பக்தனின் சத்தியத்திற்க்குக் கட்டுப்பட்ட மாடன்
திருநெல்வேலியிலிருந்து முக்கூடல் வழியாக அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ளது. ரெங்கசமுத்திரம். இங்குள்ள அவுசபுரி குளக்கரையில் வீற்றிருக்கும் மாடன், மடையடிசாமி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவர் பக்தனின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு குளத்தின் கரையில் காவலாய் இருக்கிறார். அவுசபுரி குளத்தை நம்பி சாட்டுப்பத்து பகுதியில் பல ஏக்கர் பரப்பளவு நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான நிலங்கள் ஊரில் பெரும் நிலக்கிழாராக இருந்த நாரம்பூலிங்க ஐயருக்கு சொந்தமானது. அப்பகுதியில் பெரிய ஆன்மிகவாதியாக திகழ்ந்த இவர் மந்திரங்களோடு, மாந்திரீகமும் கற்றிருந்தார். மேலும், கண் திருஷ்டி நீங்க, வியாபாரம் செழிக்க, தொழிலில் அபிவிருத்தி பெற, விவசாயம் செழித்தோங்க, பிணி, பீடை அகல பரிகாரங்களும் பூஜை, வழிபாடுகளும் செய்து வந்தார்.
பெரும் நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள் மட்டுமன்றி, நெல்லை ஜில்லா மற்றும் மலையாள நாட்டில் வாழ்ந்த தொழிலதிபர்களும் இவருக்கு நெருக்கம். இவருக்கு தோட்டம் மற்றும் வயல் வேலைகளை அப்பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் செய்து வந்தான். முத்துக்கருப்பன் ஊர்க்காடு சுடலைமாடசுவாமி மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். அசைவப் பிரியனான இவன் வெள்ளிக்கிழமையானால் பச்சரிசி சாதம் மட்டுமே உட்கொண்டு சுடலைமாடனை மனதில் நினைத்து பயபக்தியோடு, மாலையில் கோயிலுக்கு சென்று அய்யனை வணங்கிய பின்னரே அடுத்த வேளை உணவை உண்பான். எப்போதும் கோயில் திருநீறு அணிந்துதான் தனது பணிகளைச் செய்வான். அக்கம் பக்கம் யார், எந்த வேலை கொடுத்தாலும் தட்டாமல் செய்வான்.
அதனால் அவரது தந்தை முத்துரெங்கன் இவனை வேலைக்கு அனுப்ப எண்ணி, ஐயரிடம் சென்று, “பெத்தவங்களுக்கு ஒரு வேலையும் செய்யமாட்டான். ஊரில யாரு, எந்த வேலை செய்ய சொன்னாலும் சும்மா செஞ்சிட்டு வாரான். ஊருக்கு மாரடிக்கத்தான் இவன் லாயக்கு, அதனால சாமி, நீங்கதான் இவனுக்கு புத்திமதிக சொல்லி, நல்ல ஜோலிய கொடுக்கணும்,” என்று கூறி, நாரலிங்க ஐயரிடம், முத்துகருப்பனை வேலைக்கு சேர்த்து விட்டார். ஐப்பசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, அடை மழைக்காலம். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மாலை நேரம் சாப்பாடு முடித்துக்கொண்டு இரவு தோட்டக் காவலுக்கு புறப்பட தயாரானான் முத்துக்கருப்பன். அப்போது அவன் தாயார், “மகராசா, நல்ல மழை பெய்யுதே, இன்னைக்கு காவலுக்கு போவாண்டாம் ராசா” என்றாள்.
“ஆத்தா, நம்ம சுடலை, என் கூட இருக்கிறார், நீ ஏன் ஆத்தா கவலைப்படுறே” என்று தாயாருக்கு தைரியம் சொன்னான் முத்துக்கருப்பன். அவனது தந்தை, “ஏலே, ஐயா கருப்பு, அந்த சாக்குபைய(கோணி) எடுத்து தலையில போட்டு போப்பா” என்றார். “சரி, சரி நான் போறேன். நீ கதவ சாத்திக்க” “பயபுள்ள வரக்கெத்து கெட்டால போறேன்னு சொல்லிட்டு போறான். போயிட்டு வாரேன்னு சொல்லாம” என்று முணுமுணுத்துக்கொண்டார் முத்து ரெங்கன். முத்துக்கருப்பன் வயல்காடு பக்கம் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். பலத்த மழையோடு மின்னல் தொடர்ந்து மின்னி கொண்டிருக்க, இடியும் அதிகமாக இருந்தது. ‘சுடலையாண்டவா காப்பாத்து, சுடலையாண்டவா காப்பாத்து’ என்று கூறிக்கொண்டே முத்துக் கருப்பன் அவுசபுரி குளக்கரைக்கு வந்தான். குளத்தில் மழைநீர் வெள்ளமாகப் பொங்கி கொண்டிருந்தது. குளம் உடைந்து விடுமோ என்று கலங்கினான் முத்துக்கருப்பன். அப்போது பக்கத்து தோட்டத்துக்கு சொந்தக்காரரான மாயாண்டித் தேவர் அங்கு வந்தார். “என்னப்பா, முத்துக்கருப்பா, குளத்துக்கு ஒருபக்கத்துல வெட்டி விடு, இல்லைண்ணா மடையை திறந்து விடு, வெள்ள வரத்து அதிகமாக இருக்குதுப்பா” என்று கூறினார். உடனே முத்துக்கருப்பன், “ஐயா, நீங்க கொஞ்ச நேரம் இங்க இருப்பீங்களா, நான் போய் சாமிகிட்ட கேட்டுட்டு வந்திடுறேன்,” என்று சொல்ல, ‘‘சரி போயிட்டு வா’’ என்றார் அவர். “ஐயா, நீங்க பெரிய ஆளு; மழை அதிகமாகிட்டுன்னு போயிட்டீங்கண்ணா” என்று சந்தேகக் கேள்வி எழுப்பினான். ‘‘ஏலே, எனக்கு ஒத்த நாக்கு, ஒத்து சொல்லு, வாக்கு தவறமாட்டேன்ல, நீ உன் குலசாமிய நம்புறல்ல, அந்த சாமியே வந்திருக்கிறதா நினைச்சுக்கோ போயிட்டு வா,’’ என்று பதிலளித்தார் மாயாண்டிதேவர்.
ஐயரிடம் குளம் நிரம்பியதை தெரியப்படுத்த முத்துகருப்பன் சென்றான். ஐயர் வீட்டில் இல்லை, வீட்டின் முன்பு திண்ணையில் படுத்திருந்த வண்டிக்காரன், “முத்துக்கருப்பு, சாமி தெங்கரை தோட்டத்து வீட்டுல இருக்கிறாரு” என்றான். (தெங்கரை என்பது ஊருக்கு தெற்கு பக்கம் என்பதாகும்) தெங்கரை தோட்ட வீட்டிற்கு சென்றபோது சலவை தொழிலாளி ராக்கையன் நின்று கொண்டிருந்தான். நடு ராத்திரி, வெள்ளிக்கிழமை ராக்கையன் தோட்டத்து வீட்டுக்கு வந்தாலே ஏதாவது பெரியளவில் பூஜை இருக்கும். ‘‘ஏ, ராக்கு, இப்ப சாமிய பாக்கலாமா?’’ என்று கேட்டான். ‘‘நீரு, என்ன விசயமா, சாமிய பார்க்க வந்திருக்கீங்க?’’ என்று கேட்ட அவனிடம், குளத்து நிலவரத்தை எடுத்துக்கூறினான். அப்போது, “வெளிய என்ன சத்தம்” என்று குரல் கொடுத்தார் ஐயர். “சாமி, முத்துகருப்பு வந்திருக்கேன்” என்றான். உடனே உள்ளேஅழைத்தார் ஐயர்.
முத்துக்கருப்பு விவரம் சொன்னதும், “குளத்தை வெட்டிவிட்டா ஊருக்குள்ள பெருவெள்ளம் வந்திடும். மடையை தோண்டி விட்டாலும் நம்ம தோட்டத்து கிணத்துக்கு சுற்றுச்சுவர் இப்பதான் கட்டியிருக்கிறோம். அது இடிஞ்சு விழுந்திடும். சரி, இப்ப அங்க யாரு இருக்கிறாருண்ணு சொன்ன?” என்று ஐயர் கேட்டதும். “சாமி அது, பக்கத்து தோட்டக்காரர் மாயாண்டித்தேவர்” என்றான் முத்துக்கருப்பு. சட்டென்று நிமிர்ந்தார் ஐயர். மாயாண்டித்தேவர் வசதி மிக்கவர். இந்த நேரத்தில் அங்கு வர வாய்ப்பில்லை என்று கருதிய ஐயர் ‘முத்துக்கருப்பு பொய் சொல்றானோ? வந்தது யாராக இருக்கும்?’ என்று சந்தேகம் கொண்டார். உடனே வெற்றிலை எடுத்து மைபோட்டு பார்த்தார். குளக்கரையில் தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசை, அஞ்சுமணி வல்லயத்தோடும், மாயாண்டித்தேவர் ரூபத்தில் ஊர்க்காடு சுடலைமாடன் நின்று கொண்டிருந்தைக் கண்டார்.
உடனே முத்துக்கருப்பனிடம், ‘‘உன்கிட்ட மாயாண்டித்தேவர் என்ன சொன்னார்?’’ என்று கேட்டார். “நீ வரும்வரை நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று வாக்குறுதி தந்தார்” என்று முத்துகருப்பு கூறியதும். ஐயர் அருகில் இருந்த ராக்கையன், “அப்ப, நீ போகிறவரைக்கும் அவரு அங்க தான் இருப்பார். அப்படிதானா, சரி உள்ளே வா” என்று அழைத்த வேகத்தில் நாரம்பூலிங்க ஐயர் கண் அசைக்க, சாமிக்கண்ணு, முத்துக்கருப்பின் மூச்சை அடக்கினான். அன்றைய பெரிய அளவிலான பூஜை என்பது இதுதானோ என்று சிந்திக்கக்கூட இயலாதவனாக முத்துக்கருப்பு மரணத்தைத் தழுவினான். ஆனால், முத்துக்கருப்புக்கு கொடுத்த வாக்கின்படி, சத்தியம் தவறாமல் சுடலைமாடன் அவுசபுரி குளக்கரையில் காவலாய் நிற்கிறார்.
பல ஆண்டுகளை கடந்த பின்னும் இந்த குளம் உறுதியாக இருக்கிறது. 1992ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போதுகூட உடைந்ததில்லை என்கிறார்கள். தற்போது விளைநிலங்கள் குறைந்துள்ள நிலையில், குளம் கவனிப்பாரின்றி புதர் மண்டி குறைந்தளவு நீருடன் உள்ளது. கரையடி மாடசாமி கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் சிவனைந்த பெருமாள், பேச்சியம்மன், பிரம்மராட்சி, சங்கிலிபூதத்தார், தளவாய்மாடசுவாமி, பலவேசக்காரன், சின்னதம்பி ஆகியோர் நிலையம் கொண்டுள்ளனர். இவர்களின் எதிரே கருப்பனும், முண்டனும் உள்ளனர். முத்துக்கருப்பனுக்கும் இங்கே நிலையம் கொடுத்துள்ளனர். இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் கொடைவிழா நடைபெறுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment