Wednesday, 4 July 2018

நீண்ட ஆயுளைப் பெற அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடவூர்..!!!

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 47-வது தலமாக இருப்பது திருக்கடவூர். யம பயம் நீக்கும் தலங்கள் பலவற்றுள் சிறப்பானதாகக் கருதப்படுவது திருக்கடவூர்.

இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர்

இறைவி பெயர்: அபிராமி

இத்தலத்துக்கு, சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகங்கள் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என ஐந்து பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது??

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கடவூர் இருக்கிறது. சீர்காழி - தரங்கம்பாடி சாலை வழியில் சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இது ஒரு அட்டவீரட்டானத் தலம். திருக்கடவூர் மயானம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
திருக்கடவூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் - 609 311.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் யம பயம் நீக்கும் தலங்கள் திருக்கடவூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடவூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

புராண வரலாறு

பிரம்மா, ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்துக்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து, திருக்கடவூரில் முளைவிடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது.

பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்குக் கொடுக்க விரும்பாமல், அதை குடத்தில் (கடம்) எடுத்துக்கொண்டு செல்லும்போது, வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் குடத்தை இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்தபோது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் ஆதலால், இத்தலம் திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்தக் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால், இத்தல இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இங்குள்ள அம்பாள் வழிபாட்டில் தன்னை மறந்து, அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்துக்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி, முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும். சப்த கன்னிகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

இத்தலத்தில் அவதரித்த குங்கிலியக்கலய நாயனார் வறுமையில் அவதியுற்றபோதும், தம் மனைவியின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்து 63 நாயன்மார்களில் ஒருவராகும் பேறு பெற்றார். காரி நாயனார் அவதரித்து அரசனிடம் சென்று பொருள் பெற்று, பல திருப்பணிகள் புரிந்தும் வீடுபேறு அடைந்த தலமும் இதுவே. சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் இத்தலத்துக்கு ஒருசேர எழுந்தருளி, இத்தல இறைவனை வழிபட்டு குங்கிலியக் கலைய நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த பெருமையும் இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும்.

No comments:

Post a Comment