கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒன்றான, ஆனைமலை கிளை நதியான உப்பாற்றங்கரையில், கொங்கு நாட்டின் காவல் தெய்வமான அருள்மிகு மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்தகைய மாசாணியம்மன் தெய்வத்தை ஸ்ரீராமர் பூஜை செய்து வணங்கி அருள் பெற்றதாக வரலாறு உண்டு. மாசாணியம்மனின் சிறப்புக்கு காரணம், மூலவுரு அமைப்பின் தனித்தன்மையே ஆகும். பொதுவாக மற்ற கோயில்களில் அம்பிகையின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் ஆனைமலை மாசாணியம்மனின் தோற்றம், மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் உள்ளாள்.
முன்னோர் காலத்தில், இந்த கோயில் ஓலைக்கூரையாக அமைக்கப்பட்டு மாசாணியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பின் ஓட்டுக்கூரையாகவும், அதன்பின் மகா மண்டபம் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த கோயிலில் சிற்ப வேலை பாடுகளுடன் கூடிய 5நிலை ராஜகோபுரம் உள்ளது. மகா சக்தியான மாசாணியம்மன் நீதி தேவதையாக விளங்குவதால், இங்கு நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிக்கல்லில் பில்லி, சூனியம், மந்திரம், ஏலல், நம்பிக்கை துரோகம், மோசடி போன்ற பகையால் பாதிக்கப்பட்டவர்களும், பொருள் திருட்டு போனவர்களும் மிளகாயை நீத்திக்கல்லில் அரைத்து பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்கின்றனர்.
தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால், தவறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கையாகும். மிளகாய் அரைத்து நீதி வேண்டிய பபின், தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு மிளகாய் காப்பு நடத்திட வேண்டும். எந்தவித வேண்டுதல்கள் உள்ளனவோ, அதனை ஒரு சீட்டில் எழுதி கொடுத்தால் அதனை அம்மனின் கையில் கட்டி விடுவார்கள். அந்த கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தி மகிழ்வது சிறப்பாகும். குழந்தைபேறு இல்லாதவர்கள் அம்பிகையின் திருமுன் வந்து குறிப்பிட்ட வாரங்களுக்கு வேண்டி அவர்கள் குழந்தை செல்வம் பெற்று தாயும், சேயுமாக வந்து வழிபாட்டை நடத்தி செல்வது மற்றொரு சிறப்பாக உள்ளது.
மாசாணியம்மன் கோயிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றகோரி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் கோவிலுக்கு வந்து முடி இறக்கி வழிப்பட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், கோயில் கொடிமரத்து அடியில் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை வழிபடுவது பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில், அம்மனின் பாதத்தில் கருப்பு கயிர் வைத்து வழிபட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அக்கயிற்றை கட்டி கொண்டால் எந்தவித தீவினையும் வராது, துன்பம் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகம் உண்டு. மாசாணியம்மனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தார்கள் திரளாக வந்து தரிசித்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடனாக புடவை செலுத்தி வழிபடுகின்றனர்...
No comments:
Post a Comment