Friday, 1 May 2020

ஐயப்பன் வரலாறு(வல்லரக்கன் கதை) இந்த கதையை பாடிய பின்னர்தான் சுடலை கதையை பாட வேண்டும் என்பது வில்லிசை, மகுட கலைஞர்களின் மரபு. அதற்கு காரணம் உண்டு அடுத்த பதிவில் சந்திப்போம் இப்போது கலியுக தெய்வம் ஐயப்பன் வரலாறை பார்ப்போம்.!!

அரக்க வம்சத்தின் மன்னன் சகன். இவனுக்கு மகனாக பிறந்தான், ஸ்ரீ பத்மன். இவன் தான் வல்லரக்கன் என்று அழைக்கப்பட்டான்.சிறுவயது முதல் அவன் மனதில் பெரும் தாக்கம் எழுந்தது. அது தமது அரக்கர் வம்சம் பல வழிகளில் திறமைகொண்டு உயர்ந்தாலும் இறுதியில் தேவர்களால் தாக்குண்டு அவர்கள் அழிக்கப்படுவதை கண்டும், கேட்டும் அறிந்த அவன், எந்த தேவர்களாலும், இறைவனே வந்தாலும் தன்னை அழிக்க கூடாது என்ற வரத்தை நாம் பெற வேண்டும்.

மூவுலகையும் நாம் ஆளவேண்டும் என்றெண்ணினான்; சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவன் முன் தோன்றினார். ‘என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார். ஸ்ரீபத்மன் கூறினான்: “நான், யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும். எவர் கையாலும் நான் சாகக் கூடாது!’’ சிவனும் அவன் விருப்பப்படியே வரம் அளித்தார். வரம் பெற்ற பத்மன். உண்மையிலேயே இந்த வரம் பலிக்குமா என்று கேட்டபடி சிவனார் தலையிலேயே கையை வைக்க முற்பட்டான். சிவனை அழிக்க முடியாது. இருப்பினும் தான் அழியவில்லை என்றால் அவர் கொடுத்த வரம் பொய்யாக கூடும். அதனால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிவன், அரளிக்காயினுள் சென்று மறைந்து கொண்டார்.

ஸ்ரீபத்மன், தனக்கு பயந்து சிவன் மறைந்து கொண்டிருக்கிறார் என்று கர்வம் கொண்டு அவரைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.
அந்த வேளையில் மஹாவிஷ்ணு, அழகிய மோஹினி உருவமெடுத்து, ஸ்ரீபத்மன் முன் தோன்றினார். மோஹினியின் அழகில் மயங்கிய அசுரன் ஸ்ரீபத்மன், சிவனை தேடுவதை விட்டு, மோஹினியை அடைய ஆவல் கொண்டான். தான் பெற்ற வரத்தைப் பற்றி மோஹினியிடம் கூறி தற்பெருமை கொண்டிருந்தான். உடனே மோஹினி “மன்னா, வரம் பெற்றால் மட்டும் பயன் தருமா, அதற்கு மந்திரத்தை கூறியபடி நியாசம் செய்ய வேண்டும்,’’ என்றாள். நியாசம் என்றால், உடல் அங்கங்களைத் தொட்டபடி அதற்கு உரிய மந்திரத்தை உச்சரித்தல்.

‘‘அப்படியா! இப்போதே செய்கிறேன்,’’ என்று கூறி கம்பீரமாக அமர்ந்து நியாசம் செய்யத் தொடங்கினான் அசுரன். அப்படிச் செய்யும் போது ‘சிரஸே ஸ்வாஹா’ என்று கூறி தன் தலையில் கையை வைத்துக்கொண்டான். அடுத்த கணம் அவன் உடம்பு எரிந்து சாம்பலானது. ஸ்ரீபத்மன் என்ற பத்மாசுரன் பஸ்மமாக போனான். அதனாலேயே பஸ்மாஸுரன் என்றும் அழைக்கப்பட்டான். அசுரன் அழிந்ததை அறிந்து, சிவன் அரளி காயிலிருந்து வெளியே வந்தார். அப்போது அழகிய மோஹினி வடிவில் நின்ற மகாவிஷ்ணுவை கண்டார்.

அவள் அழகில் மயங்கி அவளை நெருங்கினார். ஓட முற்பட்ட மோஹினியின் கரம் பற்றி இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். ஹரிஹர சக்திகள் ஒன்றாகியதன் காரணமாக ஹரிஹரன் ஐயப்பன் பிறந்தான்.

கழுத்தில்- கண்டத்தில் மணி இருந்தமையால் மணிகண்டன் என அழைக்கப்படலானார். மஹாவிஷ்ணு தசவதாரம் எடுத்தாலும் அவர் ஒருவரே. ஆனால், இங்கு சாஸ்தா, அய்யனார், ஐயப்பன் மூவரும் ஒரே சக்திதான் என்றாலும் அந்த அவதாரங்கள் பூலோகத்திலுள்ள அக்கிரமங்களை ஒடுக்கவும், மக்களை காக்கவும் எடுக்கப்பட்டவைதான்.  மூன்று அவதாரமும் வெவ்வேறு நிகழ்விலே உருவானது. சாஸ்தா யானை வாகனத்துடன் கையில் சாட்டையுடன் இருப்பார். அய்யனார் குதிரை வாகனத்தில் கையில் அரிவாள் கத்தியுடன் காட்சி தருவார். ஐயப்பன் புலி வாகனத்தில் கையில் வில் அம்புடன் எழுந்தருள்வார்.

மூவரும் நினைத்த இடத்தில் நினைத்த நேரம் வந்தருளும் தெய்வங்களாக மக்களோடு மக்களாய் இருந்து, அவர்களது வாழ்வில் அங்கம் வகிக்கும் நம்மூரு சாமிகளாய் அருளாட்சி செய்து வருகின்றனர். பலருக்கும் குல தெய்வமாக இருப்பது சாஸ்தா மற்றும் அய்யனார்தான். அதை விட பூலோக தெய்வ சக்திகளுக்கு தலைவனாகவும், அவர்களை வழிப்படுத்தி, சாந்தப்படுத்தி, நெறிப்படுத்தி மக்களை காக்கும் பொருட்டு வழிவகை செய்யும், ஆசானாக இருப்பதும் மஹா சாஸ்தாவும், அய்யனாரும் தான்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment