புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆத்மநாதர் சுவாமி கோயில். மூலவர் ஆத்மநாதர். தாயார் யோகாம்பாள். தல விருட்சம் குருந்த மரம். சிவன், குருவாக இருந்து, மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலம் என்பதால் இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
கோயில் வரலாறு:
மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். இவர் மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு (ஆவுடையார்கோவிலுக்கு) வந்தார். அப்போது இங்குசிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க, அங்கு சென்றபோது ஞானகுருநாதர் ஒருவர்வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக்கொள்ள, குருவும் ஒப்புக் கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டதும், சிவபெருமான்தான் குருவாக வந்தது என தெரிந்து கொண்டார். உள்ளம் உருகி பாடினார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் ஆத்மநாதர் சுவாமி கோயிலை கட்டினார். தொடர்ந்து சிவதொண்டில் ஈடுபட்டார். குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார். சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) அவரே ஓட்டிக்கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டித்த போது, வைகையில் வெள்ளம் வந்தது.
கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடல் நிகழ காரணமானது ஆவுடையார் கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் என புராண வரலாறு கூறுகிறது. இங்கு ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்கவடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் உள்ளார். அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம்இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி செய்யப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு:
ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரக தூண்கள் உள்ளது. முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலைஅமைப்பில் இக்கோயில் உள்ளது. சத் அம்சமாக கோயில் மகா மண்டபமும், சித் அம்சமாக அர்த்த மண்டபமும், ஆனந்த மயமாக கருவறையும் உள்ளது சிறப்பு. இத்தலத்தில் டுண்டி விநாயகர் சிற்ப உருவம், உடும்பும் குரங்கும், கற்சங்கிலிகள் சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது, இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள் 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள், பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள், 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள், நடனக்கலை முத்திரை பேதங்கள், சப்தஸ்வரக் கற்தூண்கள், கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல் ஆகிய தனிசிறப்பு பெற்றவையாகும்.
இங்கு குருந்தமரத்தை சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்’ என்றுபெயர் ஏற்பட்டது. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைலஅபிஷேகம் நடப்பது விசேஷம். கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் உலகைப் படைத்து, காத்து, அழித்து நடத்தும் மும்மூர்த்திகளை உணர்த்துவதற்காக, கருவறையில் கண்ணாடிச் சட்டமிட்ட பெட்டியில் வெள்ளை, சிவப்பு, பச்சை நிற மூன்று விளக்குகளை ஏற்றிவைத்துள்ளனர். சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment