திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள கிராமம் புரிசை. இங்கு அருளாட்சி புரிகிறார் அகத்தீஸ்வரர். அகத்திய மகரிஷி வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் இக்கோயில் மூலவர் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். ‘‘தென்னூர் கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர் பன்னூர் புக்குறையும் பரமர்க்கு இடம் பாய்நலம் என்னூர் எங்கள்பிரான் உறையும் திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டுப் புரிசையே.’’சுந்தரர். இயல், இசை, நாடகக் கலைகளுக்கு என உலகப் பிரசித்தி பெற்ற ஊரே புரிசை. தெருக்கூத்திற்கு என காலங்காலமாக வாழும் கலைஞர்கள் அதிகமாக உள்ள இந்த ஊரை சுந்தரரும் மறக்காமல் நினைவில் வைத்து தனது திருநாட்டுத் தொகையில் வைப்புத் தலமாகப் பாடிப் பரவியுள்ளார்.
கல் தூணிலோ (அ) கற்சுவரிலோ சிற்பங்கள் வடிப்பதைப் புடைப்பு சிற்பம் என்பர். அவ்வாறு புடைக்கும் வழக்கம் பல்லவர்களிடமிருந்து மற்ற மன்னர் பரம்பரையினருக்கு வந்தது. பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், ஹொய்சாலர்கள், நாயக்க மன்னர்கள் என பலரும் இக்கலையில் கை தேர்ந்தவர்கள் என்ற போதிலும், சோழர்கள் பாணியே தனிதான். இந்த புடைப்புக் கலையில் புராண நிகழ்வுகளை தத்ரூபமாக வடிக்கும் சோழர்கால கலைஞர்கள் இக்கோயிலில்(புரிசை) அறுபத்து மூவரது வரலாற்றினை மகா மண்டபத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் நூற்றுக்கணக்கில் புடைத்துள்ளனர்.
தமிழகத்தின் அநேக சிவாலயங்களில் காணக்கிடைக்காத அதிசய அற்புதமான இந்தப் புடைப்பு சிற்பங்களை காணக்காண ஆச்சர்யம் மேலிடுகின்றது. சோழ மண்டலத்தின் வெண்குன்ற கூற்றத்திற்கு (கோட்டம்) உட்பட்டதாக இந்த புரிசை திகழ்ந்துள்ளது. இத்தல சிவலிங்கத்தினை அகத்தியர் பூஜித்து வழிபட்டுள்ளார். அதற்குச் சான்றாக நந்திதேவருக்கு முன்னே சாளரத்தின் இடப்புறம் அகத்திய மகரிஷியின் புடைப்பு சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட சிறிய ராஜகோபுரம். படிகள் ஏறி உள்ளே செல்ல நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம். சாளரத்தின் வாயிலாக ஸ்வாமியை தரிசிக்கலாம்.
சாளரத்தின் பக்கச்சுவற்றில் அகத்திய மகரிஷி ஈசனைப் பூஜிக்கும் புடைப்பு சிற்பம் தல வரலாற்றுக்குச் சான்றாக உள்ளது. இடதுபுறம் தல கணபதி தனிச்சந்நதி கொண்டுள்ளார். தென்முக வாயிலின் முன்பு முக மண்டபம் தூண்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. உள்ளே மகாமண்டபம். இங்கே நடராஜர் சிவகாமியுடன் ஏனைய உற்சவத் திருமேனிகளும் வைக்கப்பட்டுள்ளன. மகா மண்டபச் சுவரின் உள்ளும், வெளியுமாக சிறுசிறு புடைப்புச் சிற்பங்கள் வரிசையாய் வடிக்கப்பெற்றுள்ளன. அடுத்ததாக கருவறை! கருவறையுள் கருணை வடிவாய் அருட்காட்சியளிக்கின்றார் அகத்தீஸ்வரர்.
நந்தி மண்டபத்தின் இடப்புறம் அம்பாளின் தனிச்சந்நதி அமைந்துள்ளது. அம்பிகையாக அகிலாண்டேஸ்வரி நின்ற வண்ணம் எழில் சிந்துகின்றாள். இறைவனும், இறைவியும் இங்கு எதிரெதிரே மாலை மாற்றும் கோலத்தில் வீற்றருளுவதால் திருமண வரமருளும் திருத்தலமாகத் திகழ்கின்றது. அம்பாள் சந்நதிக்குப் பக்கத்தில் கந்தன் தனது துணைவியரோடு திருவருள் புரிகின்றார். ஆலய ஈசான பாகத்தில் பைரவர் அற்புதமாகக் காட்சி நல்குகின்றார். கிழக்கு பாகத்தில் நவகிரக சந்நதியுள்ளது. அக்கினி திசையில் தலவிருட்சமான வில்வமரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. அருகே சமயக்குறவர்கள் தனிச்சந்நதி கொண்டுள்ளனர். சிறிய ஆலயம் எனினும், சீருடன் திகழ்கின்றது. ஆலயத்தின் இடப்பக்கத்தில் தல தீர்த்தமான அகத்திய தீர்த்தம் அற்புதமாக உள்ளது.
தினசரி 2 கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். பிரதி சோமவார பூஜை, பிரதோஷங்களோடு, சிவராத்திரி, நவராத்திரி, சஷ்டி, ஆருத்ரா, கார்த்திகை தீபம், குரு பூஜைகள் ஆகியன சிறப்புற நடத்தப்படுகின்றன. பங்குனி உத்திரம் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றன. கலைத்துறையில் சிறந்திடவும், கல்வியில் மந்த நிலை மாறிடவும், தள்ளிக்கொண்டே போகும் கல்யாணம் விரைவில் முடியவும் இங்கு ஸ்வாமிஅம்பாளுக்கு சுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி, வில்வத்தால் அர்ச்சனை செய்து, கற்கண்டு பொங்கல் நிவேதனம் செய்து, வழிபட, சிறந்த பலன் உண்டு என்பது பக்தர் பலரின் அனுபவ வாக்காகும். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள இந்த ஊர், செய்யாறு வந்தவாசி பேருந்து சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புரிசை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment