தில்லைவனத்தில் வந்தமர்தல்
தில்லைவனம் (சிதம்பரம்)
61 மாடன்களை வழிநடத்த அவர்களுக்கு முதன்மை மாடனாக சிவனே, சுடலைமாடனாக அவதரித்தார்.
கயிலாய மலையில் வீற்றிருந்த சிவனிடம், பார்வதி தேவி ‘‘சுவாமி, நீங்கள் படியளக்கச் சென்ற பின், நான் தனிமையில் இருப்பதை தவிர்க்க எனக்கு கொஞ்சி விளையாட குழந்தை ஒன்று வேண்டும். மூத்த பிள்ளை கணபதி, இளையவன் முருகன் இருவரும் பூலோகம் சென்று விட்டனர். ஆகவே என்னோடு கயிலையில் இருக்கும் வகையில் எனக்கு குழந்தை வேண்டும்.’’
"தேவி இனி உனக்கு குழந்தை வரம் தந்தால் அந்த குழந்தை கெட்ட ஆவிகளிடமிருந்து பூலோக மக்களை காக்கும் பொருட்டு, மாந்த்ரீக சக்திகளை தடுக்கும் பொருட்டும் அதன் பிறவி இருக்கும். மேலும் அந்த குழந்தைக்கு ஆவிகளை வெல்லும் வரம், கொல்லும் வரமும் இருக்கும். அதனால் அதற்கு கொடூர குணங்கள்தான் இருக்கும். அந்தக் குழந்தையால் இனி பெருமை இருக்காது, சிறுமைதான் இருக்கும்" என்றார். ‘‘எப்படி இருந்தாலும் பரவாயில்லை எனக்கு குழந்தை வரம் வேண்டும்.’’ என்றார் பார்வதி தேவி.
"சரி ஆகட்டும். கயிலாய மலையில் உள்ள முப்பத்திரண்டாவது மரகத தூணில் உள்ள மணி விளக்கில் தீபம் ஏற்றி அதன்முன், என் நாமம் சொல்லி தவம் இருந்தால் உன் வேண்டுதல் பலிக்கும்" என்றார் ஈசன்.
அதன்படியே தேவியும் தவத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்திற்கு பின் விளக்கில் ஒளிமங்கி இருள் சூழ்ந்தது. அப்போது சிவன் வந்து மணி விளக்கை தூண்டினார். விளக்கின் சுடரிலிருந்து மூன்று சுடர்கள் தேவியின் மடியில் விழுந்தன. முன் வந்த சுடர் முண்டமாக கை, கால்கள், கண், மூக்கு, செவிகள் இன்றி இருந்தது.
"அந்த முண்டத்தை எடுத்து தனியே வைத்து விட்டு மீண்டும் விளக்கின் முன் வந்து அமர்ந்து கொள்." என்றார். தேவியும் அதற்கிணங்க மீண்டும் மரகத விளக்கின் முன் வந்து அமர்ந்தார். விளக்கின் சுடரை சிவன் தூண்டினார். அப்போது சடைமுடியோடும், நீண்ட நாக்கோடும் சுடலை பேச்சி பிறந்தார். ‘‘சுவாமி என்ன இது? நான் பிள்ளை வரம் கேட்டதற்கு இப்படி செய்கிறீர்களே’’ என்று ஆதங்கத்துடன் கேட்டார் பார்வதி தேவி. மீண்டும் மரகத விளக்கின் சுடரை, சிவனார் தூண்ட ஓர் ஆண்குழந்தை அழகாகத் தோன்றியது. "இந்த குழந்தை சுடரில் பிறந்தமையால் சுடலை என்று அழைக்கப்படுவான்’’ என கூறினார்.
முன்பிறந்த முண்டனுக்கு பிரம்மனை வரவழைத்து உருக்கொடுத்து, முண்டனையும், சுடலைபேச்சி இருவரையும் பூலோகம் செல்லுமாறு சிவன் ஆணையிட்டார். அதன்படி அவர்கள் பூலோகம் வந்தனர்.
கயிலாய மலையில் மாணிக்கத்தொட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுடலை, ஆங்கார ரூபம் கொண்டு காளை மாட்டை வாகனமாக்கி மயானம் சென்றார். அங்கு எரிந்து பிணத்தை தின்றுவிட்டு மீண்டும் வந்து தொட்டிலில் படுத்துக் கொண்டார். குழந்தை பசியோடு தூங்குகிறானே என்றெண்ணிய உமாதேவி, குழந்தை சுடலையை தொட்டிலிலிருந்து கையில் எடுத்தார். அப்போது குழந்தையின் வாயில் மாமிச வாடை அடித்தது. அப்படியே தொட்டிலில் போட்டுவிட்டு, சிவனை நோக்கி சென்றார் தேவி. ‘‘சுவாமி நான் பிள்ளை வரம் கேட்டதற்கு மாமிசதின்னியை தந்து விட்டீர்களே!’’ என்று கேட்டுப் பதறினார்.
"குழந்தை இப்படித்தான் பிறக்கும் என்று நான்தான் அப்போதே கூறினேனே," என்றார் சிவன்.
‘‘அதற்காக இப்படியா? மாமிசம் சாப்பிடுகிற குழந்தை இனி ஒரு நிமிடம் கூட கயிலாயத்திற்கு ஆகாது,’’ என்று உறுதியாகச் சொன்னர் பார்வதி. ‘‘இப்படியா திருவிளையாடல் புரிவது?’’
சுடலையை அழைத்த சிவன், ''நீ பூலோகம் செல். கெட்ட ஆவிகளிடம் இருந்தும், மாந்த்ரீக சக்திகளிடமிருந்தும் மக்களை காத்து நில். அதற்கு உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.
'இந்த வையகத்தில் என்னென்ன மலர்கள் உண்டோ அவற்றினால் என்னை அலங்கரித்து, ஒரு கோட்டை அரிசியில் உணவு சமைத்து ஒரே படையலாய் படைக்க வேண்டும். முட்டை முதல் முருங்கை வரை அதில் இருக்க வேண்டும். மேலும் எனக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் என்னை நம்பி வரும் பக்தர்களை மேன்மையாக்கும் வரம், அவர்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கும் வரம் வேண்டும். நானும் உங்கள் மைந்தன்தான் என்பதை வையகம் அறிய வேண்டும்.’’ என்றார் சுடலை.
ஈசன் அவ்வாறே வரங்கள் அளித்த பிறகு, சுடலைமாடனுக்குக் கயிலையில் விழா நடந்தது. சிவன், பார்வதி, பிரம்மன், கலைமகள், மகாவிஷ்ணு, லெட்சுமி, இந்திரன் முதலான தேவர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். சிம்மாசனத்தில் சுடலைமாடனை அமர்த்தினார் சிவன். படையல் விழா (கொடை விழா) நடந்தது. பாகற்காய் நீங்கலாக ஏனைய காய்கள் கொண்ட உணவு சமைக¢கப்பட்டு, படையல் செய்யப்பட்டது.
'நான் நின்றபடியே படையலை ஏற்கிறேன். எனக்கு ஆசனம் வேண்டாம்' என்றார் சுடலைமாடன். பிறகு சிவனிடம், 'அய்யனே படையலையும், விழாவையும் கண்டு மகிழ்கிறேன். வீணை முதலான இசைக் கருவிகள் வாசிப்பதை நிறுத்த சொல்லுங்கள். எனக்கு கரும்கொம்பு இசைக்க வேண்டும், தாரை தப்பட்டைகள் முழங்க வேண்டும், நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் இசைக்கவேண்டும். என் பிறப்பை குறித்து, என்னைப்போற்றி இசைபாடவேண்டும். அதுவும் வேகமாக பாடவேண்டும். அந்த இசையில் மணிஓசையே அதிகமாக ஒலிக்க வேண்டும். அதற்கு சிலர் ஆடவேண்டும். ஆடுபவர்கள் பெண் உருவாக இருக்க வேண்டும். ஆனால் பெண்ணாக இருக்ககூடாது' என்றார்.
"அப்படியே ஆகட்டும்." என்றார் சிவன்.
சுடலைமாடன் கேட்ட இசைக்கருவிகள் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதை தேவலோகத்தில் உள்ளவர்களால் இசைக்க முடியவில்லை, பூத கணங்கள் வரவழைக்கப்பட்டு இசைக்கப்பட்டது. மாடன் கேட்டபடி நடனம் புரியும் நபர்களை எங்கே தேடுவது என்று, சிவன், விஷ்ணுவை அனுகினார். என்னசெய்வது என்று யோசிக்கும் போது, பிரம்மன் கூறினார். ‘‘மகாவிஷ்ணு இருக்கிறாரே’’, என்றதும். மகா விஷ்ணு பெண் அவதாரம் கொண்டார். அப்போது சுடலைமாடன், மாமா நீங்கள் பெண்ணாக மாறிவிட்டீர்கள் இது கூடாது. பெண் உடல், ஆண் மனம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றார். உடனே பெண்ணாக மாறியிருந்த விஷ்ணுவுடன், சிவன் இணைந்தார். சங்கரநாராயணன் மூன்றாம் பாலினத்தவராக உருமாறி ஆடினர். சுடலைமாடனும் அவர்களுடன் நடனம் ஆடினார். ஆட்டம் உச்சத்தில் மாடன் ஆங்கார ரூபத்துடன் ஆதாளி போடலானார். சற்றும் எதிர்பாராத சங்கரநாராயணன், சுடலைமாடனை சாந்தப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆங்காரமாக ஆடினார். ஆங்கார ரூபம் கொண்டு ஆடும்போது அய்யனின் கால் சலங்கையில் இருந்து முத்து ஒன்று சிதற, அதிலிருந்து உதித்தான் கணியான். அவன் தனது கையில் கீறி இரத்தம் மூன்று சொட்டு விட, சுடலையின் ஆங்காரம் தணிந்தது.
பின்னர் 'அய்யனே நான் பூலோகம் செல்கிறேன். எனக்கு இப்படி விழா எடுத்தால் நான் அந்த இடத்தில் பரிபூரணமாக வருவேன். மகிழ்வேன். முக்கியமான ஒன்று என் விழாக்களுக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். அப்போதுதான் நான் சாந்தமாவேன் என்றார் மாடன்.'
"மாவீரன் நீ, அப்படி கூற கூடாது. பூலோகத்தில் உனக்கு நடக்கும் ஒவ்வொரு விழாவிற்கும் எங்களால் பங்கேற்க முடியாது. ஆனால் நிச்சயமாக நாங்கள் வருவோம்."
'அது எப்படி?' எனக்கேட்டார் சுடலைமாடன்.
"சொல்கிறேன். விழாவின்போது மணிக்கு ஒரு தரம் என்னிடம் பேசுவாய். ஆகவே நான் உன் முகத்தின் அருகே இருப்பதற்கு சமமாக என்னால் சபிக்கப்பட்ட தாழம்பூவை உன் இரு செவிகளோரம் உன்னை பூஜிப்பவர்கள் வைப்பார்கள். நீ மூலவனாக இருக்கும் இடங்களில் மட்டும் உன் படையலில் அந்த தாழம்பூ முக்கியத்துவம் பெறட்டும்,’’ என்றார்.
தன் முடியைக் கண்டதாக பிரம்மன் பொய் சொன்னதற்கு சாட்சியாக நின்றதால் தாழம்பூவை தன் பூஜைகளில் நிராகரித்தார் ஈசன். வேதனையுற்ற தாழம்பூவிடம் பிரம்மன் காஞ்சியில் அருள்பாலிக்கும் ஏகாம்பரஸ்வரரை தரிசித்து வந்தால் அதன் சாபம் தீரும் என ஆறுதல் அளித்தார். அதன்படி தாழம்பூ சிவனை பூஜிக்க, சிவன் தோன்றி எனது மற்றொரு அவதாரத்தில் நீதான் முக்கியத்துவம் வகிப்பாய் என்று அருளினார். அதன் படி சிவனின் மாடன் அவதாரத்தில் தாழம்பூ முக்கியத்துவம் பெறுகிறது.
‘‘பிரம்மன் நினைவாக வெட்டி வேரும், மகாவிஷ்ணுவின் நினைவாக துளசியும், உன் தாயின் நினைவாக வேப்பிலையும், மகாலெட்சுமியின் நினைவாக செந்தாமரையும், சரஸ்வதியின் நினைவாக வெண் தாமரையும், உனக்கு படைக்கப்படும். அதை வைத்து நாங்கள் அங்கே வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்,’’ என்று ஈசன் மாடனிடம் தெரிவித்தார்.
சிவனும், பெருமாளும் இணைந்து சிவனினைந்த பெருமாளாகவும், சிவனும், பிரம்மனும் இணைந்து பிரம்மராக்கு அய்யனாகவும், கலைமகள், அலைமகள், மலைமகள் மும்மகளும் ஒருமகளாக பிரம்மராக்கு சக்தியாகவும் உருமாறி பூலோகம் வந்தனர். பூலோகத்தில் தில்லைவன காட்டிற்கு சுடலைமாடன் வந்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரமே முன்பு தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது. தில்லைச் செடிகள் நிறைந்த காடாக இருந்தமையால் இத்தலம் தில்லைவனம் எனப்பெயர் பெற்றது. இங்கு சக்தி ஆங்கார ரூபத்தில் காளியாக வீற்றிருக்கிறாள். தில்லைவன காட்டில் இருந்ததால் தில்லைக்காளி என்று அப்பகுதியினர் அழைத்தனர்.
தில்லை காளியம்மன் கோயிலில் தாயின் சந்நதியில் வெளிப்பிராகாரத்தில் காவல் தெய்வமாக வீரனார் என்ற பெயரோடு சுடலை மாடன் வந்தமர்ந்தார். இலுப்பை மரத்தின் கீழ் வீரனாருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு பூஜை ஏதும் இன்றி இருந்தது. இடைக்காலத்தில் புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, தகரத்தால் மேற்கூரை அமைத்து, சிறிய அளவில் ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு மூலவராக உருவமற்ற கருங்கல்லாக வீரனார் கிழக்குப்பார்த்து வீற்றிருக்கிறார். அவரை 2 சிங்க முக புடைப்புச்சிற்பங்கள் தாங்குகின்றன. கருவறை இல்லை, வீரனாரின் வலது பக்கம் 3, இடது பக்கம் 5 என நாகர்சிலைகள் உள்ளன. வடக்குப் பார்த்த சிமென்டால் ஆன சுதை சிலை. அமர்ந்த நிலை. தலையில் கிரீடம் அணிந்து வலது கையில் வாள், இடது கையில் கேடயமும் கொண்டு இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டபடி வீரம் செறிந்த உடலோடும், வெற்றிப் புன்னகையோடும் அருள்பாலிக்கிறார். இடுப்பில் வேட்டி. காலில் தண்டை அணிந்திருக்கிறார். அருகில் நாய் ஒன்று படுத்திருக்கிறது. நுழைவாசலில் வீரனாரின் வாகனமான இரு வெள்ளைக் குதிரை சுதை சிற்பங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி நிற்கின்றன. சத்ருக்களின் பகை நீங்கவும், வீண்பயம் மறையவும், எதிர்மறை எண்ணங்கள் அகலவும் வீரனாருக்கு எலுமிச்சை மாலை சாத்தி வெள்ளிக்கிழமை வழிபடுகிறார்கள்.
வீரனார் கோயில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள தில்லைக்காளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment