Monday, 1 October 2018

சித்திரையில் சூரியன் வணங்கும் தான்தோன்றீஸ்வரர் கோயில்.!!

சேலத்தை அடுத்த வாழப்பாடி பேளூரில் இருக்கிறது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயில். 97 அடி உயர ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் கோயிலின் முன்பகுதியில்  பதினாறு கால் மண்டபம் அசரவைக்கிறது. இங்கு யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத் துடன் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னதிகளும் உள்ளன. 

வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருப்பதும், சனீஸ்வரர் காக்கை வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவதும்  சிறப்பம்சமாகும். முன்பொரு காலத்தில், இந்த பகுதியில் மிளகு வியாபாரி ஒருவர் வசித்தார். அவரை மக்கள் மிளகு செட்டியார் என்று அழைத்தனர். அவர் தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் களைப்பு காரணமாக, அடர்ந்த காட்டுப்பகுதியில் தங்கினார். அப்போது சமையல் செய்ய, சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது. உன் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டது. 

இதனால் பயந்துபோனவர் ‘என்னிடம் உளுந்துதான் இருக்கிறது’ என்று கூறியபடி, அங்கிருந்து அவசரமாக ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார். காரணம் மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது. பதறிப்போன வியாபாரி அசரீரி ஒலித்த இடத்திற்கு சென்று இறைவனை வேண்டினார்.  அப்போது, ‘நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து, உளுந்தின் மீது தூவு என்று குரல் ஒலித்தது. அதன்படியே செய்ய, உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதையடுத்து அந்த வியாபாரி தான் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை பார்த்தபோது, அது சுயம்புலிங்கம் என தெரியவந்தது. இப்படி சுயம்புவாக தோன்றிய சிவனுக்கு மிளகு செட்டியார் கட்டியதே இந்த கோயில் என்று தலவரலாறு கூறுகிறது. 

மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது வியப்புக்குரியது. அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னதிக்கு இடதுபுறம் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருமண பாக்கியம் தரும் இரட்டை விநாயகர்கள்

இந்த கோயிலில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இவரை கல்யாண விநாயகர்கள் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தியின்போது இந்த இரட்டை விநாயகரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்ளெருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த விநாயகர் சன்னதி முன்பாக திருமணங்கள் நடைபெறும். இந்த தலத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசீர்வதிப்பதால், இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது என்பதும் வியப்புக்குரிய தகவல்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment