Friday, 30 November 2018

பக்தர்களின் பிணி நீக்கி நன்மையருளும் கருப்பண்ணசாமி.!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கடவுளையே ஜட்ஜ் சாமி என்று பக்தர்கள் மனு கொடுத்து வழிபாடு செய்கிறார்கள். சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பகுதியில் அழகிய பிரமாண்டமான இரண்டு குதிரை வாகனங்கள் உள்ளன. உள்புறத்தில் மேற்கு முகமாக பட்டமரத்தான் என்றழைக்கப்படும் நாவலடி கருப்பண்ணசாமி மூலஸ்தானம் பட்ட நாவல் மரத்தின் அடியில் ஒரு வடிவம் இல்லாத உருவாக சிறிய குழியில் உள்ளது. குறுநில மன்னர்கள் காலத்தில் மோகூர் என்றழைக்கப்பட்ட மோகனூர் குமரிபாளையத்தில், நாவலடியான் சுயம்புவாக தோன்றி உள்ளார். 

அந்த காலத்தில் விறலியர், கூத்தர், பாணர் என்று பலர் ஊரின் ஒதுக்கு புறமாக தங்கி தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பொருள் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இவ்வாறு வந்த நாடோடிகள் இந்த பகுதியில் பசுவுடன் கட்டை வண்டியில் அங்கு வந்தனர். ஒரு நாள் காலையில் அவர்கள் அழைத்து வந்த பசுவை காணவில்லை. எனவே அந்த பசுவைத் தேடத் தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள மணல் மேட்டை அடுத்துள்ள பள்ளமான இடத்தில், பசு நிற்பதைக் கண்டனர். அருகில் சென்று பார்த்த போது, பசுவின் மடியில் இருந்து தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்தது. பால் சுரக்கப்பட்ட பகுதியில் அரை அடி உயரம் கொண்ட வெண்ணிற பளிங்குக்கல் போல் ஒளி உமிழும் சுய உருவம் தோன்றியது. அந்த உருவத்திற்கு கீழ்புறம் நாவல் மரம் பெரியதாக காட்சியளித்தது. 

எனவே சுயம்புவாக தோன்றிய இறைவனை நாவலடியான் என்று அழைத்து வழிபட மக்கள் எண்ணினர். அந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் செல்லியம்மன் சிலை ஒன்றை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையும் இந்த ஆலயத்திலேயே வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. கருப்பண்ணசாமிக்கு அசைவ படையல் இருந்தாலும், அம்மனுக்கு சைவ படையல் என்ற அளவில் தனி சன்னிதியாக தான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த அம்மன் சன்னிதியில், கன்னிமார் எழுவர் சிலையும், ஒரே கல்லில் வரிசையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் ஜட்ஜ் சாமியிடம் மனு கொடுத்து உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த கோவிலுக்கு வந்து சாமியின் அருளை பெற்று செல்லலாம். இதன் அடிப் படையில் பக்தர்கள் பிராது என்ற கோரிக்கை மனுவை எழுதி பூசாரிகள் மூலமாக நாவலடியான் பாதத்தில் வைத்து அதற்கான இடத்தில் கட்டுவது ஐதீகம். இந்த வழிபாட்டு முறை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. 

பக்தர்கள், தங்களது பிணி நீங்கவும், விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம், வராக்கடன் கிடைக்கவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும் முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, படிப்பு, திருமணம் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கின்றனர். நாவலடியானிடம் தங்கள் குறைகளை கூறி மனு எழுதி கொடுக்க வருபவர்களும், களவுப்போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கும் இங்கு அது தொடர்பாக கோரிக்கைகளை மனுவாக எழுதி வைக்கிறார்கள். அதேபோல் காரியம் கைகூடியவுடன் அவர்கள் காணிக்கை செலுத்த வருவதும் தொடர்கிறது என்பதை காணும் போது நாவலடியானின் மகிமை கண்கூடாக தெரிகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜையாக இரவு 12 மணிக்கு மேல் நாவலடியானுக்கு சத்திய பூஜை நடைபெறும். சத்திய பூஜைக்கு மல்லிகை, சம்பங்கி மலர்கள் பயன்படுத்தப்படும். சாமிக்கு செவ்வரளி, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்களால் மலர் பந்தலிட்டு வழிபாடு நடைபெறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment