ராஜபாளையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது தேவதானம். இங்கு பழமையான நச்சாடை தவிர்த்தருளிய சிவபெருமான் கோயில் உள்ளது. தவமிருந்த நாயகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலில் நடராஜர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், பெருமாள், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சப்தகன்னியர், நந்தி சிலைகள் மற்றும் நவக்கிரக சன்னதி உள்ளது. கோயில் முன்பு சிவகங்கை தீர்த்த குளம் உள்ளது. கோயில் அருகிலுள்ள குன்றின் மீது கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என்று 3 சிவன் சன்னதிகள் உள்ளன. பிரம்மா தவக் கோலத்தில் வீற்றிருப்பது கோயிலின் சிறப்பாகும்.
தல வரலாறு
பண்டைய காலத்தில் சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. விக்கிரமசோழன், வீரபாகு பாண்டிய மன்னன் மீது பலமுறை போர் தொடுத்தும், வெற்றி பெற முடியவில்லை. எனவே வஞ்சகத்தால் பாண்டியனை கொல்ல சோழன் முடிவெடுத்தான். இதையடுத்து நட்பு கொள்ள விரும்புவதாக கூறி, நச்சு கலந்த ஆடையை சேவகன் மூலம், பாண்டியனுக்கு சோழன் அனுப்பினான். அந்த ஆடையை அணிபவர் எரிந்து சாம்பலாகி விடுவார். சிவபெருமான் அருளால் சோழனின் சதித் திட்டத்தையறிந்த பாண்டியன், தனக்கு பரிசாக வந்த நச்சு ஆடையை, அதை கொண்டு வந்த சேவகனுக்கே அணிவித்தான். இதனால் அந்த சேவகன் எரிந்து சாம்பலானான். இதையடுத்து தன்னை காப்பாற்றிய சிவபெருமானுக்கு, பாண்டியன் அப்பகுதியில் கோயில் எழுப்பினான். நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று மூலவருக்கு பெயர் சூட்டினான்.
இந்த நிகழ்வுக்கு பின்னர் சோழனின் பார்வை பறி போனது. தவறை உணர்ந்த அவன், தேவதானம் வந்து பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டதுடன், தனக்கு பார்வை கிடைக்க அருளுமாறு சிவபெருமானை வேண்டி வழிபட்டான். இதனால் மகிழ்ந்த சிவபெருமான், சோழனின் ஒரு கண்ணுக்கு மட்டும், பார்வையை வழங்கினார். மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டி சோழன் உருக்கத்துடன் சிவபெருமானிடம் வேண்டினான். ‘‘இந்த ஊரின் அருகில், எனக்கு மேலும் ஒரு கோயிலை எழுப்பினால், உனக்கு பார்வை கிடைக்கும்’’ என்று ஒரு அசரீரி ஒலித்தது. இதன்படி சேத்தூர் என்ற பகுதியில், சிவபெமானுக்கு சோழன் கோயில் கட்டினான். இதனால் சோழனுக்கு பார்வை கிடைத்தது என்பது புராணம்.
குழந்தை பேறு வேண்டும் பெண்கள், கோயில் வளாகத்திலுள்ள நாகலிங்க மரத்திலுள்ள பூக்களை பறித்து மூலவருக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின்னர் அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று, பசும்பால் அல்லது மோரில் கலந்து 3 நாட்கள் பருகுகின்றனர். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், குன்றில் உள்ள கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் ஆகியோரை வழிபட்டால் கண் பார்வை குறைபாடு நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். வைகாசி பிரமோத்ஸவம், விசாக தேரோட்டம், மாசி மகத்தன்று தபசு, தெப்ப உற்சவம், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். கோயில் நடை காலை 6.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரையிலும் திறந்திருக்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment