Thursday, 31 May 2018

காந்தாரி அம்மன் வரலாறு

கல்லிடைக்குறிச்சி நெல்லை

நாக கன்னியின் வயிற்றில் பிறந்த உமையாளின் அம்சமான அஷ்ட காளியர்கள், சிவபெருமானிடம் வரங்கள் பெற்று, கயிலாயத்திலிருந்து பூலோகத்தின் பொதிகை மலைக்கு வந்தனர். பிறகு ஒவ்வொருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திருவிளையாடல் நடத்தி அந்தந்த இடங்களிலேயே கோயில்கொண்டு, தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர். அந்த அஷ்ட காளியரில் எட்டாவதாக அவதரித்தவள், காந்தாரியம்மன். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது கல்லிடைக்குறிச்சி. இயற்கை வளமும், இறையருளும் நிறைந்த ஊர். ஊரைச் சுற்றி சிவனுக்கும், ஊரின் நடுவே பெருமாளுக்கும் கோயில்கள் உள்ளன. ராமச்சந்திரபுரத்தில் சிதம்பரேஸ்வரர் என்ற மானந்தியப்பர் மற்றும் கோட்டைத்தெருவில் குலசேகரமுடையார் என சிவபெருமானும், தாயார் லட்சுமியுடன் ஆதிவராகப் பெருமாளும் கோயில்கள் கொண்டுள்ளனர்.

காவல் தெய்வங்களின் முதன்மை தெய்வமான சாஸ்தாவுக்கும், அஷ்ட காளியருக்கும் இங்கே கோயில் உண்டு. ஆதிவராக பெருமாள் கோயிலுக்கு தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதற்கு கொடியேற்றம் நிகழ்ச்சி  நடத்தப்பட வேண்டும். என்பதால் பக்தர்கள் ஒன்றுகூடி பாண்டிய மன்னன் வம்சா வழியைச் சேர்ந்த ஜமீன்தாரிடம் முறையிட்டனர். உடனே அவர், எனக்கு இறைப்பணி செய்ய ஒரு வாய்ப்பினை பெருமாளே கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக மரத்தை வெட்டி கோயிலுக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறேன் என்று உறுதி கூறினார். கொடிமரம் வெட்ட நாள் குறிக்கப்பட்டது. தனது ஆட்களை அனுப்பி தனக்கு சொந்தமான கட்டள மலை எஸ்டேட்டிலிருந்து மரம் வெட்டி வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.

கல்லிடைக்குறிச்சி ஊர் எல்லையில் தற்போது காந்தாரி அம்மன் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்தபோது, அச்சாணி முறிந்து வண்டி அவ்விடத்திலிருந்து நகர இயலவில்லை. அதிகமான ஆட்கள் முயன்றும் வண்டி நகராததால், யானையை கொண்டு வந்து மரத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. பிறகு நம்பூதிரியை வரவழைத்து பிரசன்னம் பார்த்தனர். அப்போது கொடிமரத்துடன் அஷ்டகாளியரில் ஒருவரரான பெண் தெய்வம் ஒன்று வந்திருப்பதாகத் தெரியவரவே, உடனே, இவ்விடத்தில் சிலை  அமைத்து பூஜை செய்தனர். பின்னர் அச்சாணி பூட்டி வண்டியை நகர்த்த, வண்டியும் வெகு எளிதாக நகர்ந்தது. கொடிமரம் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறியதாக அன்று உருவாக்கப்பட்ட கோயிலுக்கு எட்டாவது பூஜை நடத்தும்போது அருள்வந்து ஆடிய ஒருவர் தனது பெயர் காந்தாரி அம்மன் என்றும் எனக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் கூற, அதன்படி கோயில் எழுப்பப்பட்டது. பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இந்தக் கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்டதாக உள்ளது. இருப்பினும் அனைத்து சமூகத்தினரும் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு கஷ்டங்களை நீக்கி கவலைகளை போக்கி காத்தருள்கிறாள் காந்தாரி அம்மன்.

இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவிலுள்ள கல்லிடைக்குறிச்சியில், மணிமுத்தாறுசிங்கம்பட்டி சாலையில் அமைந்துள்ளது. கோயிலில் மூலவர் காந்தாரி அம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடைவிழாவும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் நடைபெறும் சூறை விழாவில், அம்மனுக்கு ஆடும் நபர் கோயில் பூஜையின்போது மஞ்சள் நீராடி அம்மன் அருளோடு ஊருக்குள் மேள தாளத்துடன் நகர்வலம் வருவார். ஊரில் ஒவ்வொரு வீட்டு முன்பும் குடத்தில் நீர் நிரப்பி, அதன்மேல் வேப்பிலை வைத்திருப்பார்கள். குடத்தின் மேற்பரப்பில் மஞ்சள் அரைத்து வைத்திருப்பார்கள். அம்மன் ஆடுபவரோடு வரும் நபர்கள் அந்த மஞ்சளை குடத்து நீரில் கரைத்து அவர் மேல் விடுவர். இதனால் அம்மனே தன் இல்லம் வந்து நீராடுவதாக பக்தர்கள் எண்ணுகின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பூச்சி அம்மன் வரலாறு

உழக்குடி நெல்லை

திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ளது கலியாவூர். இங்கு விவசாயம் செய்து வந்தார் இருளப்பன். நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு  ஐந்தாவதாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் சந்தோஷத்துடன், ‘‘செத்துப்போன என் ஆத்தா, எனக்கு மவளா பொறந்திருக்கா’’ என்று  பெருமிதம் கொண்டார். மகளுக்கு தனது குல தெய்வமான பொயிலம் குளத்து கரையிலிருந்த அம்மன் பெயரை இட்டார். பொயிலம் குளத்தாள், செல்லமாக  பொயிலாள் என்றாகி சீரும் சிறப்புமாக வாழ்ந்துவந்தாள். அவள் பத்து வயது சிறுமியாக இருக்கும்போது அடுத்தடுத்து பெற்றோர் இறந்தனர். அன்னை தந்தை  இல்லாத குறையை போக்க, அண்ணன்மார்கள் நாலு பேரும் தங்கை மேல் அளவற்ற பாசம் கொண்டிருந்தனர்.

தங்கையின் நலனுக்காக மூத்த அண்ணன் மணமுடித்துக் கொண்டான். மனைவியிடம் எனது தங்கை தாயாக இருந்து கவனிப்பதே உனது கடமை என்றுரைத்தான்.  நாட்கள் நகர்ந்தது. பொயிலாள் பருவம் வந்தாள். உருவம் மாறினாள். படைத்த பிரம்மனே பெருமை கொள்ளும் பேரழகுடன் திகழ்ந்தாள். இரண்டாவது அண்ணனும்  திருமணம் செய்து கொண்டான். அண்ணியர் இருவரும் நாத்தனார் பொயிலாளை அன்போடும், அரவணைப்போடும் நடத்தினார்கள். ஒருநாள் மாலைநேரம் தனது  தோழிகளோடு அந்த ஊருக்குப் பொதுவான மடத்துக் கிணத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஊரின் சாலையில் சென்று கொண்டிருந்தாள். அந்த நேரம் வல்ல  நாட்டிலிருந்து முத்துப்பாண்டி, சீவலப்பேரி சந்தைக்கு பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை ஓட்டிச் சென்றான்.

மாடுகளின் காலடிச் சத்தம் கேட்டு வேகமாக திரும்பிய பொயிலாள், ‘‘ஏய், ஒதுங்குங்கடி மாடு வருது’’ என்று தோழிகளை எச்சரித்தாள். கூடவே,  மாடுகளின்  பின்னால் வந்த முத்துப்பாண்டியை பார்த்து, ‘‘யேவ், என்ன மனுஷன்யா நீ, மாட்டை பத்திட்டு வந்தா சொல்ல மாட்ட?’’ என்று கோபமாகக் கேட்டாள். ‘‘இந்த  பாரும்மா, நீங்கதான் ஒதுங்கி போகணும். இது என்ன உங்க பாட்டன் போட்ட பாதையா’’ என்று அவன் திருப்பிக் கேட்டான். கூடவே, ‘‘நீ யாருக்கு மொவ’’  என்று பொயிலாளைக் கேட்டான். பொயிலாள் கம்பீரமாக சொன்னாள்: ‘‘பட்டகருப்பன் தங்கச்சி.’’ ‘‘உங்க மூணாவது அண்ணன் சடையப்பன் என்  சேக்காளியோட கூட்டாளிதான்.’’ ‘‘அதெல்லாம் இருக்கட்டும் சும்மா இங்கே பாத்துட்டு போவாம, முன்ன பார்த்து நடங்க.’’ என்றபடி அவர்கள் கிணத்துபக்கம்  திரும்ப, அவர்களை கடக்கும்வரை, பொயிலாளை திரும்பி, திரும்பி பார்த்துச்சென்றான் முத்துப்பாண்டி.

சில தினங்களுக்கு பின்னர் முத்துப்பாண்டி, பொயிலாளின் மூன்றாவது அண்ணன் சடையப்பனை சந்தித்து அந்தப் பகுதியில் மாடுகள் விற்றால் தனக்கு வாங்கித்  தருமாறும் அதற்குரிய பங்குத்தொகையைத் தருவதாகவும் சொன்னான். மங்கை பொயிலாளை பார்ப்பதற்காக, அவளது அண்ணன்மார்களுடன் மாடு வியாபாரத்தை  முன்வைத்து நட்பை உருவாக்கிக்கொண்டான் முத்துப்பாண்டி. அந்த நட்பில் அடிக்கடி பொயிலாள் வீட்டுக்கு வருவதும், அவளோடு சாடைக்காட்டி பேசுவதுமாக  அவர்களிடையே உறவு வளர்ந்தது. ஒருநாள் அவன் வந்தபோது யாரும் இல்லாததால் பொயிலாளிடம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த  இரண்டாவது அண்ணி, ‘‘என்ன தம்பி, ஆம்பிள இல்லாத வீட்டில் சமஞ்ச புள்ளகிட்ட பேசிட்டு இருக்கேளே.’’ என்று கேட்டதும், பொயிலாள் குறுக்கிட்டு  ‘‘மைனி, இவிய இப்பத்தான் வந்தாவ ’’என்றாள்.

‘‘சரி, உங்களுக்கு என்ன வேணும் தம்பி?’’

‘‘உங்க நாத்தனாரு வேணும்.’’

‘‘என்னது?’’

‘‘உங்ககிட்ட நடவுக்கு நாத்து இருந்தா வாங்கிட்டு போவ வந்தேன். நீங்க பேசுனிதல நாக்கு உளறுது.’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்  முத்துப்பாண்டி. மாதங்கள் கடந்து வளர்ந்தது அவர்களது காதல். ஒருநாள் மாலைநேரம் தண்ணி எடுக்க வந்த பொயிலாள், ‘‘உங்க குடும்பத்திலயும், சாதி  சனத்திலயும் என்ன ஏத்துக்கு வாங்களா?’’ என்று கேட்க, ‘‘அவங்க ஏத்துக்கிறத விடு, இந்த மண்ணை விட்டு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர, உன்னை  விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னை நம்பி வந்தா உசுரையும் தருவேன்,’’ என்று உறுதியளித்தான் முத்துப்பாண்டி. பிறகு அவன், ‘‘அப்புறம் என்ன தயக்கம்?  வா, ஊரைவிட்டு போயிருவோம்’’ என்று கூறினான்.

அடுத்த புதன்கிழமை மாலைநேரம் ஊரை விட்டு ஓடிப்போக முடிவு எடுத்தனர். குறிப்பிட்ட வேளையில், தனது மூத்த அண்ணனின் மகள் ஒயிலாவோடு  விளையாடிக்கொண்டிருப்பதாக அண்ணியிடம் கூறிவிட்டு பொயிலாள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவர்களுடன் பொயிலாள் செல்லமாக வளர்த்து வந்த  பூச்சி என்ற நாயும் உடன் சென்றது. ஒயிலாவின் கண்ணை துணியால் கட்டிவிட்டு தன்னை தேடும்படி கூறிவிட்டு அங்கே இருந்த செடிகளின் நடுவே ஒளிந்து  கொண்டாள் பொயிலாள். அவளை ஒயிலா கண்டுபிடித்து விட, உடனே அருகே நின்ற நாயுருவி செடியை பிடுங்கி, ஒயிலா மேல் அடித்தாள். நாயுருவி விதைகள்  ஒயிலா துணிமீது ஒட்டிக்கொண்டது.

‘‘என்ன, அத்தே. நாயுருவி காய், என் பாவாடை மேல முழுதும் ஒட்டிகிட்டு.’’ என்று சிணுங்கினாள் ஒயிலாள்.‘‘ஒயிலா இதை ஒவ்வொண்ணா எடுத்து  முடிச்சிட்டு, என்னைய கண்டு பிடிக்கணும். அதுவரை அத்தை ஒளிஞ்சிருக்கேன்’’ என்றாள் பொயிலாள். அவளும் சம்மதிக்க, பொயிலாள் அங்கிருந்து கிளம்பி,  மடத்துக்கிணத்துப் பக்கம் ஒதுங்கி நின்ற முத்துப்பாண்டியுடன் புறப்பட்டுச் சென்றாள். நாயுருவி விதைகளை எடுக்க முடியாமல் அவதிப்பட்ட ஒயிலா, வீட்டுக்கு  பாவாடையை மாற்ற சென்றாள். அப்போது அவளது தாய் ‘‘அத்தை எங்க? நீ மட்டும் வார?’ என்று கேட்க, ‘‘அத்த அங்க ஒளிஞ்சிருக்கியாவ, நான் போய்  கண்டு புடிக்கணும்,’’ என்றாள். ‘‘நீ ஒண்ணும் கண்டு பிடிக்க வேண்டாம். கருக்கலாயிற்று, நீ வீட்டுல உட்காரு, நான் போயி அவள கூட்டிட்டு வாரேன்.’’  என்று கூறியவாறு தன் ஓரகத்தியையும் அழைத்துக்கொண்டு பார்க்க, பொயிலாளையும், பூச்சி நாயையும் காணவில்லை.

வீட்டுக்குத் திரும்பி அண்ணன்மார்களிடம் சொன்னார்கள். பொயிலாளும், முத்துப்பாண்டியும் உழக்குடி கிராமத்திற்கு வந்தனர். அங்கு அடர்ந்த காட்டுக்குள் முள்  முருங்கை செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்தனர். இரவு முழுவதும் தேடி ஓய்ந்து போன அண்ணன்மார்கள், மறுநாள் காலையில் தேட தொடங்கினர். உழக்குடி  கண்மாய் கரையோரம் இருந்தவர்களிடம் விசாரிக்க, காட்டுக்குள் பதுங்கி இருக்காங்களான்னு பாருங்க என்று தகவல் கிடைத்தது. ‘‘ஏலே, காட்டுக்குள்ள தான்  பதுங்கியிருக்கணும். அந்தப் பனமரத்து மேலே ஏறி பாருல’’ என்று மூத்தவன் கூற, அதன்படி இரண்டாவது அண்ணன் ஏறிப் பார்த்தான். சற்றுத் தொலைவில்  அடுப்பு கூட்டி சமையல் நடப்பதும், அருகே நாய் ஒன்று படுத்திருப்பதும், முத்துப்பாண்டி மார்பில் தலை வைத்து பொயிலாள் படுத்திருப்பதும் தெரிந்தது.  ‘‘அண்ணே நாம மோசம் போயிட்டோம், அந்த வல்லநாட்டுக்காரன், நம்ம தங்கச்சிய சீரழிச்சுப்புட்டான்.’’ என்று கத்தினான்.

அண்ணன்கள் நான்கு பேரும் அந்த இடம் நோக்கி விரைந்தனர். முத்துப்பாண்டியை கண்ட துண்டமாக வெட்டி எறிந்தனர். அப்போது அண்ணன்களை தடுத்து  சபித்தாள் தங்கை. அவளையும் வெட்டிக் கொன்றனர். நாய் குரைத்தது. ‘நாம வளர்த்த நாயும் நமக்கு துரோகம் பண்ணிட்டு’ என்று கூறியபடி அதையும்  வெட்டிக்கொன்றனர். இந்தத் தகவல் வல்லநாட்டுக்கு தெரிந்தது. முத்துப்பாண்டியின் அண்ணன்கள், மாமன் மச்சான் உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர்  வந்து பொயிலாள் அண்ணன்களை வெட்டிக்கொன்றனர். கடைசி அண்ணன் மட்டும் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றான். பொயிலாள் இறந்த எட்டாவது நாள்  உழக்குடி கிராமத்தில் கிடையில் (பட்டியில்) இருந்த ஆடுகள் அனைத்தும் மடிந்தன. இப்படி பல பேருக்கு நடந்தது.

அவர்கள் குறி கேட்டனர், ‘‘ சாமியோவ், ஒடங்காட்டுக்குள்ள வெட்டுப்பட்டு மாண்டு போன ரெண்டு உசுரும், கயிலாயம் போகாம இங்கே சுத்திகிட்டு இருக்கு,  அவங்க சாவுக்கு ஏதோ ஒரு வகையில் நீங்க காரணமாயிட்டிங்க, அதனாலதான் உங்க மாடு, கண்ணுங்க துள்ள, துடிக்க சாவுது. உடனே அவங்களுக்கு கல்லு  நட்டு வச்சு, துணி மணிக எடுத்துவச்சு, பண்ட பலகாரம் செஞ்சு வச்சு பூச பண்ணுங்க. எல்லாம் சரியாயிரும்’’ என்று பதில் வந்தது. அதன்படி பொயிலாளுக்கும்,  முத்துப்பாண்டிக்கும், பூச்சி நாய்க்கும் சிலை அமைத்து கோயில் எழுப்பி படையல் வைத்து பூஜை செய்தனர்.

அதன் பின்னர் பொயிலாள் தெய்வமானாள். பொயிலாம் பூச்சி அம்மன் என்றும், பூச்சி அம்மன் என்றும் இந்த கோயில் அழைக்கப்பட்டு வருகிறது.  முத்துப்பாண்டியை முத்துப்பட்டன் என்று அழைக்கின்றனர். (சொரிமுத்தையன் கோயில் முத்துப்பட்டன் வேறு). பொயிலாளின் கடைசி அண்ணன் தனது முதுமை  காலத்தில் தங்கைக்கும், முத்துப்பட்டனுக்கும் தனது நிலத்திலே கோயில் கட்டியுள்ளார். இந்தக்கோயில் உழக்குடியில் அமைந்துள்ளது. இங்கு கொலுவிருக்கும்  பொயிலாம் பூச்சி அம்மன் சுத்து வட்டார மக்கள் அனைவருக்கும் பொன்னான வாழ்வளித்து வருகிறாள். பூச்சியம்மன் கோயிலுக்கு நெல்லையிலிருந்து சீவலப்பேரி  வழியாக 18 கி.மீ ஆட்டோவில் பயணித்து செல்லலாம். உழக்குடி வல்லநாட்டில் இருந்து 16 கி.மீ தூரம் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அழகர்கோவில் வரலாறு

பதினெட்டாம் படி காவல் ஏன்?!?

வளம் மிக்க  கேரள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் ,ஒருமுறை  பாண்டிய நாட்டில் உள்ள திருமாலிருஞ்சோலை  என்னும் திவ்விய தேசமான அழகர்கோவில் வந்தான் பள்ளிகொண்ட ,அழகே உருவான கள்ளழகரை தரிசித்தான் . அழகரின் அழகை கண்ட அந்த அரசன் அதை உருவேற்றி சக்தியேற்றி  தம் தேசமான கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டினான் . நாடு திரும்பிய அரசன் ,மந்திர ,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளை தேர்வு செய்து அழகரின்  சக்தியை எடுத்து அழகரை கேரளம் தூக்கி  வரும்படி கட்டளையிட்டான்.

பதினெட்டு மந்திரவாதிகளும்   மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள் . பதினெட்டு மந்திரவாதிகளுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலை நோக்கி புறப்பட்டனர்.

அனைவரும் அழகர் மலையை  அடைந்தனர்.  அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது . அழகரின் அழகிய  தங்க ஆபரணங்களை கண்ட 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து ,ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கி சென்றனர்.

இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட அடியார்  ஒருவர் ,ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல ,மக்கள் அனைவரும் திரண்டு வந்து ,அந்த 18 பேரையும் கொன்று ,களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் .

தன்னிடம்  மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய இறைவன் கருணை கொண்டார் . காவல் தெய்வம் கருப்பசாமிக்கு காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து ,"என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார் ".காவல் தெய்வமான கருப்பசாமி இம்மலையில் தங்கி இருந்து அழகர் மலையை இன்று வரை காத்து வருவதாக நம்பிக்கை உள்ளது.

காடு வீடெல்லாம்  முன்னோடியாய் காவல் புரிந்து  மக்களை காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார் . 18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது  நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் .  ஒருநாள்  கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் மலையையும் காப்பேன் ,திருமாலின் அர்த்த ஜாம  பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது .

அழகர் தானும் ஒரு சபதம் செய்தார்.
தன் கோவில் பொருட்களை கருப்பசாமியிடம் காவலுக்கு  ஒப்படைத்து விட்டு...தான் இனிமேல் கோபுர வாசல் வழியாக வெளியே வரமாட்டேன் என்று முடிவு செய்தார்....ஆடி 18 ம் தேதி மட்டும்..கோபுரக்கதவைத்திறந்து வைத்தவுடன் ..சுந்தரராஜப்பெருமாள் சுதர்சன சக்கரம் வெளியே சென்று வருவதாக ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சங்கிலி பூதத்தார் சுவாமி வரலாறு

ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள்,சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார். எங்கள் தாத்தா மற்றும் பல குடும்ப உறுப்பினர்களுக்கு 'ராக்‌ஷ முத்து' என்பதே பெயராகும். சென்ற தலைமுறையில் ராக்‌ஷச முத்து என்பதை 'ராமு' என்று சுருக்கியும் பெயராக இட்டு உள்ளார்கள்.

அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும்,வித்தகருக்கெல்லாம் வித்தகரும்,முக்கண் மூத்தவருமான  எம்பெருமான் சிவபெருமான்பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். அதனால்தான் தந்தையான முக்கண் மூர்த்தியின் நெல்லையப்பர் கோயில் மற்றும் பல சிவன் கோயில்களிலும், தாயான பார்வதியின் அம்மன் கோயில்களிலும், சகோதரர்களான முருகனது திருச்செந்தூர், வள்ளியூர் , ஐயப்ப சாஸ்தாவின் சொரிமுத்தையனார் கோயில் , மற்றும் மாமாவான பெருமாளின் நம்பி கோயில் போன்ற பல கோயில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பாதுகாத்து வருகிறார்.சிவபெருமானின் பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாகிய 'பூதராஜா' சங்கிலி பூதத்தார் சுவாமியின் பெயரினை அவரது பக்தர்களின் குடும்பத்தில் வாரிசாக வரும் ஆண் பிள்ளைகளுக்கு ‘பூதராஜா’,'பூதராசு', ‘பூதத்தான்’ ,'பூதப்பாண்டி' என்றும் பெண்பிள்ளைகளுக்கு ‘பூதம்மாள்’, ‘பூதம்’ மற்றும்தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் ‘பூதராஜா’வை சுருக்கி ‘பூஜா’ என்றும் பெயர் சூட்டி வருகிறார்கள்.

இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார்.ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.

கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத  பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால்  பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்'  (சட்டைநாதன்)  என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.

‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட பூதத்தார் பெருங்கோபமும் கொண்டவர். பக்தர்கள் செய்யும் தவறுகளை பொறுமையோடு ஏற்று முதலில் குறிப்பால் உணர்த்துவார். அப்படி அய்யன் காட்டும் குறிப்புகளை உணராமல் மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கிவிடுவார். ஆம். 'விதி மீறினால் விதி முடித்திடுவார்'.

பல இடங்கள் சுற்றி பர்வத மலைக்கு வந்த பூதத்தாருக்கு ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தின் அழகும், அமைதியும் பிடித்து போய் விட அந்த மலையிலே மிகவும் பிரமாண்டமாக, ஓங்கி, உயர்ந்து, வளர்ந்த சந்தன தேக்கு மரத்தில் குடி அமைத்து தியான நிஷ்டையில் இருந்து வந்தார். பர்வதமலையடிவார ஊரில் முத்து செட்டி, சீனி செட்டி, முத்துராக்கன் செட்டி என்ற மூன்று சகோதரர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேட எண்ணம் கொண்ட மூவரும் கடல் கடந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்ல வல்லம் (கப்பல்) செய்ய முடிவெடுத்து மரம் தேடி பர்வத மலைக்கு வந்தனர்.

ஆள், அம்பு, ஆசாரிகள், கருவிகளோடு பல இடங்களில் சுற்றி அலைந்தும் பொருத்தமான மரம் கிடைக்காத செட்டி சகோதரர்களின் கண்ணில் சங்கிலி பூதத்தார் குடியிருக்கும் வானளாவ ஓங்கி, உயர்ந்த பிரமாண்டமான சந்தன தேக்கு மரம் பட்டது. அழைத்து வந்த ஆசாரிகளும் வல்லம் செய்ய அனைத்து அம்சங்களும் கொண்ட மரம், இந்த மரம்தான் என உறுதி செய்ய மரத்தை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆரவாரக்கூச்சல்களினால் நிஷ்டை கலைந்த பூதத்தார் காட்டிய குறிப்புகளை உணராத செட்டி சகோதரர்கள் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, கடுங்கோபம் கொண்ட பூதத்தாரின் திருவிளையாடலால் மரத்தின் மீது முதல் வெட்டு விழும் முன்பே கோடாரிக் காம்பு உடைந்து, தெறித்து கோடாரியானது மரவெட்டியின் தலையை துண்டாக்கி தலை வேறு, முண்டம் வேறாக்கியது.

ஆனால் எடுத்த காரியத்தில் பிடிவாதம் கொண்ட அந்த அகங்கார, ஆணவ செட்டி சகோதரர்கள் மந்திரவாதியை அழைத்து மேற்கொண்டு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க மாந்திரீகம் செய்து, கருங்கிடா வெட்டி பலியிட்டு தந்திர பூஜைகள் செய்ய சுத்த வீர சைவரான சங்கிலி பூதத்தார் இரத்தத்தீட்டு பட்டதால் மரத்தை விட்டு இறங்கி வெளியேறினார். பின் மரமானது வெட்டப் பட்டு, வல்லம் கட்டப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டமும் விடப்பட்டது.பின் முறையான ஹோமங்கள் வளர்த்து, பூஜைகள் செய்து தீட்டெல்லாம் கழிக்கப்பட்டு பொருள்களை ஏற்றி புறப்பட்ட கப்பலில் பெருங்கோபத்தோடும், ஆவேசத்தோடும் ஏறிய பூதத்தார் நடுக்கடலில் கடும்புயலாய், பெருமழையாய், கொடும் சூறாவளியாய் உருமாறி, சங்கிலியால் ஓங்கி அடித்து, கப்பலை தாக்கி, சிதைத்து, பல துண்டு, துண்டுகளாக்கி   ஆணவ செட்டி சகோதரர்களையும் கடலில் மூழ்கடித்து அழித்து விட்டு திருச்செந்தூரில் கரை ஏறினார்.

அடக்க முடியாத ஆவேசத்தோடும், ஆக்ரோஷத்தோடும் திருச்செந்தூர் வந்த பூதத்தாரை அமைதிப்படுத்திய சகோதரரான சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோயில் மூலஸ்தானத்திலும், கோபுர வாசலிலும், பக்தர்கள் தங்கும் மடங்களிலும் , கடற்கரையில் நாழிக்கிணற்றிலும், மற்றும் ஊருக்கு உள்ளேயும், வெளியேயுமாக இருபத்தி ஒன்று நிலையங்களை உருவாக்கி கோவிலுக்கும், வரும் பக்தர்களுக்கும், காவல் தெய்வமாக பூதத்தாரை இருக்கச் செய்தார்.திருச்செந்தூர் சென்றால் தவறாமல் பாருங்கள். மூடி வைக்கப்பட்டிருக்கும் ராஜகோபுரக் கதவின் இடது பக்கத்தில்  சங்கிலி பூதத்தாருக்கு துடியான  நிலையம் (பெரிய சிலை கொண்ட சிறிய கோயில்) இருக்கும்.

கைலாயத்திலும்,பர்வத மலையிலும் குளுமையாக இருந்த பூதத்தாருக்கு கடற்கரை சூடு பிடிக்காமலும், நியாய தர்மத்தில் சிறந்த வீரபாகுத் தேவருக்குப் பின் புதிதாக வந்த ஊழல் தர்மகர்த்தாவான பழனியாப்பிள்ளை போட்ட கல், மண் கலந்த நைவேத்தியங்களாலும் வயிற்றுவலி வந்துவிட முருகரிடம் தகவல் கூறிவிட்டு, தவறு செய்த தர்மகர்த்தாவையும் தண்டித்து விட்டு குளுமையான இடமான களக்காடு மலைக்கு வந்து, சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி குளித்து, உடல் சூட்டை தணிக்க வசதியாக, ஆற்றங்கரை மேலிருந்த பாறையில் சங்கிலியால் ஓங்கி அடித்து ஒரு கசத்தை (ஆற்றுக்குள் இருக்கும் ஆழம் அறியமுடியா இடம் ) உருவாக்கி நம்பியாற்றின் கரையில் மூன்று நிலையங்கள் அமைத்து  அமர்கிறார்.

சங்கிலியால்  ஓங்கி அடிக்கும் சத்தமும், கடும்பாறையானது பொடிபட்டு கசத்தில் நீர் பொங்கிப் பிராவாகமாய் பெருக்கெடுக்கும் சப்தமும் கேட்டு, கோயிலுக்கு வெளியே வந்து பார்த்த மலை நம்பி பெருமாள் ' யார், என்ன'வென்று விசாரிக்க, பூதத்தாரும், ‘நான் சிவனின் பிள்ளை. நீங்கள் என் மாமா, நான் உங்களது மருமகன்’ என்று எல்லா விபரமும் சொல்ல பெருமாளும், தாயாரும் பூதத்தாரின் வயிற்றுவலி நோயை குணமாக்கி, ஆசிர்வாதம் செய்து, திருக்குறுங்குடியில் உள்ள கீழ்நம்பி கோயிலுக்கும், ஊருக்கும் காவலாக  இருக்கச்சொல்லி அனுப்பினார்கள். அன்போடு அழைத்து, ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட கீழ்நம்பி பெருமாளும் பூதத்தாருக்கு திருக்குறுங்குடி கோயிலையும், ஊரையும் சுற்றி ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்யபூஜைகளுக்கும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார்.

இப்படியாக திருக்குறுங்குடியில் பூதத்தார் காவல் நிர்வாகம் செய்து வரும் நேரத்தில்  கிட்டுநாபுரத்தில் வசித்து வந்த தொழுநம்பி என்னும் பூசாரி கீழ்நம்பி கோயில் பெருமாளுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் பூஜை, புனஸ்காரங்களை பொறுப்பாக செய்து  வந்தார். அவரது மனைவி ருக்மிணியம்மாளும் சிறந்த பக்தை.பதிவிரதை. ஆச்சி, ஐயர் இருவருக்கும் எல்லா வளங்களையும் கொடுத்த இறைவன் குழந்தை வரம் மட்டும் கொடுக்கவில்லை. மந்திர, தந்திரங்களில் தேர்ந்த தொழுநம்பி தவமாய், தவமிருந்து, குழந்தை வரம் வாங்கினார். பிறந்த குழந்தைக்கு காதில் சிறுவெட்டு போன்ற குறை இருந்ததால் 'குண்டல வாசகம்' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். பள்ளி செல்லும் வயது வந்ததும் திண்ணைப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். அந்த காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த கோயிலுக்கு காலையில் செல்லும் தொழுநம்பியானவர் நடையை திறந்து மூன்று கால பூஜைகளையும் முறையாக நைவேத்தியங்களோடு செய்து விட்டு அந்தி பூஜை முடித்தபின் கோயில் நடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.அதன்பின் கோவில் காவல் தெய்வமான சங்கிலி பூதமானவர் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மறுநாள் காலையில் பெருமாள், தாயாரின் திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் கதவின் உள்பூட்டு,தாழ்பாள்களை விலக்கி விடுவார்.

ஒருநாள் குழந்தை குண்டலவாசகத்திற்கு பள்ளி விடுமுறை. தெருவில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையானவன் தூரத்தில் தொழுநம்பி கோயிலுக்கு புறப்பட்டு செல்வதை கண்டு அவனும் தொடர்ந்து ஓடினான். ‘அப்பா,அப்பா’ என்று அழைத்தவாறு அன்பு மகன் ஓடி வருவதை பாதி வழி தூரம் தாண்டியபின் தான் தொழுநம்பி கவனித்தார். ’ஆஹா,இவனை மறுபடியும் கொண்டு போய் வீட்டுக்கு வந்தால் பூஜை நேரம் தப்பி விடுமே. அப்படிச் செய்தால் அது பெரும் குற்றமாயிற்றே… ஆண்டவனுக்கு அறிந்தே செய்யும் இழுக்காயிற்றே...‘ என்றெல்லாம் குழம்பி பின் தெளிந்தவனாக குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோயில் நோக்கி சென்றான்.

கோயில்நடை திறந்து குழந்தையை ஒரு ஓரமாக உட்கார்ந்து விளையாடச் சொல்லிவிட்டு ஆயத்த வேலைகளில் இறங்கினான் தொழுநம்பி. வெகுதூரம் நடந்து வந்ததால் தாகத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையானவன் ‘அப்பா,குடிக்க ஏதாவது கொடு’ என்று கேட்க நம்பியும் சுவாமிகளின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலை மகனுக்கு கொடுக்க முனைந்தான். கோவிலின் காவல் பொறுப்பான பூதத்தார் எவ்வளவோ குறிப்புகள் காட்டியும் உணராமல்  மகனுக்கு பாலை புகட்டியும் விட்டான். சிறிது நேரம் கழித்து குழந்தை 'பசிக்கிறது' எனக் கேட்க மீண்டும் பூதத்தாரின் குறிப்புகளையும், கோயிலின் ஆகமவிதிகளையும் மீறி பூஜைக்கு வைத்திருந்த பழத்தினை குழந்தை குடித்து மீதி வைத்திருந்த பாலுடன் பிசைந்து பஞ்சாமிர்தமாக்கி ஊட்டி விட்டான். அதன்பின் சிறிதுநேரம் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிய குழந்தை குண்டலவாசகமானவன் நடந்து வந்த களைப்பாலும், பால், பஞ்சாமிர்தம் உண்ட அலுப்பினாலும் ஓரமாய் படுத்து தூங்கி விட்டான். வழக்கம்போல செய்யும் முறையான பூஜை போல் அல்லாமல் பால், பழமின்றி பெருமாளுக்கும், தாயாருக்கும், பூதத்தார் உள்ளிட்ட ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்,தேவதைகளுக்கும்  ஏனோ,தானோ என்று ஒப்பிற்கு பூஜை செய்த தொழுநம்பியானவன் குழந்தை கூட வந்ததையும், கோயிலினுள் தூங்கி கொண்டிருப்பதையும் மறந்து கதவை பூட்டிவிட்டு வழக்கமான பாதையில் நடந்து வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து கை, கால், முகம் கழுவி ஆசனப்பலகையில் அமர்ந்து ருக்மிணியம்மாள் எடுத்து வைத்த உணவை பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைக்கப்போனவன், ‘குழந்தை குண்டலவாசகனையும் சாப்பிடக் கூப்பிடேன்.சேர்ந்து சாப்பிடுகிறேன்’ என்று கூற,  ‘காலையில் நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது உங்கள் கூட வந்ததாகத்தானே அவனது நண்பர்களும், செல்லும் வழியில் கண்டவர்களும் கூறினார்கள். எங்கே மறுபடியும் வந்து தெருவில் விளையாடிக் கொன்டிருக்கிறானா’ என்று ருக்மிணி ஆச்சியானவள் எதிர் கேள்வி எழுப்பினாள்.

அதன்பின்னரே கோயிலிலேயே குழந்தையை விட்டு வந்தது நினைவிற்கு வர மனைவியிடம் மெதுவாக விபரம் கூறி ‘ பயப்படாதே, குழந்தையை பெருமாளும், தாயாரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். விடிந்ததும் சென்று அழைத்து வந்து விடுகிறேன்.’ என்று கூற  கொதித்து எழுந்த  அந்த தாயோ ‘தவமாய்,தவமிருந்து பெற்ற குழந்தையை கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் விட்டு வந்து விட்டு காலையில் சென்று அழைத்து வருகிறேன் என்று கூறி பெற்றவள் என் வயிறு துடிக்கச் செய்கிறாயே. நீயெல்லாம் ஒரு தகப்பனா.. நீ இப்போதே சென்று என் குழந்தையை அழைத்து வரவில்லை என்றால் நானே செல்வேன். அல்லது உடனே என் உயிர் துறப்பேன்…’ என்று மேலும் பல கடுஞ்சொற்கள் பேசி நம்பியை கலங்க அடித்தாள்.

சரி இவளிடம் இதற்கு மேல் பேசி எந்த பிரயோஜனமும்  இல்லை என்று முடிவெடுத்த நம்பியும் மேலும் தாமதியாமல் வீட்டை விட்டு உடனே கிளம்பி கொடும் மிருகங்களான புலி,சிறுத்தை,கரடி,நரி தாக்காதவாறு அந்தக் கடும்காட்டில் வாழும் மொத்த மிருகங்களின் வாயையையும் கட்டும் மந்திர உச்சாடனம் ஜபித்து வசிய மைகளோடும், மருந்துகளோடும் களக்காடு வனம் புகுந்.து கோயிலை அடைந்தான்.

கோயிலுக்கு மீண்டும் நம்பி வந்த காரணம் அறிந்த காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரும் ‘ நம்பி , நீ வந்த காரணம் யாம் அறிவோம்..காலையில் உன் மகனை உன்னிடமே ஒப்படைப்பேன். கவலையின்றி திரும்பிச் செல்’ என்று கூறினார்.

நம்பியும் ‘சங்கிலி பூதத்தாரே இப்போது என் மகனை நான் அழைத்துச் செல்லவில்லை என்றால் என் மனைவி உடன் உயிர் துறப்பாள். அதன் பின் நானும், என் மகனும் மிகவும் கஷ்டப்படுவோம். உன்னத தாயும், உண்மையான பத்தினியுமான அவளது சாபமும் என்னையும், எனது பரம்பரையையும் பீடிக்கும். எனவே கருணை கொண்டு, தயவு செய்து கதவு திறந்து விடுங்கள்.’ என்று வேண்டினான்.

‘நம்பியே, உன் நிலை அறிவோம். ஆனால் ஆகம விதிப்படி கோயில் கதவைப் பூட்டி, பெருமாளும், தாயாரும் பள்ளியறைக்கு சென்ற பின் மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிக்கு பின் தானே கோயில் கதவை திறக்க முடியும். விதிமுறை அறிந்த நாம் இருவருமே அதனை மீறுவது தர்மம் அல்ல. உன் மகனை இப்போது இருப்பதை விட இரண்டு பிடி சேர்த்து வளர்த்து நிறைந்த கல்வியோடும், குறையாத செல்வத்தோடும் அவன் பெருவாழ்வு வாழும் வகையில் ஆசி வழங்கி நாளை காலையில் திருப்பி தருகிறேன்.வீடு சென்று இல்லாளை ஆறுதல் கூறி சமாதானப்படுத்து.’  என்று தேறுதல் வார்த்தைகள் கூறினார்.

ஆனால் பூதத்தாரின் வார்த்தைகளில் சமாதானமடையாத நம்பியானவன் தன்னிடமிருந்த சாவி கொண்டு கோயில் நடை திறக்க முனைந்தான்.

‘நம்பியே… இன்று காலையில் இருந்தே பல விதிமீறல்கள் செய்து வந்தாய். உன் மகன் பொருட்டு அனைத்தையும் மன்னித்தோம்.ஆனால் இப்போது நீ செய்ய முயல்வது மன்னிக்கமுடியாத தவறு. மேல்கொண்டு என் கோபம் கிளப்பாமல் உடனே இவ்விடம் விட்டு புறப்படு.இல்லையென்றால் நடப்பவை நல்லவைகளாக இருக்காது’ என்று பூதத்தார் எச்சரித்தார்.

மனம்பிறழ்ந்த நம்பியோ,’ஏ பூதமே, என்னையே எச்சரிக்கிறாயா… என்னை விட ஆகம விதிகளும், வேதங்களும் அறிந்தவனோ நீ… உன்னை என்ன செய்கிறேன் பார். நான் படித்த மந்திரங்களினால் உன்னைக் கட்டி, கோயில் கதவைத் திறந்து, என் மகனை இப்போதே அழைத்துச் செல்வேன். உன்னால் முடிந்ததை செய்.’ என்று பூதத்தாரிடம் சவால்  விட்டு மந்திரத்தினால் கோயில் கதவின் உள்ளிருந்த மேல்தாழ்ப்பாளை விலக்க, பூதத்தாரோ கீழ்தாழ்ப்பாள் போட்டார். அவன் கீழ்தாழ்ப்பாள் விலக்கும்போது பூதத்தார் தந்திரமாக மேல்தாழ்ப்பாள் போட்டார்.

இப்படி மாறி, மாறி தடுத்தும் தொழுநம்பியானவன் மந்திர வேலைகளின் மூலம் மீண்டும், மீண்டும் கோயில் கதவைத் திறக்க முயற்சிக்க கடும்கோபமும், ஆக்ரோஷமும் கொண்ட சங்கிலி பூதத்தார், ‘சரி நம்பி. கதவருகே வந்து உனது மேல் துண்டை விரித்து நில். உன் மகனைத் தருகிறேன். உன் விருப்பப்படியே வாங்கிச் செல்’. என்று கூறி எப்படி நம்பியானவன் பாலிலே, பழத்தை பிசைந்து பஞ்சாமிர்தம் ஆக்கினானோ அதுபோல பூதத்தாரும் தூங்கிக் கொண்டு இருந்த அந்த பச்சிளம் பாலகனை, பால் மணம் மாறா குழந்தையை, கை வேறு, கால் வேறாக பிய்த்து,ரத்தமும், சதையுமாக  பிசைந்து கதவு சாவித்துவாரம் வழியாக கோவிலுக்கு வெளியே வீசினார்.

‘ஆஹா பூதமே…என்ன காரியம் செய்தாய்..என்னை பழிவாங்க என் மகனையா கொன்றாய்.. பொழுது விடிவதற்குள் உன்னை மந்திர மை, மருந்துப் புகை போட்டு பிடித்து பாதாளக் குகையில் அடைத்து என் அடிமை ஆக்குகிறேன் பார்’ என்று சூளுரைத்து சபதம் செய்தான் தலைக்கனத்தால் தன் மகனை இழந்த தொழுநம்பி.

‘அடோய் நம்பி. யாரிடம் சபதம் செய்கிறாய்.இப்போது கூறுகிறேன் கேள். உன் கண் முன்னே இந்த ஊர் நீங்கிச் செல்வேன். அதற்கு ஆதாரமாக ஆலயத்தின் அணையாவிளக்கு அணைந்திருக்கும். மேலும் கோயில் விருட்சமான மருதமரத்தின் வலது பக்கத்தையும், கோயில் கோட்டை மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக்கற்களையும், சிதைத்து, சரித்து செல்வேன். அடையாளத்தை வந்து சரி பார்த்து கொள்.’என்று கூறி திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி பூதத்தான் குடியிருப்பு வழியாக களக்காடுமலை தாண்டி தென்பொதிகை மலை ஏறி காரையாற்றங்கரையில் உள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயில் மூலவரும், தானே சுயம்பாக அவதரித்த சர்வேஸ்வரருமான மகாலிங்க சுவாமிகளின் அனுமதியோடு மணி முழுங்கி மரத்தடியில் வந்து குடியேறினார்.

இவ்வாறாக அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தாரானவர், கைலாயத்தில் இருந்து கிளம்பும் போது சிவபெருமான் இட்ட ஆணைப்படி பல ஷேத்திரங்கள் பயணம் செய்து தென்கைலாயமான பொதிகை மலை சொரிமுத்தையனார் கோயில் வந்து மணிமுழுங்கி மரத்தடி, மேற்கு வாசல், மூலஸ்தானம், மடப்பள்ளி மற்றும் வனத்தினுள்ளாக ஐந்து நிலையங்கள் அமைத்து சுயம்புலிங்கமாக அமைந்துள்ள தந்தை சிவனான மகாலிங்க சுவாமி, மூத்த சகோதரரும், முழுமுதற் கடவுளுமான விநாயகர், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் மற்றும் சொபரிமலை சாஸ்தாவுக்கெல்லாம் மூலசாஸ்தாவான பொன் சொரிமுத்து ஐயனார் மற்றும் கும்பாமுனி  ( அகத்தியர்), பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன்  போன்ற பரிவார தெய்வங்கள் மற்றும் தேவதைகளோடு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡