அழகாபுத்தூர் - தஞ்சாவூர்
அழகிய ஊர்களும், அற்புதக் கோயில்களும், பரந்த வயல்களும், பசுமை நிறைந்த மரங்களும், குளிர்ந்த சோலைகளும் சூழ்ந்த சோழ தேசத்தின் அரிசொல் நதியென்னும் அரசலாற்றின் கரையில் அமைந்த அழகான ஊர்தான் அழகாபுத்தூர். முன்பு, புத்தூர், திருப்புத்தூர், செருவிலிபுத்தூர், அரிசிற்கரைபுத்தூர் போன்ற பெயர்களைக் கொண்ட இப்பதி, மூவரால் தேவாரம் பாடப்பெற்ற பெருமையுடையது. காவிரித் தென்கரையின் 66வது திருத்தலமிது. சங்கு - சக்கரம் ஏந்திய கந்தன் இங்கு தனது துணைவியரோடு, கல்யாண கோலத்தில் பரிகார நாயகனாக அருள்புரிவது அற்புதம். உண்மையானந்த முனிவரும், வாணாசுரனும் வழிபட்டு, பேறுகள் பெற்ற உன்னதத் தலமிது.
இத்தலத்தில் வாழ்ந்த புகழ்த்துணை என்னும் சிவனடியார் நித்தமும், நியமப்படி இத்தல ஈசனைப் பூஜித்து வந்தார். ஒரு சமயம் இவ்வூரைப் பஞ்சம் பிடித்து வாட்டியது. உணவு கிடைக்காமல் வருந்தி, மெலிந்தாலும், தொடர்ந்து சிவனது பூஜையை விடாது செய்தார். ஒருதினம் பசியால் மிகவும் வாடிய அவர், அரசலாற்றில் இருந்து குடத்தில் நீரெடுத்து வந்து, சிவனார் மீது ஊற்றியபோது, மயங்கி, நீர்க்குடத்தை சிவலிங்கத்தின் மீது போட்டுவிட்டு விழுந்தார். இவரது கனவில் தோன்றிய சிவனார், ‘‘நீ அறியாமல் செய்த பிழைக்கு வருந்த வேண்டாம். பஞ்சம் நீங்கும் வரை நாள்தோறும் உனக்கு படிச்செலவுக்கு (தினசரி செலவுக்கு) பொற்காசு ஒன்று தருகிறேன்,’’ எனக்கூறி மறைந்தார். கண்விழித்த அடியார், அரனார் அருளுக்கு பெருநன்றி கூறி, இல்லம் திரும்பினார்.
சிவபெருமான் தன் ஆணைப்படியே நித்தமும் ஒரு பொற்காசினை அடியார் வாசற்படி மீது வைத்தருளினார். அது கொண்டு பஞ்சம் தவிர்த்து பரமனை பக்தியோடு பூஜை செய்து வந்தார். ஈசன் மீது நீங்காப்பற்று கொண்ட நாயனார், இறுதியில் சிவகதி பெற்று பிறவாநிலை அடைந்தார்.‘‘பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்,’’ எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது உயர்ந்த சிவநேசத்தை தனது திருத்தொண்டர் தொகையில் அழகுற அடிக்கோடிட்டு காட்டுகின்றார். வருடந்தோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று புகழ்த்துணை நாயனாரின் குருபூஜை, சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. சேக்கிழாரும் இவரது புகழை செழிப்புறக் கூறி, இவரது பெரும்பக்தியை உலகிற்கு பறை சாற்றுகின்றார். சம்பந்தர் இப்பதியை ‘புத்தூர்’ என்றே பகர்கின்றார்.
புங்க மரங்கள் சூழ்ந்த இந்தபதி கொன்றையும், கோங்கும் நிறைந்ததென்றும், புகழ்த்துணைக்கு நித்தமும் காசு கொடுத்தருளிய இறைவர் குடிகொள்ளும் பதியென்றும், அந்தணர்கள் நாள்தோறும் நாவால் புகழ்ந்து, பூவால் பூஜிக்கும் திருத்தலம் என்றும் பலவாறு இப்பதியினை சிறப்பிக்கின்றார். அப்பர், இப்பதி பெருமான், தன்னைச் சரணடைந்தோர்க்கு மகிழ்ச்சியும், சக்தியும் அருளுபவரென்றும், புத்தூர் புனிதரென்றும், நிவேதனப் பொருட்களை ஏற்று மகிழ்பவரென்றும் நெகிழ்ந்துப் பாடிப் பரவசப்படுகின்றார். சுந்தரர் புகழ்த்துணை நாயனாரின் சரிதையினை முழுமையாக பாடியதோ டு, பிரம்மனின் சிரம் கொய்தது குறித்தும், அந்தகாசுரனை அழித்தது பற்றியும், திருமால் தன் கண்மலரினைச் சாத்தி வழிபட, சிவனார் சுதர்சனச் சக்கரத்தை அளித்தாரென்றும் தெரிவிக்கின்றார்.
மயில் தோகை, ஏலக்காய், அகில் கட்டைகள் ஆகியவற்றை வாரிக் கொண்டு வரும் அரிசொல் ஆறு என்று நதியின் பெருமையும், வாழை, கரும்பு, பாக்கு, மூங்கில் போன்றவை இங்கே அதிகம் விளைவன என பதியின் வளத்தையும் செவ்வனே பாடிப் பகர்கின்றார். மேலும், இப்பதிகத்தைப் பாடவோ அல்லது கேட்கவோ சிவனருள் பரிபூரணமாய் கிட்டுமென ஆணித்தரமாக பகர்கின்றார் சுந்தரர்.தார் சாலைக்குச் சற்று தள்ளி அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்வாமி சந்நதி மேற்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் அமையப்பெற்றுள்ளன. ஆதியில் கோட்செங்கட்சோழன் எழுப்பிய மாடக் கோயில்களுள் ஒன்றாக இருந்தது. பின்னர் சிதைவுற்றது. அதன்பின் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கருவறையுள் கண்கவர் லிங்க உருவில் காட்சியளிக்கின்றார் சொர்ணபுரீஸ்வரர். சுயம்புத் திருமேனி! புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு அருளியதால் படிக்காசளித்த பெருமான் எனவும் போற்றப் பெறுகின்றார். இவரது தலைப்பகுதியில் அடிபட்டு, சில்லு உடைந்திருப்பதை காண்கின்றோம். புகழ்த்துணை நாயனாரின் குடம் விழுந்து ஏற்பட்ட வடு!தென்முகம் கொண்டிருக்கும் அம்பிகை அழகாம்பிகையென்றும், சௌந்தரநாயகியென்றும் ஆராதிக்கப்படுகின்றாள். சுந்தரர் இந்த அம்பிகையை ‘மாழையொன்கண்ணி’ என்று போற்றுகின்றார்.ஆலய வலம் வருகையில் முறையே அமையப்பெற்ற கோஷ்ட தெய்வங்களைக் கண்ணுற்று, கிழக்குப் புறத்தில் வீற்றருளும் துணையாளோடு கூடிய புகழ்த்துணை நாயனாரையும் கண்டு ஆனந்தம் அடைகிறோம். மேற்கு திக்கில் ராஜகோபுர வல - இடப்புறங்களில் கணபதி மற்றும் கஜலட்சுமிக்கு தனித்தனிச் சந்நதிகள் உள்ளன. தல விருட்சமாக வில்வமரமும், தீர்த்தமாக அரசலாறு மற்றும் அமிர்த புஷ்கரணியும் திகழ்கின்றன.
இப்பதியின் பிரதான நாயகனான ஆறுமுகப் பெருமான், தென்கிழக்கு மூலையான அக்னி மூலையில், அக்னி வடிவமாக, இந்திரமயூர வாகனத்தின் மேல் அமர்ந்து அருளாட்சி புரிகின்றார். இவருக்கு இடப்புறம் தெய்வானையும், வலப்புறம் வள்ளியும் வீற்றிருக்கின்றனர். கல்யாண திருக்கோலம். மேல் வலது கரத்தில் சக்கரமும், மேல் இடது கரத்தில் சங்கும் ஏந்தி, புதுமையாக தரிசனம் தருகின்றார். இதுபோன்ற அமைப்பு மிகவும் அரிது. இந்த அமைப்பினை ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் விரிவுற விளக்குகின்றது. அருணகிரிநாதரும் இப்பெருமான் புகழ் பாடியுள்ளார். இவ்வாலயத்தில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அன்பர்கள் ரூபாய் நோட்டுகளை சொர்ணபுரீசரிடம் வைத்து, பூஜை செய்து, அதை எடுத்து சென்று வீட்டு பூஜையறையில் வைக்கின்றனர். அது அவர்களது வறுமையை போக்கி, செல்வ செழிப்பினை உண்டாக்குவதாக நம்பிக்கை. அரசலாற்றில் குளித்து, இத்தல பெருமானை வழிபட முன்ஜென்ம கர்ம வினைகளிலிருந்து விமோசனம் பெறலாம் என்பதும் ஒரு நம்பிக்கை.இரண்டு மாலைகள் வாங்கி வந்து, கல்யாண சண்முகருக்கு சாத்தி, அர்ச்சனை செய்து, அம்மாலைகளில் ஒன்றை திரும்பப் பெற்று, கழுத்தில் அணிந்துகொண்டு 11 முறை அவரை வலம் வந்து, மனமுருக பிரார்த்தித்தால் திருமணம் விரைவில் நடக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். 12 அமாவாசைகள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி கந்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிட்டுகிறது. நினைத்த காரியம் நிறைவேற ஆறுமுகருக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். பில்லி, சூனியம், ஏவல் மற்றும் முன்ஜென்ம பாபங்களால் கஷ்டப்படுவோர் இங்கு சண்முகருக்கு கற்கண்டும், துவரையும் படைத்து, உரிய பலன் பெறுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அழகாபுத்தூர் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் இத்தலம் உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment