Wednesday, 29 April 2020

அய்யனார் வரலாறு.!!

பூலோகத்தில் தாருகா வனம் என்னும் பகுதியில் தவ முனிவர்கள், தங்கள் பத்தினியருடன் வாழ்ந்து வந்தனர். இந்த முனிவர்களுக்கு தங்கள் தவத்தின் வலிமையே உயர்ந்தது, அபார சக்தி கொண்டது என்ற கர்வம் இருந்தது. அவர்களின் பத்தினிகளோ, கற்பு நெறியில் தங்களுக்கு இணை எவரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தார்கள். நாம் செய்யும் கர்மமே அதற்குண்டான பலனை தானே கொடுக்கும். அதற்கு இறைவன் என்ற ஒரு சக்தி தேவையில்லை என்று எண்ணிய அவர்கள் பரமனையோ, பரந்தாமனையோ வணங்க மறுத்து பெரும் ஆணவம் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். ஆணவத்தின் மிகுதியால் அறிவிழந்த முனிவர்களுக்கு நல்லறிவு புகட்ட, மகாதேவனும், மகாவிஷ்ணுவும் முடிவு செய்தனர். 

சுடலையின் மைந்தன்
சு.இளம்கலைமாறன்
ஆணழகனாக, வாலிப பருவம் கொண்டு, காண்பவரை கவர்ந்து இழுக்கும் அழகனாக, பிட்சாடனர் திருக்கோலத்தை சிவனார் கொண்டார். பொன்னிற மேனியாக, பேரழகுடன் மோஹினி அவதாரம் எடுத்தார் திருமால். இருவரும் தாருகாவனம் வந்தனர். தாருகாவனத்தில் மரங்கள் சூழ்ந்திருக்கும் சோலையில் அமைதியான சூழலில் புல்வெளிகள் மெத்தை விரிப்பாய் இருக்க, தெளிந்த பன்னீராய் ஓடும் நீரோடையின் அந்த மெல்லிய சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே பட்சிகளின் ஓசைகளும் அவ்வப்போது எழும்பியது. அத்தகைய அழகும், அமைதியும் நிறைந்த வனத்தில் இருந்த தவ முனிவர்களின் யாக சாலைக்குச் சென்றாள் மோஹினி. அவளது கால் கொலுசு ஓசைகேட்டு திரும்பிய முனிவர்கள் வியப்புற்றனர்.

பெண்ணினத்தின் பேரழகி இங்கே நடை பயில்கிறாளே என்றெண்ணி சகலத்தையும் மறந்தார்கள். யாகத்தை விட்டெழுந்தார்கள். மோஹினி, யாக சாலையினுள் நடைபயிலும் போதும், அதை விட்டு வெளியே வந்து அங்கிருந்த மலர்வனத்தில் உலா வரும் போதும் அவளை வியப்போடு பார்த்த வண்ணம், அழகினை ரசித்தபடி அந்த மோஹினியை முனிவர்கள் பின் தொடர்ந்தனர். இங்கே இப்படி இருக்க, முனிவர்களின் வசிப்பிடம் அமைந்த பகுதிக்கு கட்டிளம் காளையாக, கரம் தனில் வீணையை ஏந்தியபடி, தேவகானம் இசைத்தபடி, முனிவர்களின் இல்ல வாசலில் நின்று பிச்சை கேட்டார் உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானான சிவபெருமான் பிட்சாடனார் ரூபத்தில்! முனிவரின் பத்தினி வெளியே வந்து பார்த்தார்.

என்ன அழகு, இப்படி ஒரு இளைஞனை இதுவரை யான் கண்டிலேன், என வியந்தார். அடுத்தடுத்த இல்லங்களில் இருந்த ரிஷி பத்தினிகளிடம் எடுத்து இயம்பினாள். அவர்களும் அந்த ஆச்சரியத்தை காண விரைந்து வந்தனர். அவரவர் இல்ல வாயிலில் நின்ற ரிஷி பத்தினிகள் ஒன்றாக கூடி பிட்சாடனரின் தேவகானத்தை ரசித்து கேட்டபடி, அவரைப் பின் தொடர்ந்தனர். மன்மதனுக்கே தலைவனவன் அழகை கண்டு மயங்கி, ரிஷி மனைவிகள் தங்கள் மேலாடை நழுவி விழுவதுகூடத் தெரியாமல் வருவதை, எதிரே மோஹினியின் அழகில் மோகப்பித்து பிடித்து பின் தொடர்ந்து வந்த முனிவர்கள் கண்டு மனம் வெதும்பினர். அந்த காட்சியை கண்டதும், கோபம் பொங்கிட இயல்பு நிலைக்கு வந்தனர்.

ரிஷிகளாகிய நமது தவத்தை அழித்து, தமது மனைவிமார்களின் கற்பு கெடும் விதத்தில், அவர்களை மயக்கியது இந்த பிச்சைக்காரன்தான். இவன் சதி வேலையின் காரணமாகத்தான் இந்த பெண்ணும் நம்மை மயக்க வந்திருக்கிறாள் என்று எண்ணிய அவர்கள் பிட்சாடனரை நோக்கி, “யேய் பிச்சைக்காரனே, உனக்கு என்ன தைரியம் இருந்தால், ரிஷிகள் நிறைந்திருக்கும் இந்த வனத்திற்குள் வந்து எங்கள் பத்தினிகளை தேவகானம் இசைத்து மயக்கியிருப்பாய், எங்கள் கற்பு நெறி வாழ்வில் மாசு ஏற்பட காரணமாய் இருந்திருப்பாய்! உன்னை சும்மா  விடப்போவதில்லை’’ என்று சினம் கொண்டு பிட்சாடனருக்கு எதிராக வேள்வி ஒன்றை நடத்தினர். அதன் மூலம் பல ஆயுதங்களை உருவாக்கி பிட்சாடனர் மீது ஏவினர்.

அந்த ஆயதங்களை தடுத்து தகர்த்தெறிந்தார் பிட்சாடனார். அடுத்து புலியை ஏவினர் ரிஷிகள். அதை மடக்கி, அடக்கி, ஆயுளை முடக்கி அதன் தோலை தனது ஆடையாக அணிந்து கொண்டார் சிவன். தொடர்ந்து முனிவர்களால் அனுப்பப்பட்ட மழுவையும், மானையும் தனக்கு ஆயுதங்களாக தன் கைகளில் ஏந்திக்கொண்டார். பின்னர் கொடும் பாம்புகளை ஏவினர் ரிஷிகள். நஞ்சைக் உமிழ்ந்தபடி வந்த பாம்புகளை தன் உடலில் ஆபரணமாக்கி அணிந்து கொண்டார் நாகாபரணனார் சிவபெருமான். கடைசியாக முனிவர்களால் அனுப்பப்பட்ட அக்னியையும், டமருகத்தையும் தனது கைகளில் வாங்கிக்கொண்டார் பிட்சாடனார். தங்கள் முயற்சிகள் யாவும் பலனற்றுப் போனதைக் கண்ட முனிவர்கள் தலை குனிந்து நின்றார்கள்.

மேலும் அவர்களை சோதிக்க வேண்டாம் என்று எண்ணிய ஈசன் தனது விஸ்வரூபத்தை காட்டியருளினார். சிவனாரின் தரிசனம் கண்டு, சிந்தை தெளிந்த ரிஷிகள் தங்கள் அறியாது நிகழ்த்திய தவறினை மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினார்கள். ‘‘கயிலையில் உறையும் கங்காளனே! ஆதி அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதியே! தங்களை யாரென்று அறியாமல் தவறிழைத்து விட்டோம். எங்களை மன்னித்து தாங்கள் அருள வேண்டும்.’’ என்று இறைஞ்சினார்கள். ஈஸ்வரன் பேசலானார்: “ரிஷிகளே! நீங்கள் கடவுளை விட கர்மா தான் பெரிது என்று எண்ண முற்பட்டதனால், கர்மாவை விட, எல்லாவற்றையும் விட கடவுள் எனும் ஆத்மா, சக்தி மிகப்பெரியது என்ற உண்மையை உணர்த்தவே நாம் இந்த நாடகமாடினோம்.

நீங்கள் அறியாது செய்த தவறினை மன்னித்தோம். இனி வேத நெறி வழுவாமல் எம்மை ஆராதித்து நற்கதியடையுங்கள்,’’ என்று  வரமளித்து அவ்விடம் விட்டு ஈஸ்வரன் அகன்றார்.
சுடலையின் மைந்தன்
சு.இளம்கலைமாறன்
தாருகா வனம் விட்டு வெளியேறிய பின் மோஹினியாக இருந்த மகாவிஷ்ணு, சிவனாரை நோக்கி, “சுவாமி, கற்பு நெறியில் கர்வம் கொண்ட முனி பத்தினிகளைக் கூட மயக்கி விடும்படி அமைந்த அந்த பிட்சாடனர் கோலத்தை நான் மீண்டும் காண விரும்பு கிறேன். எனவே அக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று வேண்டினாள். சிவனாரும் அந்த அழகு தேக வடிவான பிட்சாடனர் கோலம் கொண்டார். ஈசனின் கோலம் கண்டு, அந்த அழகில் மயங்கிய மோஹினி, “அழகேசனே! உங்களின் பேரழகு என்னை மயக்குகிறது.

நான் உங்களின் ஆதிபரமேஸ்வரியான அந்த சக்தியின் ஒரு வடிவம் தானே, நீங்கள் ஹரன், நான் உங்களுக்கு இணையான ஹரி,’’ என்று கூறி தாவி அணைத்தாள். இரு சக்திகளும் சங்கமம் ஆகின. பெண் வடிவில் இருந்த அய்யனும், அரனாரும் இணைந்திருக்க அய்யனார் அவதரித்தார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment