Friday, 29 May 2020

மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள்! திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் படிக்கலாம். பிற்காலத்தில் உதவும்.!!

மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள் மட்டும் தான், இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மனைவி ஸ்தானத்தை அடையும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே வர கூடிய பிரச்சனைகளுக்கு இது தான் காரணமாக இருக்க முடியும் என்று ஆணித்தனமாக சொல்லலாம். அப்படிப்பட்ட சில காரணங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவில் குறிப்பிட போகும் குறிப்புகளை பின்பற்றினாலே போதும். குடும்பத்தில் நிம்மதி கெட்டு போக வாய்ப்பே இல்லை. இப்ப, நீங்க படிக்கப் போற குறிப்புகள் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்! ஆனால், யாரும் பின்பற்றுவதில்லை. நீங்கள் பின்பற்றுகிறீர்களா? பார்க்கலாம்!

காலையில் எழுந்தவுடன், உங்களது கணவரை, நீங்கள் எழுப்பும் பழக்கம் இருந்தால், முதலில் நீங்கள் முகம் கழுவி, பொட்டு வைத்து, தலைசீவி அதன்பின்பு கணவரின் முன் போய் நிற்க வேண்டும். அதன்பின்பு கணவரை எழுப்புவது மிகவும் நல்லது.

அடுத்ததாக கணவரின் வருமானத்திற்கு தகுந்த செலவை மனைவிமார்கள் செய்ய வேண்டும். எந்த வீட்டில் கணவரின் சம்பாத்தியத்தை விட, அதிகமாக செலவு செய்யும், குறிப்பாக ஆடம்பர செலவு செய்யும், மனைவிமார்கள் இருக்கின்றார்களோ! அந்த வீட்டில் நிச்சயம் நிம்மதி இருக்காது. வீட்டின் குடும்பத்தலைவி பொறுப்பில் இருக்கும் நீங்கள், உங்களது கணவரை கடன் வாங்கச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அழுத்தம் கொடுக்கவே கூடாது. வருமானத்திற்கு மீறிய செலவை வீட்டுப் பெண்கள் செய்யக்கூடாது.

உங்களது கணவர் கோபமாக இருக்கும் சமயத்தில் எந்தப் பிரச்சனையை பற்றியும் விவாதம் செய்ய வேண்டாம். குறிப்பாக கணவரின் தாய் தந்தை, சொந்த பந்தத்தைப் பற்றி எந்தக் குறையையும் கூறி விடக்கூடாது. அதேசமயம், பெண்கள் சதாகாலமும் பிறந்த வீட்டின் பெருமைகளை சொல்லி, புகுந்த வீட்டை மட்டம் தட்ட கூடாது. பிரச்சனைதான் வரும். பூகம்பம் கூட வர வாய்ப்பு உள்ளது. என்ன செய்வது? மனைவிமார்களே! விட்டுக் கொடுப்பதால், என்றும் நீங்கள் கெட்டுப் போவதில்லை.

உங்கள் கணவருக்கு பிடிக்காதவர்களிடம் நீங்கள், பழக கூடாது. சிலரிடம் பேசுவது, உங்களுடைய கணவருக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை தவிர்த்து விடுங்கள். சில கணவன்மார்களுக்கு அக்கம் பக்கம் வீட்டாருடன் பேசுவது கூட பிடிக்காது. பரவாயில்லை! அனுசரித்து அதை தவிர்த்துக் கொள்வது தான் மனைவிக்கு நல்லது.

கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வராமல் கட்டாயம் இருக்காது. பிரச்சனை வரும். ஆனால், முதலில், யார் பேசுவது என்ற ஈகோ பிரச்சினையும் வரும். கணவன் தனியாக இருக்கும் சமயத்தில் அவர் மனதுக்குள்,  மனைவியிடம் கோவப்பட்டு சண்டை போடுவதற்காக, ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டிருப்பார். மனைவி தனியாக இருக்கும் போது, நடந்ததை நினைத்து மனதிற்குள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள். புரிகிறதா? ‘கணவர் மனைவிகிட்ட மன்னிப்பு கேட்கமாட்டார். ஆனா, மனசுக்குள்ள அவர் பண்ணது தப்புன்னு அவருக்கு புரியும். மனைவிகிட்ட, மனசுக்குள்ளே மன்னிப்பு கேட்டுபாரு! வெளியே செல்ல மாட்டாரு!’ அந்த மனைவியும் இப்படித்தான் இருப்பாங்க. இதில் ஒரே ஒரு முறை இரண்டு பேரும் நேருக்கு நேர் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் பிரச்சினையே கிடையாது.

“கணவன், மனைவியிடத்தில் கௌரவத்தை பார்க்கக்கூடாது. மனைவி, கணவரிடத்தில் கவுரவம் பார்க்கக்கூடாது. இருவரும் வேறு வேறு இல்லை என்பதை உணர வேண்டும்.” இந்த கணவன்மார்கள், அவங்களோட பாஸ், கஸ்டமர்ஸ் இப்படி யார் திட்டினாலும் தாங்குகிறாங்க! மனைவி திட்டினா மட்டும் கோபப்பட்றாங்க! அதுதான் ஏன்னு தெரியல.

கணவரைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளி நபரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அவருடைய குணாதிசயம், நிறைகள், குறைகள் இப்படி என்று எதையுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். மூன்றாவது நபர்களிடம், உங்களுடைய கணவரைப் பற்றிய பேச்சுகளை அனாவசியமாக பேசும் சமயத்தில் ஒரு விதமான தோஷத்தை உண்டாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மூன்றாவது நபரிடம் உங்களது கணவரைப்பற்றி சொல்லுகிறீர்கள். ‘அந்த மூன்றாவது நபருடைய மனதில், உங்களது கணவரைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகளை நினைக்க ஆரம்பித்து விட்டால், அந்த சிந்தனை தோஷமாக மாறி, உங்களையும் உங்கள் வீட்டையும், உங்கள் கணவரையும் தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது’. அதாவது, வெளியாட்களிடம் உங்கள் கணவரைப் பற்றி நல்ல விதமாக சொன்னால் கண் திருஷ்டி தோஷம் தாக்கும். கெட்ட விதமாக சொன்னால், எதிர்மறை ஆற்றல் தாக்கும்.

நம்மில் பலபேர் இதை அனுபவப்பூர்வமாக அனுபவித்திருப்போம். நம்முடைய குடும்ப விஷயங்களை யார்கிட்டயாவது போய் சொல்லிட்டு வந்திருப்போம். அன்னைக்கு வீட்ல பெரிய பிரச்சனை, ரகளை நடக்கும்! உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?

சில பெண்கள் பெருமைக்காகவோ அல்லது தங்களுடைய கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவோ, தங்கள் வீட்டு பிரச்சினைகளையும், தங்கள் கணவர் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு அடுத்தவர்களிடம் குறை கூறும் பழக்கத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள்.

அடுத்ததாக விரதமிருக்கும் பெண்கள், இறைவழிபாட்டை மேற்கொள்ளும் பெண்கள், தங்களுடைய கணவனின் அனுமதியோடு தான் விரதம் இருக்க வேண்டுமே தவிர, கணவனுக்குத் தெரியாமல் விரதமிருப்பது கோவிலுக்கு செல்வது போன்ற பழக்கங்களை வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி கணவனுக்குத் தெரியாமல் விரதமிருந்து இறைவனை வழிபட்டாலும் அதற்கான பலன் கிடைக்காது என்றே சொல்லலாம்.

எது எப்படியாக இருந்தாலும், ஒரு வீட்டின் நிம்மதியானது, அந்த வீட்டின் குடும்பத் தலைவியிடம்தான் உள்ளது. கணவர் நல்லவராக இருந்தாலும், கெட்டவராக இருந்தாலும் அவரை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, மனைவியின் கையில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தனியாக இருந்தாலும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அதாவது பெண்கள் தனியாக இருந்தாலும், வாழ்ந்து சாதித்து விடுவார்கள். மனைவியை விட்டு பிரிந்திருக்கும் கணவனால், எக்காரணத்தைக் கொண்டும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே முடியாது. ஏனென்றால், மனைவி இல்லாத வாழ்க்கையை கணவன்மார்களுக்கு வாழவே தெரியாது. இதுதான் உண்மை.”

கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது. கோபத்தில் இருக்கும் கணவரிடமும் நாம் எதையும் சாதிக்க முடியாது. ஒரு மனைவி ஸ்தானத்தில் இருக்கக்கூடிய பெண், எவ்வளவு விஷயங்களை விட்டுக்கொடுத்து வாழ்கின்றாள்! என்பதை எண்ணி கணவன்மார்களும், மனைவியை அனுசரித்துச் செல்லவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment