில்லை என்றால், ஆண்டி, தன்னைத்தானே கத்தியால் குத்தி இறந்தாரா" என்று நீதிபதி கேட்க, அதற்கு செல்லையா "ஐயா என்னை தாயாய், தந்தையாய் காப்பவரான அந்த சுடலைமாடன். அவர் நிலை கொண்டிருக்கும் கோயிலின் நேர் கிழக்கு பக்கம் தான். இந்த சம்பவம் நடந்தது.  அதனால் அவருக்குத்தான் எல்லாம் தெரியும்.’’ என்றார்.  உடனே நீதிபதி, அப்படி என்றால் அவர் வந்து சாட்சி சொல்வாரா? என்று கேட்க, நீதிமன்ற அவையில் இருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர். செல்லையா, குற்றவாளி கூண்டுக்குள் சோகமாய் நிற்க, கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது.

நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும். என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.

இதனிடையே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற சின்னத்துரை, நாகம் தீண்டி, ஆண்டி இறந்த இடத்திலேயே இறந்த விடுகிறான். வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் இரவில் நீதிபதியின் கனவில் " மேல சட்டை இல்லாமல் தலையில் தலைப்பாகை கட்டியவாறு வெள்ளை வேட்டியுடன் வந்த ஒருவர், ஆண்டியை கத்தியால் குத்தி சின்னத்துரை கொன்றதாகவும், செல்லையா குற்றம் செய்யாதவர் என்பதையும் கூறினார். மறுநாள் காலை விடிந்தது. இரவில் ஒரு விசாரணை தொடர்பான கனவை கண்டதில் வியப்பும், குழப்பமும், நம்ப முடியாத நிலையும் கொண்டு, அன்றைய தினம் நீதிமன்றம் வந்தார். நீதிபதி.

விசாரணை தொடங்கியது. குற்றவாளி கூண்டுக்குள் செல்லையா, சுடலைமாடனை எண்ணிக்கொண்டு எந்த தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் நின்று கொண்டிருந்தார். நீதிபதி அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? என்று கேட்க, செல்லையா அவரிடம், ஐயா... என்றபடி பதில் சொல்ல முடியாமல் நீதிபதியின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தார். அப்போது கோர்ட் வளாகத்திலிருந்து விரைந்து வந்த காவலர்கள், ஐயா, ஆண்டி கொலை வழக்கு தொடர்பா, சாட்சி சொல்ல ஒரு ஆள் வந்திருக்கிறார் என்றதும். வரச்சொல்லுங்கள் என்றார். நீதிபதி. வெள்ளைக்குதிரையை விட்டு வந்திறங்கிய வாட்ட சாட்டமான தேகம் கொண்ட அந்த நபர் முறுக்கு மீசையுடனும், மேல்சட்டை அணியாமல், வெள்ளை வேட்டியுடன் கையில் வேல் கம்புடனும் வந்து நின்றார். சற்று திகைப்புடன் பார்த்தார் நீதிபதி. ஆம், இரவு கனவில் வந்த அதே நபர். "ம்.. என்ன, சொல்ல போகிறீர்கள்" என்றார்..

தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை எடுத்து தனது இடது கைப்பக்கவாட்டில் வைத்துக்கொண்டு வணக்கம் செலுத்தி விட்டு, ‘‘ஐயா, நான் செந்தூரிலுள்ள சண்முகநாதன் பண்ணைவீட்டு காவலாளி என்றார். உடனே குறுக்கிட்ட வழக்கறிஞர், குதிரையில கம்பீரமா வந்திருக்கியே நீ என்ன ராஜாவா என்று கேட்க, ஆமாங்கய்யா, நான் ராஜாவக்கு எல்லாம் ராஜா மகாராஜா என்றார். என்ன ஆணவம் என்ற வழக்கறிஞரிடம், இல்லங்கய்யா என் பேரே மகாராசா தான் என்றுரைத்தார். சரி, வந்த காரணத்தை கூறுங்கள் என்று நீதிபதி கூற, சம்பவம் அன்று ஆறுமுகமங்கலம் வழியாக வந்தபோது கொலை சம்பவத்தை கண்டேன் என்றும் செல்லையா குற்றவாளி அல்ல அவன் நிரபராதி என்றும், குற்றவாளி சின்னத்துரை தான், அவனும் நாகம் தீண்டி இறந்து விட்டதாகவும்’’ கூறினார்.

நீதிபதி கூறினார். சரி,நீங்கள் போகலாம் என்ற கூற, அவ்விடம் விட்ட அகன்றார். கூண்டிலிருந்து இறங்கியவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை. மாயமானார் மாயாண்டி. அவர் நின்ற கூண்டிலிருந்து  பிச்சிப்பூ(ஜாதி மல்லி) மணம் கமிழ்ந்தது. கோர்ட்டில் அனைவரும் திகைத்தனர். நீதிபதி செல்லையாவை அழைத்து ‘‘உன் சாமி பேரென்ன சொன்ன’’ செல்லையா சொன்னார் ‘‘சொள்ள மாடன்’’ ம்..ம்.. யுவர் கார்டு ஸ் கிரேட்’’ என்று கூறி, ஆண்டி கொலை வழக்கிலிருந்து செல்லையாவை விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி. ஐகோர்ட்டில் சாட்சி சொல்லி, தன்னை நம்பிய பக்தனை காப்பாற்றியதால் அன்று முதல் ஆறுமுகமங்கலத்து சுடலைமாடன் ஐகோர்ட் மகாராசா என்றழைக்கப்பட்டார்.

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இனைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment